சனி, 30 டிசம்பர், 2023

பிரேமலதா : ஆட்சியில் அமர வேண்டும்.. கேப்டன் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பிரேமலதா போட்ட சபதம்.. !

 tamil.asianetnews.com -  Raghupati R :  சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்த 26ம் தேதி நேற்று இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். பல பிரபலங்களும், மக்கள் கூட்டமும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் மதியம் 2.30 மணியளவில் ஊர்வலமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் வாகனத்தில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.


72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

பிரேமலதா விஜயகாந்த்

“தேமுதிக நிறுவனத் தலைவர், புரட்சி கலைஞர் கேப்டனின் இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்ல முறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்களும், பொதுமக்களும் வந்தனர்.

இடநெருக்கடி ஏற்பட்டது. எனவே, தமிழக அரசிடம் நேரடியாக பேசினோம். உடனடியாக தமிழக முதல்வர் ஸ்டாலின், தீவுத்திடலில் இடம் ஒதுக்கிக் கொடுத்து, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விஜயகாந்தின் இறுதிப் பயணத்துக்கு அனைத்து விதத்திலும் உதவி செய்து கொடுத்த தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, அமைச்சர்களுக்கும் முதலில் தேமுதிக சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

15 லட்சம் பேர்
சென்னை மாநகராட்சி ஆணையர், அமைச்சர் எ.வ.வேலு, பொதுப் ணித்துறை அதிகாரிகள், காவல் துறையினர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் எந்தவொரு தலைவருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பேறு இன்று நமது விஜயகாந்துக்கு கிடைத்திருக்கிறது. நமக்கு கிடைத்த புள்ளி விவரப்படி, இரண்டு நாட்களாக நடந்த விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள், 15 லட்சத்துக்கும் அதிகம் என்று கூறியுள்ளனர்.
இதுபோன்ற உணர்ச்சிவசப்பட்ட பாசமான கூட்டத்தை தமிழகம் முதல்முறையாக கண்டு இருக்கிறது. அதற்கு காரணம் விஜயகாந்த் செய்த தர்மமும், அவரது நல்ல எண்ணமும், இறுதிவரை மற்றவர்களுக்கு உதவிகளை செய்ததும்தான். ஒட்டுமொத்த மக்களும் வந்துநின்று, இறுதி ஊர்வலத்தில் மலர்களைத் தூவி, அவரை சொர்க்கத்துக்கு செல்ல வாழ்த்திய அனைவருக்கும் எனது இரு கரங்களையும் கூப்பி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிக நன்றி
கோயம்பேடு அலுவலகத்தின் வெளியே காத்திருக்கும் உங்கள் அனைவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால், அலுவலகம் மிக சிறிய இடம். எனவே, இன்று முதல்வர், அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள், உள்ளிட்ட அனைவரும் வந்திருந்தனர். இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்திருந்த அனைவருக்கும் தேமுதிக சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் சார்பிலும், அவரது குடும்பத்தின் சார்பிலும் இரங்கல் தெரிவித்தார். அவருக்கு தேமுதிக சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தமிழக அரசின் சார்பில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் நல்லடக்கம் நடந்துள்ளது. விஜயகாந்தின் உடலை சந்தனப் பேழையில் வைத்து அடக்கம் செய்திருக்கிறோம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்
அவரது கையில் தேமுதிக மோதிரம் போட்டிருப்பார். அது அவரது கையிலே இருக்கட்டும், அவர் ஆரம்பித்த இந்த கட்சியின் நினைவாக அந்த மோதிரத்துடனும், கட்சி வேட்டியுடனும் தான் அவரை நல்லடக்கம் செய்திருக்கிறோம். தொண்டர்கள் அனைவருக்கும் பாதம் பணிந்து எனது நன்றியை உரித்தாக்குகிறேன். இந்த சோகமான நாளில் மீண்டும் ஒன்றிணைந்துள்ளோம். தலைவர் விஜயகாந்தின் கனவை நிச்சயமாக வெற்றி பெறச் செய்து அந்த வெற்றிக்கனியை அவரது பாதத்தில் சமர்ப்பிக்கும் நாள்தான் தேமுதிகவுக்கு உண்மையான வெற்றிநாள் என்று இந்த நாளில் உறுதி ஏற்போம்.

எப்படி சென்னை மெரினா கடற்கரையில் ஒவ்வொரு தலைவர்களுக்கு நினைவிடம் அமைத்துள்ளனரோ, அதுபோல விஜயகாந்துக்கும் நம்பர் ஒன் தரத்தில் நினைவிடம் அமைத்து, அவரது புகைப்படம் வைத்து 24 மணி நேரமும் விளக்கு ஏற்றப்பட்டு, தினமும் பூ அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டு, ஒட்டுமொத்த தொண்டர்களும் வந்து வழிபடும் கோயிலாக மாற்ற இருக்கிறோம்” என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

கருத்துகள் இல்லை: