செவ்வாய், 9 ஜூன், 2020

நியூ ஸிலாந்தில் கொரோனா தொற்றுடையோர் எவருமில்லை! பிரதமர் ஜெசிந்தா நடனம்

metronews. lk :நியூ ஸிலாந்தில் தற்போது கொரோனா தொற்றுடையோர் எவரும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏறத்தாழ அனைத்து கட்டுப்பாடுகளும் விரைவில் தளர்த்தப்படவுள்ளன. தனது நாட்டில் தற்போது கொரோ தொற்றுடையோர் எவரும் இல்லை என தனக்கு அறிவிக்கப்பட்டவுடன் தான் சிறிது நடனமாடியதாக நியூ ஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நியூ ஸிலாந்தில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய விதிகளின்படி, பாடசாலைகள், வேலைத்தளங்கள் அனைத்தும் திறக்கப்படும். திருமண வைபவங்கள், மரணச்சடங்குகள், பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆகியன கட்டுப்பாடு எதுவுமின்றி நடத்தப்பட முடியும்.


சமூக இடைவெளியைப் பேணுவது கட்டாயமல்ல, ஆனால், அதைப் பேணுவதற்கு ஊக்குவிக்கப்படும் என நியூஸிலாந்து அரசு அறிவித்துள்ளது.
எனினும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்படடுள்ளது.
நியூ ஸிலாந்தில் 1154 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 22 பேர் இறந்தனர். 1132 பேர் குணமடைந்துவிட்டனர்.

கருத்துகள் இல்லை: