வியாழன், 7 மே, 2020

பெரியாரியர்களை அறிவுநாணயமற்றவர்கள் என்று சொல்லலாமா?

LR Jagadheesan : கேள்வி: ஆனப்பெரிய பெரியாரியர்களை அறிவுநாணயமற்றவர்கள் என்று சொல்லலாமா? அப்படி சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
பதில்: கலைஞரையும் பிரபாகரனையும் அவரவர் தவறுகள், பிழைகள், சறுக்கல்கள், சமரசங்களுக்காக விமர்சித்த பெரியாரியர்களின் அறிவுநாணயத்தை நான் என்றுமே மதிக்கிறேன். மாறாக கலைஞரின் ஒவ்வொரு தவறு, பிழை, சறுக்கல், சமரசங்களை தைரியமாகவும் வெளிப்படையாகவும் இன்றுவரை தொடர்ந்து விமர்சித்து, அதை அடுத்த தலைமுறை தமிழ்நாட்டு பெரியாரிய இளம் தலைமுறைக்கும் கவனமாகவும் ஆவணப்பூர்வமாகவும் கடத்தத் தெரிந்த ஆனப்பெரிய பெரியாரியர்கள், பிரபாகரனின் பச்சைப்படுகொலைகள் குறித்தும் நம்பி அடைக்கலம் தந்த தமிழ்நாட்டை தங்களின் அனைத்துவிதமான சட்டவிரோத செயல்களுக்குமான காலனிய நாடாக பயன்படுத்திக்கொண்டதையும் அதனால் தமிழ்நாடும் அவர்களை நம்பி அவர்களுக்கு உதவியதால் வாழ்வைத்தொலைத்த நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள்/குடும்பங்களுக்கு (இவர்களில் 99% பேர் திமுக/திகவினர்) புலிகள் செய்த நம்பிக்கை துரோகத்தைப் பற்றியும் பொதுவெளியில் கூட வேண்டாம்
இவர்கள் நடத்தும் பயிற்சிப்பட்டரைகளில் கூட பேசாமல் வல்வெட்டித்துரை வஸ்தாது பிரபாகரனை தமிழர்களின் தேசியத்தலைவர் என்று தொடர்ந்து இன்றுவரை புனிதராக கட்டமைக்கும் செயலை அறிவுநாணயமற்ற செயல் என்று சொல்லாமல் வேறென்ன சொல்லி விமர்சிப்பது? தமிழ்நாட்டு தமிழ்தேசிய கூலிப்படைகளைப்போல் இவர்கள் வெளிநாட்டு வெள்ளிக்காசுக்கு விலைபோனவர்கள் அல்ல. புலிகளுக்காக சொந்தக்காசை, சொத்தை, வாழ்வை தொலைத்த தியாகசீலர்கள் தான். அத்தோடு சேர்த்து தம் அறிவுநாணயத்தையும் சேர்த்து தொலைத்துவிட்டார்கள் என்பதே ஆதங்கமும் குற்றச்சாட்டும். சுருக்கமாக சொல்வதானால் கலைஞருக்கு காட்டப்படும் பெரியாரியர்களின் கறார் விமர்சன அளவுகோல்கள் பிரபாகரன் என்றதும் பதுங்குகுழிகளுக்குள் போய் பதுங்கிக்கொள்வது ஏன்? அதுவே என் ஒருவரி விமர்சனம். கேள்வி. இறந்தவரை விமர்சிக்க வேண்டாம் என்றால் ராஜாஜிக்கும் அந்த அளவுகோல் பொருந்துமா? என்பது எதிர்கேள்வி.
ஒருவரை விமர்சிக்க, அவர்களின் அடிப்படை முரணை சுட்டிக்காட்ட “தகுதி/தராதரம்” எதுவும் தேவையில்லை. யாரும் யாரையும் கேள்வி கேட்கலாம் என்பதே பெரியார் வாழ்நாள் முழுக்க வலியுறுத்திய கொள்கை. அது பெரியாரியர்களுக்கும் அவர்களை விமர்சிப்பவர்களுக்கும் பொருந்தும்.

கருத்துகள் இல்லை: