வியாழன், 17 ஆகஸ்ட், 2017

ஸ்டாலினுக்கு தெரியாமல் சபரீசன் தினகரன் கோஷ்டியோடு ரகசிய பேச்சு ... ரசிக்காத திமுக பிரமுகர்கள்!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என தினகரன் தொடர்ந்து பல்வேறு பகீரத முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார். நேற்று இரவு தினகரன், தனது வீட்டில் செந்தில் பாலாஜி, பழனியப்பன், வெற்றிவேல் என முக்கிய நிர்வாகிகள் சிலருடன் ஆலோசனை மேற்கொண்டாராம். அப்போது, ‘நான் எது சொன்னாலும் கேட்க தயாராக இருப்பது 8 எம்.எல்.ஏக்கள் மட்டும்தான். நமக்காக இப்போ வந்த மீதி இருக்கும் 12 பேரும் கூட பணத்துக்காகத்தான் வந்தாங்க. அவங்க எந்த நேரத்துல எப்படி மாறுவாங்கன்னு தெரியாது. அவங்களை நம்பி பிரயோஜனம் இருக்குமான்னு எனக்கு தெரியலை. இப்படியே போயிட்டு இருந்தால், இந்த ஆட்சிக்கு எதிராக எதையும் செய்யவே முடியாது. திமுக தரப்பில் இருந்து நமக்கு இருக்கும் சப்போர்ட் கூட நம்ம ஆட்கள்கிட்ட இருந்து இல்ல..’ என்று வேதனையோடு சொன்னாராம் தினகரன். தினகரன் இப்படி பேசியதற்கு காரணம் இருப்பதாக சொல்கிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தினகரனுக்கு நெருக்கமான ஒருவர் திண்டுக்கல் போயிருக்கிறார். அங்கே திமுகவின் முக்கிய பிரமுகர் ஒருவரை சந்தித்திருக்கிறார். ‘நாம எல்லாம் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவங்க. ஆட்சியை கலைக்க நாங்க முயற்சி செஞ்சிட்டு இருக்கோம். அதுக்கு உங்க ஒத்துழைப்பு தேவை..’ என்று சொன்னாராம்.
அதற்கு அந்த திமுக பிரமுகரோ, ‘ஆட்சி கலைக்க நாங்களே எந்த முயற்சியும் செய்யக் கூடாது என்றுதான் இவ்வளவு நாள் அமைதியா இருந்தோம். இப்போ நீங்க இப்படி ஒரு ஸ்டேண்ட் எடுக்கும் போது அதை நாங்க நிச்சயமா ஆதரிக்கிறோம். உங்களுக்கு என்ன தேவையோ அதை செய்யவும் நாங்க தயாரா இருக்கோம்’ என சொன்னாராம். அந்த நம்பிக்கையில்தான் தினகரன் இப்படி எம்.எல்.ஏக்களிடம் பேசியதாக சொல்கிறார்கள்” என்று முடிந்த அந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
தொடர்ந்து சற்று நேரம் வாட்ஸ் அப்பில் இருந்து எந்த மெசேஜ்ஜும் இல்லை. பிறகு அடுத்த மெசேஜ்ஜும் வாட்ஸ் அப் டைப்பிங் செய்ய ஆரம்பித்தது.
”அப்படியானால் ஆட்சியை கவிழ்க்க திமுக எந்த முயற்சியுமே எடுக்கவில்லையா? என்ற கேள்வி எல்லோருக்கும் வரும். அதற்கான முயற்சிகளை திமுக தொடர்ந்து எடுத்து வந்தது என்பதே நிஜம். அதிமுகவில் உள்ள எம்.எல்.ஏக்கள் பலருக்கும் திமுக மாவட்டச் செயலாளர்கள் சிலர் தூதுவிட்டுப் பார்த்தார்கள். ஆனால், அதிமுக எம்.எல்.ஏ.க்களோ என்ன பேசியும் அணிகள் மாற தயாராக இருந்தார்களே தவிர, கட்சி மாற யாரும் தயாராக இல்லை. எம்.எல்.ஏக்கள் யாரும் வரவில்லை என்றதும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களாவது வருவார்களா என ஆட்கள் இழுக்கும் வேலையில் திமுகவினர் ரகசியமாக நூல்விட்டுப் பார்த்தனர். அதற்கும் யாரும் வளைந்து கொடுக்கவில்லை.
இன்னொரு பக்கம், ஸ்டாலின் மருமகன் சபரீசன் சில வேலைகளில் இறங்கினார். தினகரனுக்கு நெருக்கமாக உள்ள தொழிலதிபர் ஒருவரை சபரீசன் சந்தித்தார். ‘தினகரன் இனியும் அமைதியா இருக்கணுமா? எப்படியும் எடப்பாடி அவருக்கு ஆட்சியை விட்டுக் கொடுக்கப்போறது இல்லை. அதனால் தைரியமா இறங்கி பணத்தை அடிச்சு ஆட்சியை கலைக்க சொல்லுங்க. இப்போ இல்லைன்னாலும் இன்னும் 5 வருஷத்துக்கு அப்புறம் கட்சி, ஆட்சி இரண்டும் தினகரன் கைக்கு வந்துடும். இப்படியே நான்கு வருஷம் போயிடுச்சுன்னா அப்புறம் தினகரனுக்கு எதுவுமே மிஞ்சாது’ என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார். சபரீசன் சொன்ன விஷயம் தினகரன் கவனத்துக்குப் போயிருக்கிறது.
‘அவரு நினைக்கிறது சொல்றது எல்லாம் சரிதான்! நாம 5 வருஷம் கழிச்சு ஆட்சியைப் பிடிக்கிறதைவிட, இப்போ உடனடியாக அவங்க ஆட்சியை பிடிக்கணும் என்ற அக்கறைதான் அவருக்கு நிறைய இருக்கும்.ரொம்பவும் நன்றி சொல்லச் சொன்னேன்னு சொல்லுங்க..’ என்று நக்கலாக சொல்லி இருக்கிறார் தினகரன். அதுமட்டுமல்ல... ‘ஆடு நனையுதேன்னு ஓநாயை அழ வேண்டாம்னு சொல்லுங்க..’ என்றும் சொல்லி விட்டாராம். இது எல்லாமே ஸ்டாலினுக்குத் தெரியாமல் சபரீசனும் அவரது ஆட்களும் செய்திருக்கிறார்கள். வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் ஸ்டாலினிடம், ஆட்சி கலைப்பு தொடர்பாக தினகரன் ஆட்களுடன் பேசியதை சபரீசன் சொல்லி இருக்கிறார். ‘அதெல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும். இனி யாருகிட்டயும் பேச வேண்டாம்’ என சொல்லிவிட்டாராம் ஸ்டாலின்.” என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: