திங்கள், 14 ஆகஸ்ட், 2017

மேலூர்: விஸ்வரூபம் எடுப்பாரா தினகரன்?

மேலூர்: விஸ்வரூபம் எடுப்பாரா தினகரன்?
minnambalam : அதிமுக-வுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் அதிரடியான மாதமாகவே அமைந்திருக்கிறது. ஜெயலலிதா மறைந்து முழுதாக எட்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அதிமுக-வில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் இன்னும் ஓயவில்லை.
கடந்த சில நாள்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி விசிட் அடித்த நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இன்று ஆகஸ்ட் 14ஆம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தை நடத்துகிறார் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். இந்தப் பொதுக்கூட்டத்தில் யார் யார் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் அதிமுக-வில் அதிகரித்துள்ளது.
தனது சின்ன மாமியார் சந்தானலட்சுமி மறைவை ஒட்டி நடந்த சடங்குகளுக்காக கடந்த சில தினங்களாக தஞ்சையில் தங்கியிருந்தார் தினகரன். அப்போது திவாகரனும் உடன் இருந்தார். மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது பற்றி இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தியுள்ளனர். ‘கூட்டத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று தினகரனுக்கு வாக்குறுதி அளித்திருக்கும் திவாகரன், அனைத்து அதிமுக நிர்வாகிகளையும் தொடர்புகொண்டு கடந்த மூன்று நாள்களாகப் பேசிக் கொண்டிருக்கிறார். முன்பெல்லாம் திவாகரனைப் பார்க்க வேண்டுமென்றால் நாலைந்து நாள் முயன்றால்தான் முடியும். ஆனால், இப்போது தன்னைப் பார்க்க வரும் அதிமுக நிர்வாகிகளுக்கு தானே நாற்காலியை எடுத்துப் போட்டு அமரச் சொல்லும் அளவுக்கு இறங்கி வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார் திவாகரன்.

நேற்று மதுரை மாவட்டம் மேலூர் சென்று விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்ட திவாகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அதிமுக-வின் தொண்டர்கள் எல்லாம் எங்களிடம்தான் இருக்கிறார்கள். அமைச்சர்கள் என்ற பதவி இருப்பதால் சில பேர் இப்போது எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் என்ற பதவி மட்டும் இல்லாவிட்டால் அவர்கள் எல்லாம் என்ன நிலையில் இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். எத்தனையோ முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள். அமைச்சர்கள் மட்டுமே கட்சி கிடையாது. எம்.எல்.ஏ-க்களைப் பொறுத்துதான் அதிமுக-வில் அணி என்று பிரிந்திருக்கிறார்கள். தொண்டர்கள் அனைவரும் பொதுச்செயலாளர் சின்னம்மா தலைமையில்தான் இருக்கிறார்கள்” என்று இயல்பாக சிரித்துக்கொண்டே பேசினார்.

தினகரனால் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட மேலூர் சாமி, பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பிரமாண்டமாகச் செய்திருக்கிறார். தினகரனை வரவேற்க பிரமாண்டமான வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன.
நேற்று பொதுக்கூட்ட மேடையருகே செய்தியாளர்களிடம் பேசிய சாமி, “பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேலான தொண்டர்கள் பங்கேற்பர். அதிமுக-வில் அம்மாவுக்குப் பிறகு சின்னம்மாவின் வழியில் உறுதியான தலைமைப் பண்பு நிறைந்தவராக தினகரன் மட்டுமே இருக்கிறார். அம்மாவுக்கு அடுத்து பொதுமக்களை ஈர்க்கும் சக்தி தினகரனுக்கு மட்டுமே இருக்கிறது. யாரிடமும் அதிமுக-வை அடகு வைக்காமல், அடிமையாக இருக்காமல் அதிமுக-வைத் தலைநிமிர வைக்கும் வல்லமை தினகரனுக்கு மட்டுமே இருக்கிறது. நம்மை வழிநடத்தும் சக்தியும் தினகரனிடம் மட்டுமே உள்ளது என உண்மையான அதிமுக தொண்டர்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையின் வெளிப்பாட்டை மேலூர் பொதுக்கூட்டத்தில் காணலாம்.
இந்தப் பொதுக்கூட்டம் மாநாடாக மாறும். மேலூரில் தினகரன் விஸ்வரூபம் எடுப்பார்” என்று குறிப்பிட்டார் சாமி.
மேலூரில் இன்று மாலை தினகரனால் நடத்தப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்குத் தொண்டர்கள் கூட்டம் எவ்வளவு வரும் என்ற எதிர்பார்ப்புக்கு இணையாக எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தினகரன் கொடுத்த பதவியை ஏற்றுக்கொண்ட 19 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று ஆகஸ்ட் 13ஆம் தேதி திருச்சியில் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்திய டி.டி.வி.தினகரன் பெங்களூருவுக்குச் சென்றுள்ளார். சசிகலாவைச் சிறையில் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டு மேலூர் திரும்புவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
இதற்கிடையில் நேற்று தஞ்சையில் பேசிய சசிகலாவின் கணவரான எம்.நடராஜன், “நீட் தேர்வில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. இது தமிழகத்தை ஆக்கிரமிக்கும் முயற்சி’’ என்று குறிப்பிட்டுள்ளார். இன்று மேலூர் பொதுக்கூட்டத்தில் நடராஜனும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டுக்குப் பேருந்துகள் பிடிப்பதற்குக்கூட மாநில அரசு தடை விதிக்கிறது என்று திவாகரன் குற்றம்சாட்டியுள்ள நிலையில் இன்று நடைபெறும் மேலூர் பொதுக்கூட்டம் தினகரனுக்குத் தனிப்பட்ட முறையில் சவாலானது. இதை அவர் வெற்றிகொள்வாரா என்று இன்று மாலை தெரிந்துவிடும்

கருத்துகள் இல்லை: