செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

மேலூரில் தினகரன் :ஜெ. மரணத்தில் நீதி விசாரணை வேண்டும்; அப்போதுதான் உண்மை வெளிப்படும்

மதுரை மேலூரில் இன்று மாலை அதிமுக அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் கட்சியின் துணைப்பொதுச்செயலாலர் டிடிவி தினகரன் பங்கேற்று பேசினார். அவர் தனது பேச்சில், ’’ஜெயலலிதாவின் மரணத்திலே சிலர் நீதி விசாரணை வேண்டும் என்கிறார்கள். தர்மயுத்தம் நடத்துகிறேன் என்கிறார்கள். தர்மத்தோடு யுத்தம் நடத்துகிறவர்கள் தர்மயுத்தம் என்கிறார்கள். மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு நீதி விசாரணை கேட்பவர்கள்தான் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோதும் மரணம் அடைந்த போதும் அவர்கள்தான் முக்கிய பொறுப்புகளில் இருந்தார்கள். அவர்கள்தான் நீதி விசாரணையில் முதன் முதலாக விசாரிக்கப்படுவார்கள். நான், பிப்ரவரி 21ம் தேதி துணைப்பொதுச்செயலாளராக பதவி ஏற்ற அன்றே பத்திரிகையாளர் சந்திப்பிலே, எங்களூக்கு மடியிலே கனமில்லை; எந்த விசாரணைக்கும் தயார் என்று சொன்னேன்.

தமிழக அரசாங்கத்திற்கு பொதுச்செயலாளர் சார்பிலே, கழக தொண்டர்கள் சார்பாக, நிர்வாகிகள் சார்பாக ஒரு கோரிக்கை வைக்கின்றேன். நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அப்போதுதான் உண்மை வெளிப்படும். நீங்கள் நிழலோடு யுத்தம் செய்யாதீர்கள். தர்மத்தை எதிர்த்து நீங்கள் போராட முடியாது. நிச்சயம் தர்மம்தான் ஜெயிக்கும். ஒழுங்காக, சரியாக சிந்தியுங்கள்....இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும், சதி செய்து கட்சியை கைப்பற்றி விடலாம் என்று நினைப்பவர்களும் தயவு செய்து திருந்துங்கள். என்றைக்கும் சதித்திட்டம் வென்றதில்லை’’ என்று குறிப்பிட்டார் நக்கீரன்

கருத்துகள் இல்லை: