திங்கள், 20 ஜூன், 2016

வாசன் மக்கள் நல கூட்டணியை விட்டு வெளியேறினார்

மக்கள் நலக் கூட்டணியை விட்டு வெளியேறினார் ஜி.கே.வாசன்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற விரும்பிய தமாகா, அழைப்பில்லாததால் அதிமுக கூட்டணியில் இடம்பெறவில்லை. கடைசியாக மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்து படுதோல்வியைச் சந்தித்த நிலையில் மக்கள் நலக் கூட்டணி இன்னும் இருக்கிறதா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுப்பப்பட்டு வந்தநிலையில்,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று தேனாம்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மரியாதைக்குரிய வைகோ, முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன் ஆகியோர் ஜனவரி மாதம் சந்தித்து கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் தொகுதி உடன்பாடு செய்து கொண்டோம். கூட்டணியில் இருந்தபோதும் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். எனவே, எங்களின் ஆறு கட்ட ஆலோசனையில் மக்கள் நலக் கூட்டணி தொடருமா? இல்லையா என்பது குறித்து கேள்வி எழவில்லை. எங்களின் செயற்குழு கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணிக்கு நன்றி தெரிவித்துள்ளோம். தற்போது கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளோம். உள்ளாட்சி தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும்போது அதுகுறித்து முடிவு செய்யப்படும். தனித்துப் போட்டியிட்டால் எப்படி பணி செய்வோமோ, அப்படி பணியாற்ற இருக்கிறோம். அனைத்து மாவட்டங்களுக்கும் நான் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன். அனைத்து மண்டலங்களுக்கும், பின்னர் அனைத்து வருவாய் மாவட்டத்துக்கும் சுற்றுப்பயணம் சென்று அடிமட்டத் தொண்டர்களைச் சந்திக்க இருக்கிறேன். 27ஆம் தேதி சுற்றுப்பயணம் ஆரம்பமாகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை மண்டலத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க உள்ளேன்" என்றார். எல்லோருக்குமே அவரவர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நெருக்கடி உருவாகி இருக்கிறது. கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்பதைவிட தன் கட்சியின் வலுவை உள்ளாட்சித் தேர்தலிலாவது நிரூபித்தாக வேண்டிய நிர்பந்தத்தில் வேகம் பிடித்திருக்கிறது, சட்டமன்றத் தேர்தலில் தோற்ற கட்சிகள்.   minnambalam.com

கருத்துகள் இல்லை: