ஞாயிறு, 19 ஜூன், 2016

நான் சந்தோஷமாக இல்லை!’- செயற்குழுவில் வெடித்த ஜெயலலிதா

அவங்க 89 பேர் எதிர்ல உட்கார்ந்துட்டுச் சிரிக்கிறாங்க. இதெல்லாம் ஒரு வெற்றியா... இதை வெற்றி என்று சொல்லி, என்னால் சந்தோஷப்பட முடியலை. மொத்தத்தில் நான் சந்தோஷமாக இல்லை. இப்படி பேசுவார் என்று யாரும் எதிர்பார்த்து வரவில்லை. எதிர்பார்க்காதது எல்லாம் பேசிவிட்டார். யாரும் எதிர்பார்க்காததை பேசுவதும், செய்வதும்தானே ஜெயலலிதா ஸ்டைல். அதிமுக-வின் செயற்குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தோழி சசிகலா சகிதமாக கூட்டத்துக்கு வந்தார் கட்சியின் பொது செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா. உள்ளே நுழையும்போது ரொம்பவே உற்சாகமாக இருந்தார். கட்சி அலுவலகத்தின் மாடியில் இருந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபோதும், ஜெயலலிதா முகத்தில் அப்படியொரு உற்சாகம்
ஆனால், கூட்டத்துக்குள் எல்லாமே நேர்மாறாக நடந்தது. அவைத் தலைவர் மதுசூதனன் வரவேற்று பேசினார். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமிக்குப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அடுத்து செயற்குழு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அதன் பிறகு பேச ஆரம்பித்திருக்கிறார் ஜெயலலிதா.
‘கட்சியில சாதாரணமாக இருந்த சின்ன பசங்களை எல்லாம் எம்எல்ஏ ஆக்கினேன். மாவட்டச் செயலாளர் ஆக்கினேன். சிலரை அமைச்சர்களாகவும் ஆக்கினேன். அவங்க எல்லோரும் திருப்பிக்காட்டும் நன்றி, விசுவாசம் ரொம்பவும் பெருசா இருக்கு. சம்பாதிக்கிறதை எல்லாம் இங்கே சம்பாதிச்சுட்டு, திமுக-வுக்கு வேலை பார்த்திருக்காங்க.
நான் உழைத்த உழைப்புக்கு இவ்வளவு குறைந்த இடங்களா ஜெயிக்க முடியும்? நாம் இவ்வளவு குறைவான இடங்களில் ஜெயிக்கக் காரணம் திமுக இல்லை. நம்ம கட்சியில் இருப்பவர்கள்தான். இங்கே இருந்து சம்பாதிச்சப் பணத்தையெல்லாம் திமுகக்காரங்க ஜெயிக்கிறதுக்கு செலவு செஞ்சிருக்காங்க. இங்கே இருக்கிற சிலர், நம்ம ஆட்கள் தோற்கணும் என்பதற்காக வேலை பார்த்திருக்காங்க. கட்சிக்குள் உள்ளடி வேலை பார்த்தவங்கதான் அதிகம் இருக்காங்க. நாம ஜெயிக்கலைன்னாலும் பரவாயில்லை... அடுத்தவன் ஜெயிக்கக்கூடாது என்றும் சிலர் வேலை செஞ்சிருக்காங்க. போன முறை நம்ம ஆட்சியில ஆட்டம் போட்டது யாருன்னு எனக்கு தெரியும். ஆனா, அது எல்லாத்தையும் தாண்டி அவங்களுக்குத் திரும்ப சீட்டும் கொடுத்தேன். ஜெயிச்சங்களை மந்திரியும் ஆக்கியிருக்கேன். ஆனால், இன்னும் அதில் சிலர் திருந்தாமல் இருக்காங்க. எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சிடாதீங்க. யாரு, என்ன செஞ்சீங்க... என்ன செஞ்சிட்டு இருக்கீங்க? எல்லாமே எனக்கு தெரியும்.

என்னோட உடல்நிலை இருக்கிற சூழ்நிலையில் நான் இந்தத் தேர்தலுக்காக எவ்வளவு பாடுபட்டேன். நான் பட்ட கஷ்டம் உங்க யாருக்கும் தெரியலை. எனக்கு, இது எல்லாம் தேவையா? சட்டமன்றத்துல அவங்க 89 பேர் எதிர்ல உட்கார்ந்துட்டுச் சிரிக்கிறாங்க. இதெல்லாம் ஒரு வெற்றியா... இதை வெற்றி என்று சொல்லி, என்னால் சந்தோஷப்பட முடியலை. மொத்தத்தில் நான் சந்தோஷமாக இல்லை. கட்சியில் இருக்கும் அடிமட்ட நிர்வாகிகள்தான், நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்க. இங்கே இருக்கும் யாரும் அப்படி நினைக்கிறதா எனக்கு தெரியலை. உங்க எல்லோருக்கும் உங்க சுயநலம்தான் முக்கியம். உங்களைப் போலவே நானும் இருந்திருந்தால், இந்த கட்சி என்ன ஆகியிருக்கும். இந்த கட்சி வளர்ந்த வரலாறு தெரியுமா உங்களுக்கு?
உள்ளாட்சி தேர்தல்வரைக்கும் நான் எதுவும் செய்யப்போறது இல்லை. நீங்க செய்யுற எல்லாத்தையும் நான் பார்த்துட்டுதான் இருக்கப்போறேன். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால் நான் ஒரு முடிவுக்கு வந்தாகணும். அந்த முடிவு, நீங்க எதிர்பார்க்காத முடிவாக இருக்கும். உங்க யாருக்காகவும் கட்சி இல்லை. கட்சிக்காகத்தான் நீங்க என்பதை தெரிஞ்சுக்கோங்க’ என்று கண்கள் சிவக்க பேசி முடித்திருக்கிறார் ஜெயலலிதா.
கூட்டத்துக்கு வந்த பெண் நிர்வாகிகள் பலருடைய கண்களில் கண்ணீர். மற்றவர்கள் எல்லாம் பேயறைந்தவர்கள் போல ஆகிவிட்டார்கள். ‘சின்னப் பசங்களை எல்லாம் மாவட்டச் செயலாளர் ஆக்கினேன்... எம்எல்ஏ ஆக்கினேன்... அமைச்சர் ஆக்கினேன்... ஆனால், யாரும் விசுவாசமாக இல்லை’ என்று ஜெயலலிதா வருத்தப்பட்டுக் குறிப்பிட்டது யார், யாரை என்பதுதான் இப்போது அதிமுக வட்டாரத்தில் பட்டிமன்றம் வைக்காத குறையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சியில் அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் பெயர் பலமாக அடிபடுகிறது. அவர்தான் அவருடைய மாவட்டத்தில் போட்டியிட்ட மாவட்டச் செயலாளரைத் தோற்கடிக்கப் பலமாக வேலை பார்த்தார். அதனால்தான் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அந்த மாவட்டச் செயலாளர் ஜெயித்தார் என்றும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். அதேபோல கடந்த ஆட்சியில் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, தற்போது அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும் ஒருவரையும் சொல்கிறார்கள். இவரது மாவட்டத்தில் போட்டியிட்ட மாவட்டச் செயலாளர் தோல்விக்கு காரணமே, தற்போதைய அமைச்சர்தான் என்றும் சொல்கிறார்கள்.
மொத்தத்தில் அமைச்சர்கள் தொடங்கி, மாவட்டச் செயலாளர்கள் வரை முக்கிய நிர்வாகிகள் அனைவருமே திக் திக்கென பயத்தில்தான் இருக்கிறார்கள். அந்த பயம்தான் அதிமுக-வின் பலம்!
- மின்னம்பலம் டீம்

கருத்துகள் இல்லை: