வியாழன், 23 ஜூன், 2016

கேரளா தலித் மாணவியின் வாயில் ஆசிட் ஊற்றினார்கள்...ராகிங் என்று மாற்ற முயற்சி ... A 19-year-old dalit student


கேரள மாநிலத்தின் மலபுரம் மாவட்டத்தில் எடபால் என்ற ஊரைச் சேர்ந்தவர் அஸ்வதி. இவர் கலாபூராகி என்ற இடத்தில் உள்ள அல்கமர் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மே 9ஆம் தேதி அஸ்வதியின் சீனியர் எட்டு பேர் சேர்ந்து அவருக்கு நச்சு கலந்த திரவத்தை ராகிங் என்ற பெயரில் கொடுத்துள்ளனர்.
அதைக் குடித்ததால் சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட, கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஐந்து நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் மருத்துவர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாகவே திருச்சூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்த மருத்துவர்கள் மீண்டும் கோழிக்கோடு மருத்துவமனைக்கே அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வழக்கறிஞர் முகமது ஷாபி செவ்வாய்கிழமையன்று அஸ்வதியைச் சந்தித்து பேசினார்.
அஸ்வதி ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை சிறு வயதிலேயே இவரையும், இவரது தாயையும் கைவிட்டு விட்டு சென்றுவிட்டார். கல்வியறிவு அற்ற அஸ்வதியின் தாய்க்கு தன் மகளுக்கு நேர்ந்த கொடுமை பற்றி எதுவும் தெரியாத காரணத்தால் காவல்துறையில் புகாரும் கொடுக்கவில்லை. நச்சு திரவத்தை குடித்த காரணத்தால் அஸ்வதியில் குடல் முழுக்க அரிக்கப்பட்டு விட்டது. அதனால், அவரால் எதையும் சாப்பிட முடியவில்லை. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றி கல்லூரி முதல்வர் எஸ்தரிடம் கேட்டபோது, “இங்கு ராகிங் கொடுமை எல்லாம் கிடையாது. அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. குடும்பச்சூழல் காரணமாக அஸ்வதி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இது ஒரு தற்கொலை முயற்சி” என்று கூறியிருக்கிறார். எதற்கெடுத்தாலும் பற்றி எரியும் கேரளாவும் அம்மாநிலத்து இளைஞர்களும் அஸ்வதிக்காக களமிறங்குவார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: