ஞாயிறு, 19 ஜூன், 2016

இன்று முதல் 500 மதுபான கடைகள் மூடல்

தமிழ்நாட்டில் அரசே நடத்திவரும் மதுபானக் கடைகளில் 500 கடைகள் இன்று முதல் மூடப்படுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அப்படி மூடப்படும் கடைகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலையடுத்து, மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதா மதுபானக் கடைகளின் நேரம் குறைக்கப்படும் என்றும் 500 கடைகள் மூடப்படும் என்றும் கூறியிருந்தார். கடந்த மே மாதம் 24-ஆம் தேதியன்று மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் 2 மணி அளவுக்குக் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், 500 கடைகளை மூடுவதற்கான உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக மதுரை மண்டலத்தில் 201 கடைகள் மூடப்படுகின்றன. சென்னை மண்டலத்தில் 58 கடைகளும், கோவை மண்டலத்தில் 60 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 133 கடைகளும், சேலம் மண்டலத்தில் 48 கடைகளும் மூடப்படுகின்றன.
இந்தக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் விரைவில் வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6000-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் தமிழக அரசினால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் இருந்து ஒரு நாளைக்கு ஒட்டுமொத்தமாக 67 கோடி ரூபாயிலிருந்து 70 கோடி ரூபாய் வரை மதுபானம் விற்பனையாகிறது  தமிழ்.bbc.com

கருத்துகள் இல்லை: