புதன், 27 ஜனவரி, 2016

சனி கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்கள் கைது


தடையை மீறி சனி பகவான் கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்கள் கைது மகராஷ்டிரம் மாநிலம் அகமத்நகரில் அமைந்துள்ள பழமையான சனிப் பகவான் கோயிலுக்குள் நுழைய முயன்ற 350 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அகமதுநகர் மாவட்டம், சனி ஷிங்கனபூர் கிராமத்தில் உள்ளது சனி பகவான் கோயில். இங்கு ஐந்து அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன சனி பகவான் சிலை மேற்கூரையில்லாத நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்குள் பெண்கள் சென்று வழிபடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 'பூமாதா படை' என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஒரு பெண்கள் அமைப்பு, கோயிலுக்குள் சென்று வழிபடுவது என தீர்மானித்தது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கோயிலுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் மூடி 'சீல்' வைத்தது. ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சுமார் 350 பெண்கள் அதன் தலைவர் திருப்தி தேசாய் தலைமையில் இன்று கோயிலுக்குள் செல்வது என தீர்மானித்தனர். பேருந்தில் புறப்பட்ட அவர்களை கோயிலிலிருந்து சுமார் 70 கிமீ முன்பாக சுபா கிராமம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சுபா காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: