வெள்ளி, 29 ஜனவரி, 2016

நேருவைப்-பற்றிய-5-கட்டுக்கதைகள் தமிழ்.ஹிந்து.com

நேரு பற்றி நம்மிடையே உலவும் நம்பிக்கைகள் எந்தளவுக்கு உண்மையானவை ஜவாஹர்லால் நேருவின் நினைவு வாரத்தை முன்னிட்டு, அவரைப் பற்றி இதுவரை உருவாகியிருக்கும் கட்டுக் கதைகள் சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாம்:
கட்டுக்கதை 1: வாரிசு அரசியலை நேரு ஊக்குவித்தார்
நேருவின் மகள், பேரன் ஆகியோர் இந்தியாவின் பிரதமர்களாக இருந்த காரணத்தாலும் அவருடைய பேரனின் மனைவி அந்தப் பதவியை அடைவார் என்ற நிலை இருந்த காரணத்தாலும் நேருவின் கொள்ளுப்பேரன் வாரிசுரிமை அடிப்படையில் காங்கிரஸில் முன்னிறுத்தப்படும் காரணத்தாலும்தான் இப்படியொரு கட்டுக்கதை உருவாகியிருக்கிறது.
உண்மையில், நேருவுக்கும் ‘வாரிசு அரசிய'லுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தனது மகள் இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று அவர் நினைத்துப் பார்த்தது மில்லை; அப்படிப்பட்ட விருப்பமும் அவருக்கு இல்லை. இந்திய தேசிய காங்கிரஸைக் குடும்பத் தொழில்போல ஆக்கியது இந்திரா காந்திதான். முதலில் தனது மகன் சஞ்சயை அவர் கொண்டுவந்தார், சஞ்சயின் மரணத்துக்குப் பிறகு, தனது இன்னொரு மகன் ராஜீவைக் கொண்டுவந்தார்.
இரண்டு மகன்கள் விஷயத்திலுமே, இந்திரா காந்திக்குப் பிறகு காங்கிரஸின் தலைவராகவும் பிரதமராகவும் அவருடைய மகன்தான் வருவார் என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருந்த விஷயம். ஆகவே, ‘நேரு-(இந்திரா) காந்திப் பரம்பரை' என்பது முறையாக ‘(இந்திரா) காந்தி பரம்பரை' என்றே அழைக்கப்பட வேண்டும்.
கட்டுக்கதை 2: காந்தியின் வழித்தோன்றலாக இருக்கத் தகுதியற்றவர் நேரு – உண்மையில், தனது குருவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர் நடந்துகொள்ளவில்லை; நேருவைத் தேர்ந்தெடுத்ததில் காந்தி தவறு செய்துவிட்டார்.
‘த குட் போட்மேன்' என்ற புத்தகத்தில் ராஜ் மோகன் காந்தி இந்தக் கட்டுக்கதையை அருமை யாக முறியடித்திருக்கிறார். பன்மைத்தன்மை கொண்டதும், எல்லோரையும் எல்லாவற்றையும் உள்ளடக்கியதுமான இந்தியா என்ற காந்தியின் ஆதர்சமான கருத் தாக்கத்தை மற்றவர்களைவிட நேருதான் மிகவும் அற்புதமாகப் பிரதிபலித்தார் என்பதால், அவரைத் தனது அரசியல் வாரிசாக காந்தி தேர்ந்தெடுத்தார் என்பதை ராஜ்மோகன் காந்தி சுட்டிக்காட்டியிருக்கிறார். மற்றவர்கள் - அதாவது, படேல், ராஜாஜி, அபுல் கலாம் ஆசாத், கிருபளானி, ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள் - நேருவுக்கு மாறாக, அவரவர் சமூக நலன்கள் மீது சற்றுக் கூடுதல் அக்கறை கொண்டவர்கள். ஆனால், நேரு முஸ்லிம்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு இந்து; தென்னிந்தியர்களாலும் மதிக்கப்பட்ட ஒரு உத்தரப் பிரதேசக்காரர்; பெண்களும் மெச்சிய ஆண். காந்தியைப் போலவே, அவர் உண்மையிலேயே ஒரு அகில இந்தியத் தலைவராக விளங்கினார்.
கட்டுக்கதை 3: நேருவுக்கும் வல்லபபாய் படேலுக்கும் இடையில் பகைமை நிலவியது
‘வலிமையான' இந்தியா என்ற முழக்கத்தை முன்வைப்பவர்களால்தான், அதாவது பாகிஸ்தான், சீனா போன்றவற்றுடனும் சிறுபான்மையினருடனும் நேரு கனிவுடன் நடந்துகொண்டார் என்று நம்புபவர் களால்தான், இந்தக் கட்டுக்கதை முன்னெடுக்கப்பட்டது. இதோடு வால்பிடித்துக்கொண்டு இன்னொரு கட்டுக் கதையும் வரும்; அதாவது, நேருவைவிடச் ‘சிறப்பான' பிரதமராக படேல் இருந்திருப்பார் என்பதுதான் அது.
உண்மையில், நேருவும் படேலும் ஒரு அணி யாகப் பிரமாதமாகச் செயல்பட்டார்கள்; இந்தியா சுதந்திரமடைந்த ஆரம்ப காலத்தில், அந்த இருவரும் இரட்டைத் தளபதிகளாகச் செயல்பட்டு இந்தியா முழுவதையும் இணைத்தது மட்டுமல்லாமல், அதை வலுவாக்கினார்கள். இருவரும் மாறுபட்ட அணுகு
முறையையும் சித்தாந்தங்களையும் கொண்டிருந்தவர்கள்தான். ஆனால், அந்த வேறுபாடுகளெல்லாம் அவர்களது பொதுவான லட்சியத்தில் கரைந்துவிட்டன. சுதந்திரமான, ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாதான் அந்தப் பொது லட்சியம். படேலைவிட நேரு சிறப்பாகச் செயல்படக்கூடிய விஷயங்கள் சில இருந்தன - மக்களோடு நெருங்குதல், உலக நாடுகளுடன் தொடர்புகொள்ளுதல், பாதிப்புக்
குள்ளாகக்கூடிய சமூகங்களுக்கு (அதாவது முஸ்லிம்கள், பழங்குடியினர், தலித் மக்கள் போன்றோருக்கு) நம்பிக்கை ஏற்படுத்துதல் போன்றவற்றில் நேரு தேர்ந்தவர். நேருவைவிட படேல் சிறப்பாகச் செயல்படக் கூடிய விஷயங்கள் இருந்தன. சமஸ்தானங்களைக் கையாளுதல், கட்சியை வளர்த்தல், கட்சிக்குள் உள்ள கருத்துவேறுபாடுகளைச் சமாளித்துச்செல்லுதல் போன்றவைதான் அவை. இருவரும் மற்றவரின் திறமைகளை நன்கு அறிந்தவர்கள். ஒருவருக்கொருவர் மற்றவருடைய எல்லையில் பிரவேசிக்காதவர்கள். பிரிவினையின் சிதிலங்களிலிருந்து இந்தியாவை அவர்கள் இப்படித்தான் ஒன்றுசேர்ந்து புதிதாகக் கட்டமைத்தார்கள்.
கட்டுக்கதை 4: நேரு ஒரு ‘சர்வாதிகாரி'
எல்லோரையும்விட, குறிப்பாகக் கட்சியிலும் அரசாங்கத்திலும் இருப்பவர்களைவிட நேரு உயரத்தில் இருந்ததுபோன்ற தோற்றம் உண்மைதான். வெவ்வேறு கலாச்சாரங்கள்குறித்த அவருடைய பார்வையும், ஓவியம், இசை, இலக்கியம் அல்லது அறிவியல் ஆகியவற்றில் அவருக்கு இருந்த ஈடுபாடும் அவர் அளவுக்குப் பிறரிடம் இருந்ததில்லை. ஆனாலும், இந்திய ஜனநாயகத்தின் அமைப்புகளையும் மதிப்பீடு
களையும் போற்றி வளர்த்ததில் நேருவுக்கு இணை யாருமில்லை. வயதுவந்தோர் வாக்குரிமையை முதலில் முன்னெடுத்தது அவர்தான், நாடாளு மன்றத்தில் ஆக்கபூர்வமான எதிர்த்தரப்பை அவர் வரவேற்றிருக்கிறார். அரசு நிர்வாகம், நீதித் துறை ஆகிய இரண்டின் சுதந்திரத்தையும் மிகவும் தீவிரமாகப் பராமரித்தவர் அவர். வின்சென்ட் ஷீயன் என்பவர் ஒருமுறை இப்படிச் சொன்னார்: “காந்திக்கும் நேருவுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால், பெரும்பான்மையினரின் கருத்து தனக்கு உவப்பாக இல்லாத கட்டத்திலும், காந்தி அவர்களோடு அனுசரித்துப்போக மாட்டார். மாறாக, அவர்களிடமிருந்து ஒதுங்கிக்கொள்வார்; உண்ணா விரதம் இருப்பார்; பிரார்த்தனையில் ஈடுபடுவார்; தொழுநோயாளிகளைக் கவனித்துக்கொள்வார்; குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பார்.” நேருவோ, இதற்கு மாறாகப் பல முறை “கட்சியிலும் சரி, நாட்டிலும் சரி பெரும்பான்மையினரின் கருத்துகளுக்கு வழிவிட்டிருக்கிறார்.” இதற்கு ஓர் உதாரணம்: இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கும் விவகாரத்தில், அப்படிப் பிரிப்பது தனது கொள்கைக்கு எதிரானது என்றாலும், கட்சியும் நாடும் விரும்புகின்றன என்பதால் நேரு அதற்கு ஒப்புக்கொண்டது.
கட்டுக்கதை 5: பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்த வரை, ஸ்டாலினைப் பின்பற்றி, மையப்படுத்தப்பட்ட ஒரு மாதிரியை நேரு நிறுவினார். இதன் மூலம் நம்மைப் பல தசாப்தங்கள் பின்னுக்குத் தள்ளினார்.
விரைவாகவும் அதிக அளவிலும் தாரளமயமாக்க வேண்டும் என்று விரும்பியவர்களால் பரப்பப்பட்ட கதை இது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இறக்குமதிக்குப் பதிலாக உள்நாட்டு உற்பத்தியைப் பின்பற்றும் பொருளாதார வளர்ச்சியின் மாதிரிக்கு ஆதரவாக அப்போது பரவலான கருத்தொற்றுமை நிலவியது என்பதே உண்மை.
ரஷ்யா மட்டுமல்ல… ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளும் இந்த விஷயத்தில் முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டன. ஒரு விஷயம் என்னவென்றால், மிதமிஞ்சியதும் சில சமயங்களில் தீங்கு விளை விக்கக்கூடியதுமான அந்நிய முதலீடுகளைப் பற்றிய காலனியாதிக்கக் கால அனுபவங்கள் மூலம் இந்தியர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். இன் னொரு விஷயம், இந்தியத் தொழில்துறைக்குப் பாதுகாப்பும் அரசாங்கத்தின் ஆதரவும் மானியமும் தேவைப்பட்டது. உண்மையில், அந்தக் காலத்தின் முக்கியமான முதலாளிகளால் கையெழுத்திடப்பட்ட பம்பாய் திட்டம்-1944, எரிசக்தி, நீர், போக்குவரத்து, சுரங்கங்கள் மற்றும் அதுபோன்ற துறைகளில் அரசின் தலையீட்டைக் கோரியது; இந்தத் துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இல்லையென்பதால், அதை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை என்று முதலாளிகள் கேட்டுக்கொண்டார்கள்.
நாம் இந்த ‘தொழில்மயமாதல்' பாதையை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்பதைப் பற்றியதுதான் இந்த வாதமெல்லாம். உண்மையில் - தொழிலதி பர்கள், விஞ்ஞானிகள், பொருளாதார அறிஞர்கள், அரசியல்வாதிகள் என்று பல்வேறு தரப்புகளும் பல்வேறு சித்தாந்தங்களும் நேருவுடன் அனுசரித்துப்போயின. இன்னும் சொல்வதென்றால், நேருவும் அவற்றுடன் அனுசரித்துப்போனார்.
ஜவாஹர்லால் நேரு அளவுக்கு வாழும்போது போற்றப்பட்டவர்களும், மரணத்துக்குப் பிறகு தூற்றப்பட்டவர்களும் இல்லை. தூற்றுதலுக்குப் பெரும்பாலும் உள்நோக்கம் கொண்டவர்களால் பரப்பப்பட்ட கட்டுக்கதைகளே காரணம். இந்தக் கட்டுக் கதைகளைதான் அப்பாவி மக்கள் நம்பினார்கள்.
- ராமச்சந்திர குஹா, வரலாற்றாசிரியர், எழுத்தாளர்.
தி இந்து (ஆங்கிலம்), தமிழில்: ஆசை

கருத்துகள் இல்லை: