வியாழன், 28 ஜனவரி, 2016

சரிதா நாயர் கேரளா முதலமைச்சர் மீது சரமாரி ஊழல் குற்றச்சாட்டு.....உம்மன் சாண்டி திணறல்...


சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி கேரள பெண் தொழில் அதிபர் சரிதாநாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக பரபரப்பு புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் சரிதாநாயர், பிஜு ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ளனர். உம்மன்சாண்டி மந்திரி சபையில் உள்ள சில மந்திரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சரிதாநாயருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த மோசடி புகார் பற்றி நீதிபதி சிவராஜன் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை கமிஷன் முன்பு முதல்–மந்திரி உம்மன்சாண்டி ஆஜராகி 14 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.


அதன்பின்னர் முக்கிய குற்றவாளியான சரிதாநாயர் நேற்று விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, சோலார் பேனல் அமைக்க அனுமதி பெறுவதற்காக முதல்–மந்திரி உம்மன் சாண்டிக்கு ரூ.1 கோடியே 90 லட்சமும், மின்சாரத்துறை மந்திரி ஆரியாடான் முகம்மதுவுக்கு ரூ.40 லட்சமும் தான் லஞ்சம் கொடுத்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பிய நிலையில், அவர்கள் இருவர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யும்படி ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜரான சரிதா நாயர், முதல்வர் உம்மன் சாண்டி மீது அடுத்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது:-

2013ம் ஆணடு நான அட்டக்குளங்கரா சிறையில் இருந்தபோது, முன்னாள் மந்திரியின் தனி உதவியாளர், கேரள காங்கிரஸ் (பி) தலைவர் கணேஷ் ஆகியோர் என் தாயாருடன் வந்து என்னை சந்தித்தனர். கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப் குமார் என்னிடம் பேசியபோது, முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க மிகவும் சிரமப்பட்டு சிறையில் வந்து சந்தித்ததாக கூறினார்.

மேலும், சோலார் வர்த்தகம் தொடர்பான அனைத்து நிதி பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிடும் என முதல்வரும், காங்கிரஸ் தலைவர்களான பென்னி பெகனம் எம்எல்ஏ, தாம்பனூர் ரவி ஆகியோரும் என் தாயாரிடம் உறுதி அளித்ததாக தெரிவித்தார்.

பின்னர் வெளியில் நின்றிருந்த என் தாயாரிடம் கேட்டபோதும், அவர் முதல் மந்திரி பேசியதாக கூறினார். பென்னி பெகனன் எம்எல்ஏ, தாம்பனூர் ரவி ஆகியோரும் வழக்கறிஞர் பென்னி பாலகிருஷ்ணன், பிரதீப் குமார் ஆகியோரின் தொலைபேசிகள் மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்டதாக கூறினார். அப்போது என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக என் தாயாரிடம் வாக்குறுதி அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, நான் ஏற்கனவே எழுதிய கடிதத்தில் அனைத்து உண்மைகளும் நீக்கப்பட்டு 4 பக்கம் கொண்ட கடிதம் மட்டுமே எர்ணாகுளம் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அரசியல் தலைவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்க, பல ஆவணங்களையும், சாட்சியங்களையும் என்னால் வழங்க முடியும்.

திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் முதல்வரை நான் சந்தித்து, சோலார் குழு வணிக பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினேன். பிஜு ராதாகிருஷ்ணன் சந்தித்த சில நாட்கள் கழித்து நான் சந்தித்தேன்.

இவ்வாறு சரிதா நாயர் வாக்குமூலம் அளித்தார்  maalaimalar.com

கருத்துகள் இல்லை: