வியாழன், 31 டிசம்பர், 2015

சைபர் தாக்குதலால் பிபிசி இணையதளங்கள் முடங்கின

பிபிசி இணையதள கட்டமைப்பில் நடந்த சைபர் தாக்குதலால் பிபிசி
இணையதளங்கள் சில மணி நேரம் முடங்கின .மிகப்பெரிய இணையவழித் தாக்குதல் காரணமாக பிபிசியின் அனைத்து இணைய சேவைகளும் வியாழனன்று காலை பாதிக்கப்பட்டன. வியாழனன்று லண்டன் நேரம் காலை ஏழு மணிக்கு இந்த பிரச்சனை ஆரம்பித்தது.
அந்த சமயத்தில் பிபிசி இணைய பக்கங்களுக்கு வந்த பார்வையாளர்களால் குறிப்பிட்ட பக்கங்களை பார்க்கவோ, படிக்கவோ முடியவில்லை. மாறாக Error message எனப்படும் குறிப்பிட்ட இணைய சேவையை நீங்கள் பார்க்க இயலாது என்கிற அறிவிப்புச் செய்தியை மட்டுமே அவர்கள் பார்த்தனர்.
DDOS (Distributed Denial Of Service) என்று ஆங்கிலத்தில் அறியப்படும் இணைய தாக்குதல் காரணமாகவே இது நேர்ந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது.
அத்துமீறி இணையத்தாக்குதல் நடத்துபவர்கள் ஒரே சமயத்தில் குறிப்பிட்ட இணைய சேவையை அணுகுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட இணையதளம் செயற்பட முடியாமல் முடக்குவதையே DDOS என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைப்பார்கள்.

இதைக் கையாள்வதற்கு பிபிசி எடுத்த நடவடிக்கைகள் தற்போது வெற்றிபெற்றிருக்கிறது. பெரும்பான்மையான பிபிசி இணைய சேவைகள் தற்போது இயல்பு நிலைமைக்கு திரும்பியுள்ளன.
முன்னதாக இந்த பிரச்சனைக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்று பிபிசி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிபிசி இணைய பாவனையாளர்களுக்கு ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துவதாகவும் பிபிசி கூறியிருந்தது.
பிபிசி இணையக் கட்டமைப்பின் மீதான தாக்குதலில் பிபிசியின் முக்கிய இணையதளங்களும் அவற்றோடு இணைந்த மற்ற சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.
பிபிசியின் ஐபிளேயர் காணொளி சேவையும் வானொலி சேவைகளும் கூட பணிபுரியவில்லை.
பிபிசி இணைய சேவைகளில் ஏற்பட்ட தடங்கல் குறித்து சமூக வலைத்தளங்களில் உடனடியாகவே கருத்துக்கள் பகிரப்பட்டன.
விரைவாக பிரச்சனையை கையாண்டு பிபிசியின் இணைய சேவைகளை மீண்டும் செயற்பட வைக்கும்படி பலரும் கோரியிருந்தனர்.
தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய ஏன் இவ்வளவு நேரம் பிடிக்கிறது என்று வேறு சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
லண்டன் நேரம் 10.30 மணியளவில் பெரும்பான்மையான பிபிசி சேவைகள் மீண்டும் வழமை போல செயற்படத்துவங்கிவிட்டன.
கடந்த காலங்களிலும் பிபிசியின் இணைய சேவைகள் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தன.
2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிபிசியில் ஒளிபரப்பான முந்தைய நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு வழிசெய்யும் காணொளிச் சேவையான ஐபிளேயரும் அத்துடன் தொடர்புடைய மற்ற சேவைகளும் வார இறுதி நாட்களில் ஏறக்குறைய 48 மணி நேரம் செயற்படாமல் முடங்கி இருந்தன.
அப்போது ஐபிளேயர் காணொளிச் சேவையின் இணையக் கட்டமைப்புக்கு பின்னணியில் இருக்கும் தகவல் தரவுதளத்தில் ஏற்பட்ட கோளாறு அதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது. bbc.tamil.com

கருத்துகள் இல்லை: