வியாழன், 14 மே, 2015

குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
 இதுகுறித்து, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 தங்களது குடும்பப் பாரம்பரியத் தொழில்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் போன்ற பொழுதுபோக்கு சார்ந்த பணிகள், சர்க்கஸ் தவிர்த்து பிற விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் மட்டும் உரிய நிபந்தனைகளுடன் 14 வயதுக்குள்பட்டவர்களை ஈடுபடுத்தவும், வேறெந்தப் பணிகளிலும் அவர்களை அமர்த்துவதைத் தடுக்கும் வகையிலும் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட இருக்கின்றன. முதல்ல மந்திரிங்க வீட்டுல மக்களின் முதல்வர் வீட்டுல எல்லாம் ரெயுடு பண்ணுங்க நிறைய பேரு மாட்டுவாய்ங்க,

 இதன்படி, விவசாயம், கைவினைத் தொழில் போன்றவற்றை மேற்கொண்டு வரும் பெற்றோருக்கு, அவர்களது குழந்தைகள் பள்ளி நேரத்துக்குப் பிறகோ, விடுமுறை நாள்களிலோ உதவலாம்.
 தங்களது குடும்பப் பாரம்பரியத் தொழிலின் அடிப்படைகளை குழந்தைகள் அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், அபாயகரமான தொழில்கள், குடும்பப் பாரம்பரியத் தொழில்களாகவே இருந்தாலும், அவற்றில் தங்களது குழந்தைகளை பெற்றோர் ஈடுபடுத்தக்கூடாது.
 மேலும், 14 முதல் 18 வயதுக்குள்பட்ட விடலைப் பருவத்தினரையும் அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை தடை செய்யும் வகையில், இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
 குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் தொழில் நிறுவனங்களுக்கான அபராதத்தை ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அதிகரிக்கவும், தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கான சிறைத் தண்டனையை குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை என உயர்த்தவும் இந்த உத்தேச சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது.
 குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி, குழந்தைகளைப் பணிக்கு அமர்த்தும் தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதமும், தண்டனையும்தான், தங்களது குழந்தைகளைப் பணிக்கு அனுப்பும் பெற்றோருக்கும் தற்போது விதிக்கப்படுகிறது.
 ஆனால், சமூக, பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு, பெற்றோருக்கு அதிகபட்சம் ரூ.10,000 அபராதம் மட்டும் விதிக்கும் வகையில், இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட இருக்கின்றன.
 இதைத் தவிர, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 6 முதல் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கல்வி அளிக்க வேண்டுமென்ற அம்சமும் உத்தேச சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்கப்படும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, இச்சட்டத் திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
 காங்கிரஸ் விமர்சனம்: இதனிடையே, குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்தம் தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தனது சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், "இந்த சட்டத்திருத்த மசோதாவில், குழந்தைகள் சில தொழில்களை மேற்கொள்ளும் வகையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது, மத்திய அரசின் பிற்போக்குத்தனமான முடிவாகும்.
 இதன்மூலம், குழந்தைகளுக்கான கல்வி உரிமை மீறப்பட்டுள்ளதுடன், குழந்தைத் தொழிலாளர் முறையை பகுதி அளவில் சட்டப்பூர்வமாக்க மத்திய அரசு முயற்சித்துள்ளது' என்று அந்தப் பதிவில் அகமது படேல் தெரிவித்துள்ளார்.
 தற்போதைய நிலவரப்படி, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய 18 அபாயகரமான தொழில்கள் மற்றும் 65 தொழில் பிரிவுகளில் 14 வயதுக்கு உள்பட்டவர்களை ஈடுபடுத்துவதை மட்டும்தான், "குழந்தைத் தொழிலாளர் சட்டம்- 1986' தடை செய்கிறது.
 குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கவும், அவற்றின் நிர்வாகத்தினருக்கு 3 மாதம் முதல் ஓராண்டு வரை சிறைத் தண்டனை வழங்கவும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 இந்நிலையில், குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
கங்கை நதித் தூய்மைப் பணிக்கு ரூ. 20,000 கோடி நிதி ஒதுக்கீடு
 பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான கங்கை நதித் தூய்மைப் பணிக்கு ரூ. 20,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவை புதன்கிழமை அளித்தது.
 இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கங்கை நதித் தூய்மைப் பணி தொடர்பான "நமாமி கங்கே' திட்டத்தை, அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்த ரூ. 20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக, கடந்த 30 ஆண்டுகளில் செலவிடப்பட்ட தொகையைவிட இது 500 சதவீதம் அதிகமாகும்.
 கடந்த 1985-ஆம் ஆண்டு முதல், மத்திய அரசு இதற்காக ரூ. 4,000 கோடியை செலவழித்துள்ளது. இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக, அந்த நதிக்கரையில் வாழும் மக்களும் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினாமி பணப் பரிமாற்ற தடுப்பு மசோதா: மக்களவையில் அறிமுகம்
 பினாமிகளின் பெயரில் கருப்புப் பணம் பதுக்கி வைப்பதைத் தடுக்க வகை செய்யும் பினாமி பணப் பரிமாற்ற தடுப்பு மசோதா மக்களவையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
 இதற்காக, ஏற்கெனவே 1988-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் கடுமையான விதிகள் இடம்பெறாததால், அதற்கு மாற்றான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது திட்டமிடப்பட்டது.
 அந்த சட்டத் திருத்தம் நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கான ஆய்வறிக்கை கடந்த 2012-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், அந்தச் சட்டத் திருத்தம் முந்தைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்படாமல் காலாவதியானது. இந்நிலையில், பினாமிகளின் பெயரில் உள்நாட்டில் கருப்புப் பணம் பதுக்குவதைத் தடுக்க புதிய மசோதா கொண்டுவரப்படும் என்று நிகழ் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
 அதன்படி, பினாமி பணப் பரிமாற்ற தடுப்பு மசோதா பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
 இதைத் தொடர்ந்து, அந்த மசோதாவை மக்களவையில் மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா அறிமுகப்படுத்தினார்.
 இந்த மசோதாவில், பினாமி பெயரில் கருப்புப் பணம் பதுக்குவோருக்கு அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
 இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 இந்த மசோதாவின்படி, பினாமியின் பெயரில் சொத்து குவிப்பது சட்டவிரோதமாக்கப்படும். அத்தகைய நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
 நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார். dinamani.com

கருத்துகள் இல்லை: