வியாழன், 14 மே, 2015

காட்டாட்சி நடத்தும் ஸவுதிஅரேபியா உலகெல்லாம் பரப்பும் வெறிபிடித்த வஹ்ஹாபி-ஸலாஃபிய ஸுன்னிமுதல்வாத

al-nimrothisaivu.wordpress.com : உலகளாவிய அளவில் மிக மதிக்கப்படவேண்டிய  இஸ்லாமியத் தலைவர்களில், ஸவுதிஅரேபியாவில் வசிக்கும் இந்த நிம்ர் பக்ர் அவர்களும் ஒருவர்; ஆனால், எனக்குத் தெரிந்தவரை – நம் செல்லத் தமிழகத்தில் ஒரு குளுவானும்  கேள்வியேகூடப் பட்டிராத பெயரும் இதுதான் – ஏன் இதனைச் சொல்கிறேன் என்றால், ஒரு மெத்தப் படித்த நண்பருக்கும் நிம்ர் பக்ர் அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் – இஸ்லாம், அரேபிய வரலாறு, புவியியல் பற்றியெல்லாம் திட்டவட்டமாக, கறாராக ஏகோபித்த கருத்துகளை வைத்திருப்பவர், அங்கிருக்கும் பிரச்சினைகளைப் பற்றித் துப்புரவாக அறிந்துள்ளதாகத் தளும்பிக் கொண்டிருப்பவர் (=”அங்கிருக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும், அமெரிக்காதான் காரணம்!”)  – பாவம், ரொம்பவும் கிண்டல் செய்யக்கூடாது – அவர் சிலபல விஷயங்களை அறிந்தவர்தான்!
… ஆனால், இவரேகூட ஸவுதிஅரேபிய உள்நாட்டுப் பிரச்சினைகளில் இந்த ஸுன்னி-ஷியா, ஸுன்னி-‘நாடோடி’ குறுங்குழுக்கள்  இடியாப்பச்சிக்கல்களைப் பற்றி, தொடரும்  அநியாய ரத்தக் களறிகளைப் பற்றி ஒரு எழவையும் அறிந்தாரில்லை!

தீவிரவெறிவாத ‘ப்ரேன்ட்’ இஸ்லாமியத்தைத் தவிர, அபரிமிதமாகப் பெருக்கெடுத்தோடும் பெட்ரோலியத்தின் உபயத்தினால் தேனும்பாலும் ஸவுதிஅரேபிய நாடெங்கும் ஒடுவதாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்! (ஏனெனில் வெறுமனே தினசரிகளை மேய்ந்து வெட்டியாக டீவி பார்த்து – அவை சமைக்கும் அரைகுறைக் கருத்துகளையே தம் கருத்துகளாக பாவித்தால், இப்படித்தான் அரைவேக்காட்டுப் பார்வை பெருகும்!)

சரி. அறிவாளிகளைப் பற்றி எழுதும்போது, அறிவிலிகளைப் பற்றி நினைக்கக் கூடக் கூடாது என்பதை அடிக்கோடிட்டுக் கொள்கிறேன்.
-0-0-0-0-0-0-0-0-
மறுபடியும் நிம்ர் பக்ர் அவர்களிடம்…
… …ஆனால் – வருத்தத்துக்குரிய விதத்தில் – மதப்பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு மதிக்கப்படும் இந்த நிம்ர்பக்ர் அவர்களிடம் ஒரு மகாமகோ பெரிய பிரச்சினை: பாவப்பட்ட அவர், ஒரு ஷியா இஸ்லாம் பிரிவினர்.
ஆகவே, ஸவுதி மதவெறிப் பார்வையில், எப்படிப்பட்ட மோசமான அட்டூழியம் செய்திருக்கிறார் இந்த மனிதர்! இருந்தாலும் அவர் எந்தவொரு ஷியா(=ஷிஅய்ட்) வன்முறைவாத கும்பலுடனும் இணையவில்லை.
-0-0-0-0-0-0-
… வளர்ச்சி சார்ந்த, மானுடமேன்மை சார்ந்த ஆச்சரியப் படவைக்கக்கூடிய பல கருத்துகளை முன்னெடுத்துச் சென்ற, அடிப்படையில் ஒரு மதத்தலைவரான இவருக்கு – மேலதிக ஆச்சரியமாக, ஒரு பெரிய மக்கள்திரளின் ஆதரவும் இருந்தது, இருப்பது  ஒரு நம்பிக்கையையும் பிடிப்பையும் கொடுக்கும் செய்தி.
பல்வேறு இடங்களிலிருந்தும் – முக்கியமாக, எனக்கு மிகவும் உவப்பான  மெம்ரி தளத்திலிருந்தும் எடுத்த அவருடைய சில கருத்துகளின் (என்னுடைய) சாராம்சம் கீழே: (அதேசமயம், இவருடைய இஸ்ரேலிய வெறுப்பை என்னால் ஒப்புக்கொள்ளமுடியவில்லை, ஆனால் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்)
  • இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயகமும் தேர்தல்களும் அவசியம். கூட்டாட்சி/குழு ஆட்சி முறையே நம் பிரதேசங்களுக்கு உகந்தது. (ஆம், என்னைப் பொறுத்தவரையிலும் கூட, பலவித குலக்குழுக்கள் ரீதியாகப் பிரிந்திருக்கும் அதிகார அமைப்பில், அனைத்துக் குழுவினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் ஒருவிதமான கூட்டாட்சி முறைதான் தற்போதைக்கு ஒத்துவரும்; ஏனெனில், ‘இந்திய ஸ்டைல்’ ஜனநாயகம் என்பது மதப்பிரிவுகள்  குலக்குழுக்கள் ரீதியாக மிக ஆழமாகப் பிளவுபட்டிருக்கும் சமூகத்துக்கு ஒத்துவராது. மேலும் பரந்த படிப்பறிவும், ஜனநாயகப் பாரம்பரியமும், பன்னோக்கும் – இச்சமூகங்களுக்குப் பலப்பல காரணங்களால், குறிப்பிடத்தக்க அளவு இல்லை; ஆனாலும் பின்வரும்காலங்களில் இச்சமூகமும் மேலெழும்பும்!)
  • நமக்கு ஷாரியா விதிகள் அப்படியே வேண்டாம். ஆனால் அதற்கும் மேற்கத்திய அரசியல்/நீதி பரிபாலனத்துக்கும் நடுவிலான ‘மென்மையான’ நீதி பரிபாலனம் வேண்டும்.
  • பொதுவாக, ஷியா மதகுருமார்கள் ‘மதம் சார்பான’ மரணதண்டனை, தலைசீவுதல் போன்றவற்றில் நிச்சயம் ஈடுபடமாட்டார்கள் (இது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், தற்காலங்களில் இஸ்லாமிக் ஸ்டேட் கும்பலின் ஷியா பிரிவினருக்கெதிரான அசிங்கமான அட்டூழியங்களுக்கு எதிராக – பதிலுக்குப்பதில் எனும் விஷயமும் சில இடங்களில் நடக்கிறதுதான்)
  • அமெரிக்கக் குடிமக்களுக்கும் ஷியா மக்களுக்கும் – சுதந்திரம் + அடிப்படை அறங்கள் பேரிலும்  ஒரேவிதமான பார்வைதான் இருக்கிறது.
  • ஸவுதி அரேபியாவிலுள்ள ஷியாக்களுக்கு, சிறுபான்மையினருக்கு. அடிப்படை மனிதவுரிமைகள் வழங்கப்படவேண்டும்.
  • ஸவுதி அரேபிய அரசாங்கம்,  கொடுங்கோன்மைவாதத்தை முன்னெடுக்கும் அரசு; அதற்கெதிராக மக்கள் திரண்டு போராடவேண்டும்.
  • கர்டிஸ்தானின் தன்னுரிமைக்கான போராட்டம் வெற்றி பெறவேண்டும்.

… ஆனால் – ஸவுதிஅரேபியாவின் அப்போதைய ‘பட்டத்து இளவரசனாக’ இருந்த மேதகு அற்பரும், அயோக்கியருமான நயெஃப் அல்-ஸௌத் 2012 ஜூனில் – 77 வயது  வாக்கில் இறந்தபோது – நம் நிம்ர்பக்ர் அவர்கள் மிக காட்டமாக விமர்சனம் வைத்தது – வினையாயிற்று. “நாம் ஆனந்தக் கூத்தாடவேண்டும்! … அவர் புழுக்களால் உண்ணப்பட்டு, நரகத்தில் கடும்தண்டனை பெறவேண்டும்!!”  (இச்சமயம் யோசிக்கிறேன்: 77 வயதில் ஒருவர் பட்டத்து இளவரசனாக இருந்திருக்கக் கூடுமானால், நம்மூர் இசுடாலினார் அவர்கள், தம்முடைய 62 வயதில், கழகத்தின் நிரந்தர இளைஞரணித் தலைவராக இருக்ககூடாதா என்ன?)
அதனால் 2012ல் அவர் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னரும் பலமுறை கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு  விடுவிக்கப் பட்டிருக்கிறார்.  2012ல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.
2014ல் மறுபடியும் இது அடிக்கோடிடப் பட்டிருக்கிறது. அவர் செய்த குற்றங்கள் இரண்டு: 1) ஒரு ஸுன்னியற்ற முஸ்லீமாக சமர்த்தாக வாயை மூடிக்கொண்டு, வஹ்ஹாபிய அட்டூழியங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் குரலை உரத்து எழுப்பினார். 2) 77 வயதில் இறந்த பட்டத்து இளவரசனை விமர்சித்திருக்கக்கூடாது.
அவ்வளவுதான்.
-0-0-0-0-0-0-0-
ஸவுதிஅரேபியா உலகெல்லாம் பரப்பும் வெறிபிடித்த வஹ்ஹாபி-ஸலாஃபிய ஸுன்னிமுதல்வாத ‘ப்ரேன்ட்’ இஸ்லாமில் – சக முஸ்லீம்களுக்கும், இஸ்லாமுக்குமேகூட ஒரு பங்கும் கிடையாது, எனும்போது – எப்படித்தான் மாற்றுமதத்தினருக்கும், பரந்துபட்ட பொதுமக்களுக்கும் பங்கு இருக்கும், சொல்லுங்கள்?
saudi-regime-planning-to-execute-sheikh-nimr-on-may-1415871_L
ஆக…  என்னதான் எதிர்ப்பிருந்தாலும், இன்றிலிருந்து இரண்டு நாட்களில் – மே 14 அன்று, இத்தலைவரின் தலை ஒரு நாற்சந்தியில் அனைவரும் பார்க்கப்பார்க்க, ஸவுதிஅரேபிய அரசாங்கத்தால் கொய்யப்படலாம் என ஒரு செய்தி வந்திருக்கிறது.
ஸவுதியின் காட்டாட்சியைப் பலமாமாங்கங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு, என்னதான் உலக நாடுகள் இதனைத் தவிர்க்க முயற்சித்தாலும், இக்கொய்தல் நடக்கத்தான் போகிறது எனப் படுகிறது. :-(
அல்-கொய்தல், தலை-கொய்தல் என்று ஆயிரம் வருடங்களுக்குமுன்னாலே இருந்த இஸ்லாமளவிற்கே அதனைத் தேங்கவைக்க, அந்தச் சூட்டில் குளிர்காய எவ்வளவு மாக்கள்!
எப்படியும் – இக்கொலையையும் ஆதரித்து, தமிழ் நாட்டில் நம் செல்ல ஜிஹாதிஇளைஞர்கள் ஒரு டீஷர்ட்டைப் போட்டுக்கொண்டு,  தங்கள் ஆட்காட்டி விரலை மேலே காட்டிக்கொண்டு இன்னொரு  வீரப் புகைப்படத்தை எடுத்து அதனைச் சுற்றுக்கும் விடுவார்கள்தான்…
unnamed
பின்குறிப்பு:  சரி. இந்த எழவெடுத்த ஒத்திசைவையும் விடாமல்  படிக்க, ஸவுதிஅரேபியாவிலிருந்து வருகை தரும் (குறைந்தபட்சம்) ஐவர் இருப்பதால் – அவர்களுக்கு ஒரு தனிச்செய்தி: இந்தியா போன்ற மதவாத, அடிப்படைச் சுதந்திரங்களற்ற தேசத்தில், சிறுபான்மையினர் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக துன்புறுத்தப்படும் நாட்டில் – இக்காரியங்களை நேரடியாகப் பார்க்கக் கொடுப்பினை இல்லாத காரணத்தால், சிரமத்தைப் பார்க்காமல் – இந்த மகாமகோ தலைகொய்தலை நேரடியாகப் பார்த்து இன்புறவும்.
முடிந்தால், இன்புற்றதற்கு ஒருவரி கடிதம் போடவும்.
நன்றி. :-(

கருத்துகள் இல்லை: