செவ்வாய், 23 டிசம்பர், 2014

பன்னீரின் உறவினர்கள் செயல்படுகிறார்கள்? அமைச்சர்கள் பூஜை வேண்டுதல் யாகம் அர்ச்சனை?

எல்லாத் துறைகளிலும் முதல்வர் பன்னீர்செல்வம் பெயரைச் சொல்லி, பலரும் தலையிடுவதால், தாங்கள் முழுமையாக செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர்கள் பலரும் புலம்ப ஆரம்பித்திருக்கும் விஷயம், தலைமை செயலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறத ஆட்சி பொறுப்பு:கடந்த, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில், அ.தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்ததால், ஜெயலலிதா, முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ., பொறுப்பையும் இழந்தார். புதிய முதல்வராக, நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்களே, மீண்டும் அமைச்சர்களாயினர்.
ஜெயலலிதா, நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டு, போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் இருந்து வருகிறார். இருந்தாலும், அவரது வழிகாட்டுதல்படியே, பன்னீர் செல்வம் அமைச்சரவை, செயல்பட்டு வருகிறது. ஜாமினில் வெளிவந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால், நேரடியாக எங்கும் போக முடியாத சூழல் இருக்கிறது. இதனால், வெளியில் நடக்கும் பல விஷயங்கள், ஜெயலலிதாவின் பார்வைக்கு செல்வதில்லை என, கூறப்படுகிறது. இதனால், அமைச்சரவையில் இருப்பவர்களின் சிலரின் செயல்பாடுகள் கடும் அதிருப்தியை, பல மட்டங்களிலும் ஏற்படுத்த, அதை சரி செய்வதற்காக, எல்லாத் துறைகள் மீதும் நேரடியாக, தன் கவனத்தை செலுத்தினார், பன்னீர் செல்வம்.


புலம்பல்:


இதனால், அமைச்சர்கள் பலரும் அதிகாரமின்றி இருப்பதாகவும், முழுமையாக செயல்பட முடியவில்லை என்று புலம்புவதாகவும், தலைமை செயலக வட்டாரங்களில் கூறுகின்றனர். இது குறித்து, அமைச்சரவை வட்டாரங்களில் கூறியதாவது: சொத்துக் குவிப்பு வழக்கு தண்டனையில் இருந்து விடுபட வேண்டும் என்கிற முயற்சியில்தான், ஜெயலலிதா தீவிரமாக இருக்கிறார். அதனால் அவரால், ஆட்சி உட்பட வேறு எந்த விஷயத்திலும் நேரடியாக கவனம் செலுத்த முடியவில்லை. மேல் முறையீட்டு வழக்கு முடிந்த பிறகுதான், அவர், அமைச்சரவை மாற்றம் குறித்து யோசிப்பார். இதை தெரிந்து கொண்டுதான், அமைச்சர்கள் சிலர் ஆட்டம் போட்டனர். இதை கட்டுப்படுத்துவதாக சொல்லி, முதல்வர் பன்னீர் செல்வம், எல்லா துறைகளிலும் கவனம் செலுத்த ஆரம்பிக்க, பல மட்டங்களிலும் கடும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பன்னீர் செல்வத்தின் கொடி, எல்லா நிலைகளிலும் உயரப் பறப்பதை பயன்படுத்தி, அவர் பெயரை சொல்லி, பலரும் உலா வர ஆரம்பித்து விட்டனர்.


உறவினர்கள் தொந்தரவு:


தேனி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் இருக்கும் அவர் உறவுக்காரர்கள் பலரும், சென்னைக்கு வந்து ஓட்டல்களில் நிரந்தரமாக தங்கி, அரசு பணிகளை முடிக்கின்றனர். முதல்வரின் ஆதரவாளர்கள், உறவுக்காரர்கள் என்பதால், எங்களால், எதுவும் சொல்ல முடியவில்லை என்று, புலம்பும் அமைச்சர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.

- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: