வெள்ளி, 26 டிசம்பர், 2014

சவுதியில் வாகனம் ஓட்டிய பெண்கள் தீவிரவாத நீதிமன்றத்தில்


சவுதி அரேபியாவில் அந்நாட்டின் சட்டத்தை மீறி வாகனம் ஓட்டியதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு பெண்கள் மீதான வழக்கு தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முடிவுக்கு எதிராக அந்தப் பெண்களுக்கான வழக்கறிஞர்கள் மேல் முறையீடு செய்துள்ளனர்.
அந்த இரண்டு பெண்களில் ஒருவரான லுஜையின் ஹத்லௌல், அண்டைநாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வாகனத்தை ஓட்டிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
மைஸ்ஸா அலமௌதி என்னும் மற்ற பெண்ணோ, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் சவுதி ஊடகவியலாளர். அவர் ஹத்லௌல் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க எல்லைப்பகுதிக்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.

இந்த இரண்டு பெண்கள் மீதும் தடையை மீறி வாகனம் ஓட்டியதற்காக வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும், இணையதளம் மூலமாக தெரிவித்தக் கருத்துக்களுக்காகவே வழக்கை எதிர்கொள்கிறார்கள் என்றும், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
உலக அளவில் பெண்கள் வாகனங்களை ஓட்டுவதை தடுக்கும் ஒரே நாடு சவுதி அரேபியா மட்டுமே.
சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை ஓட்டுவது சட்டத்திற்கு விரோதமான செயலல்ல. ஆனால் அங்கே ஆண்களுக்கு மட்டுமே வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதில்லை. பொதுஇடங்களில் பெண்கள் வாகனங்களை ஓட்டினால் காவலர்கள் அவர்களை கைது செய்து அபராதம் விதிக்கும் ஆபத்து அங்கே இருக்கிறது.bbc.co.uk/tamil

கருத்துகள் இல்லை: