வியாழன், 25 டிசம்பர், 2014

காஷ்மீரில் கூட்டணி மந்திரிசபை: பா.ஜனதா ஆட்சி அமைக்க உமர் அப்துல்லா ஆதரவு?

காஷ்மீர் மாநில சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்க வில்லை. மொத்த உள்ள 87 தொகுதிகளில் மக்கள் ஜன நாயக கட்சி–28, பா.ஜ.க.–25, தேசிய மாநாட்டு கட்சி–15, காங்கிரஸ்–12 இடங்களில் வெற்றி பெற்றன.
காஷ்மீரில் ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவையாகும். தேர்தலை சந்தித்த நான்கு முதன்மை கட்சிகளும் எதிரும், புதிருமான கொள்கைகளைக் கொண்டவை. இதனால் புதிய ஆட்சி அமைவதில் தெளிவற்ற நிலை காணப்படுகிறது.

என்றாலும் வேறு வழியே இல்லாததால் சில விஷயங்களில் சமரசம் செய்து கொண்டு கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது. தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரசும் குறைவான இடங்களையேப் பெற்று பின்தங்கி விட்டதால், அந்த கட்சிகள் ஆதரவு கொடுக்கும் நிலையிலேயே உள்ளன.
28 இடங்களை வைத்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி, 25 இடங்களில் வென்றுள்ள பா.ஜ.க. ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு கட்சி தலைமையிலேயே புதிய ஆட்சி உருவாக வாய்ப்புள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகம்மது சயீது 2002–ல் முதல்வராக பதவியேற்றது போல மீண்டும் முதல்வராகி விட வேண்டும் என்ற கனவில் இருக்கிறார். ஆனால் அதற்காக மக்கள் ஜனநாயக கட்சி இதுவரை எந்த அதிரடி நடவடிக்கைகளிலும் ஈடு படவில்லை.
அரசியல் களத்தில் எதிரிகளாக உள்ள தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரசிடம் போய் எப்படி ஆதரவு கேட்பது என்று ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் காஷ்மீரில் ஆட்சி அமைக்கும் முயற்சியை பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் அதிரடியாக தொடங்கியுள்ளனர். டெல்லியில் நேற்று மோடி தலைமையில் நடந்த பா.ஜ.க. பாராளுமன்ற குழு கூட்டத்தில் இதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
காஷ்மீரில் பா.ஜ.க. தலைமையில் புதிய கூட்டணி அரசை ஏற்படுத்தும் பொறுப்பை மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி, கட்சி செயலாளர் அருண்சிங் இருவரிடமும் மோடி ஒப்படைத்துள்ளார். அவர்கள் இருவரும் இன்று மதியம் காஷ்மீருக்கு சென்றனர்.
அங்கு நடந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது புதிய ஆட்சி அமைப்பது குறித்து எம்.எல்.ஏ.க்களிடம் அருண்ஜேட்லி விவாதித்தார்.
காஷ்மீரில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் புதிய ஆட்சிக்கான அடித்தளத்து வேலைகளை ஓசையின்றி ஏற்கனவே செய்துள்ளனர். அதன்படி 5 சுயேட்சைகளில் 3 சுயேட்சைகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளை தொடங்கியுள்ளனர். அந்த 3 சுயேட்சைகள் ஆதரவு கிடைத்து விட்டால் பா.ஜ.க. பலம் 28 ஆகி விடும். இதன் மூலம் அதிக இடங்களை வைத்துள்ள கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும் என்று பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்கள்.
பா.ஜ.க.வுக்கு தற்போது 2 விதமான முடிவு எடுக்கும் நிலை உள்ளது. ஒன்று மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவை பெறுவது, அல்லது தேசிய ஜனநாயகக் கட்சி ஆதரவைப் பெறுவது. இதில் எந்த நிலை எட்டப்படும் என்பது இன்று காலை வரை கேள்விக்குறியாக இருந்தது.
இதற்கிடையே தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர்அப்துல்லா டெல்லியில், பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாகவும், அப்போது அவர்கள் காஷ்மீரில் புதிய கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தியதாகவும் செய்தி வெளியானது.
பா.ஜ.க. ஆட்சி அமைக்க தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர்அப்துல்லா எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு கொடுக்க முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது பற்றி பா.ஜ.க. தலைவர்களோ, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர்களோ அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
எனவே இன்னும் ஓரிரு நாளில் காஷ்மீரில் பா.ஜ.க. – தேசிய மாநாட்டு கட்சிகளின் கூட்டணி ஆட்சி பதவி ஏற்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் காஷ்மீர் மாநில அரசியலில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர்களும் பா.ஜ.க.வை தொடர்பு கொண்டுள்ளனர். முசாபர் பெய்க் மூலம் பா.ஜ.க.– மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர்களில் ஒரு பிரிவினர் பேசி வருவதாக தெரிகிறது.
இதன் காரணமாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்களிடையே இந்த கட்சிகளில் யார் ஆதரவைப் பெறுவது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அருண்ஜேட்லி இன்று மதியம் பா.ஜ.க. தலைவர்களிடம் பேசிய பிறகு இதில் ஒருமித்த கருத்து உருவாகும் என்று தெரிகிறது.
மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ஜ.க.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க விரும்புகிறார்கள். முதல்– அமைச்சர் பதவியை தலா 3 ஆண்டுகளுக்கு என பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறி வருகிறார்கள். இந்த அடிப்படையில் பா.ஜ.க., மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர்களிடம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் 370–வது அரசியல் சட்டப்பிரிவு விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. என்றாலும் இந்த விஷயத்தில் முப்தி முகம்மது சயீதை பணிய வைத்துவிட முடியும் என்று காஷ்மீர் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இந்த நிலையில் முப்தி முகம்மதுவை தவிர்த்து விட்டு உமர்அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி ஆதரவை பெற்று ஆட்சி அமைக்கலாம் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் வற்புறுத்தி வருவதாக தெரிகிறது. உமர் அப்துல்லா 15 எம்.எல்.ஏ.க்களே வைத்துள்ளதால் தங்கள் தலைமையிலான ஆட்சி மீது உமர் அப்துல்லாவால் அதிக அழுத்தம் எதுவும் கொடுக்க இயலாது என்பது அவர்களது வாதமாக உள்ளது.
உமர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்தால் காஷ்மீரில் நிலையான கூட்டணி ஆட்சி அமைந்து விடும்.
இதன் மூலம் காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது. அருண் ஜேட்லி இன்று காஷ்மீரில் பா.ஜ.க. தலைவர்களிடம் பேசிய பிறகே, இதில் முழு வடிவம் ஏற்படும்.
எனவே இன்று அல்லது நாளை காஷ்மீரில் புதிய கூட்டணி ஆட்சிக்கான அறிவிப்புகள் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: