புதன், 24 டிசம்பர், 2014

போடோ தீவிரவாதிகள் சுட்டதில் அசாமில் 37 பேர் பலி


கவுகாத்தி: அசாமில் பல்வேறு இடங்களில் போடோ தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்திய பயங்கர துப்பாக்கி சூட்டில் 37 பழங்குடியின மக்கள் பலியாயினர்.
அசாமில் பூர்வீக குடிமக்களுடன் போடோ இன மக்களும் வசித்து வருகிறார்கள். போடோ மக்களுக்கு தனி ‘போடோ லேண்ட்‘ மாநிலம் கேட்டு தேசிய ஜன நாயக முன்னணி அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள். இவர்கள் அவ்வப்போது கிராமமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 21ம் தேதி பூடான் எல்லையை ஒட்டியுள்ள சிராங் மாவட்டத்தில் 2 போடோ தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடி தரும் வகையில், போடோ தீவிரவாதிகள் நேற்று மாலை பயங்கர தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர்.


ஏகே-47 உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோனிட்பூர், கோக்ராஜ்ஹர் மாவட்டத்தில் உள்ள 4 கிராமங்களில் கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு நடத்தினர். அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டியுள்ள சோனிட்பூர் மாவட்டத்தில் அடங்கிய சோனா சூலி பகுதியில் சிமங்பாராவில் வசிக்கும் ஆதிவாசிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், 30 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் பெண்கள். 10 பேர் படுகாயமடைந்தனர். கோக்ராஜ்ஹர் மாவட்டத்தில் பகிரிகுரி, செர்பன்குரி, உல்தாபானி கிராமங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகள் மிகவும் பின்தங்கிய, எல்லையை ஒட்டிய வனப்பகுதிகள் என்பதால் போலீசரால் விரைந்து செல்ல முடியவில்லை. போடோ தீவிரவாதிகளின் இத்தாக்குதலுக்கு மாநில முதல்வர் தருண் கோகாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கூடுதல் ராணுவப்படையினர் தாக்குதல் நடந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். போடோ தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திரமோடி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இது கோழைத்தனமான தாக்குதல் என அவர் கூறி உள்ளார். dinakaran.com

கருத்துகள் இல்லை: