புதன், 24 டிசம்பர், 2014

பாகிஸ்தானில் கிறிஸ்தவ தம்பதியர் எரித்துக் கொலை: 2 மத குருக்கள் உள்ளிட்ட 59 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


பாகிஸ்தானின் லாகூர் நகரின் அருகே கடந்த அக்டோபர் மாதம் கிறிஸ்தவ தம்பதியர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கசூர் மாவட்டம், சக் என்ற கிராமத்தில் இருக்கும் செங்கல் சூளையில் சஹ்ஜாத் மசி(35) மற்றும் அவரது மனைவி ஷமா(31) ஆகியோர் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர். அந்த கிறிஸ்தவ தம்பதியர் இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆனின் பக்கங்களை தீயிட்டு கொளுத்தி, அந்த புனித நூலை அவமதித்து விட்டதாக சக் கிராமத்தில் உள்ள இரண்டு மசூதிகளின் மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த மாதம் 4-ம் தேதி தகவல் பரவியது. இதைக் கேட்டு கொதித்தெழுந்த ஏராளமானவர்கள் உள்ளூர் மதத் தலைவரின் தலைமையில் முஹம்மத் யூசுப் குஜ்ஜாரின் செங்கல் சூளைக்கு விரைந்தனர். சஹ்ஜாத் மசியின் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த அந்த கும்பல், அந்த தம்பதியரை குடிசையை விட்டு வெளியே இழுத்து, அடித்தும் உதைத்தும் சித்ரவதை செய்தது.இதிலும் ஆவேசம் தணியாத சிலர் சஹ்ஜாத் மசி மற்றும் அவரது மனைவி ஷமாவை தூக்கி கொழுந்து விட்டு எரிந்த செங்கல் சூளை தீக்குள் வீசினர். இதில் உடல் கருகி அந்த தம்பதியர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக பலரிடம் போலீசார் விசாரித்தனர். இவர்களில் சிலர் மீது லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய செங்கல் சூளையின் உரிமையாளர், இரண்டு மதகுருக்கள், 4 பெண்கள் உள்பட 59 பேர் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி மாதம் 2-ம் தேதி முதல் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பெற்றோரை இழந்த இந்த தம்பதியரின் குழந்தைகளுக்கு 50 லட்சம் ரூபாயும், 10 ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என பஞ்சாப் மாகாண முதல் அந்திரி ஷாபாஸ் ஷரிப் அறிவித்துள்ளார் maalaimalar.com

கருத்துகள் இல்லை: