வியாழன், 11 செப்டம்பர், 2014

சினிமாவின் பார்ப்பன புனித மரபை ‘தீட்டாக்கி’ இருக்கிறது, ‘பொறியாளன் !

திரைப்பட இயக்குநர்களில் தமிழ்த் தேசியம், பெரியாரியம், தலித் அரசியல் என்று பேசிய பலரும் அவர்கள் எடுத்த திரைப்படங்களுக்குள் மணிரத்தினம் போலவே முஸ்லிம்களை, கிறித்துவர்களை வில்லன்களாகவும் தலித் அடையாளம் கொண்டவர்களை ரவுடிகளாகவும் சித்தரித்தார்கள்.
தன்னை கேலி செய்கிற பார்ப்பன ஊடங்களை எதிர்க்கும்போது மட்டும் பெரியாரியவாதியாக அடையப்படுத்திக் கொண்டவர் கூட, தமிழ் உணர்வு முற்றி தரமணி என்று இந்தியிலும் பெயர் வைத்திருக்கிறார்.
இப்படியான தமிழ் சினிமாவிற்குள் எல்லா ஜாதியிலும் வில்லன்கள் வந்திருக்கிறார்கள் ஆனால் பார்ப்பனரிலிருந்து ஒரு தீவிரமான வில்லனை காட்டியதில்லை.
அதுவும் பார்ப்பன புனிதத்தின் ஓட்டு மொத்த அடையாளமான ஜெயேந்திரன் கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குப் போய் வந்த பிறகும் கூட

சேகுவாரவின் சிலிர்ப்பும், மவோவின் மனதும், பெரியாரிய, பிரபாகரனிய, தமிழ்த் தேசிய உணர்வும் கொண்ட மணிவண்ணனைப் போன்ற இயக்குநர்கள் கூட, பார்ப்பன காதாபத்திரங்களை வில்லன்களாக காட்டியதில்லை; மாறாக, புனிதமானவர்களாக, மனிதாபிமானிகளாக, எழுத்தாளர் ‘அப்பாவி’ அசோமித்திரனை போல் பயந்த சுபாவம் உள்ளவர்களாக காட்டினார்கள்.
தமிழ் சினிமாவின் இந்தப் பார்ப்பன புனித மரபை ‘தீட்டாக்கி’ இருக்கிறது, ‘பொறியாளன்’ திரைப்படம்.
பார்ப்பன மொழியில், வெண்ணையில் வழுக்குகிற ‘நீதி, நேர்மை, தகுதி, திறமை’ வார்த்தைகளோடு நுட்பமான வில்லத்தனத்தை செய்கிறார் ஒரு தகுதி நிறைந்த திறமையாளர். பெயரே ‘சாஸ்திரி’. அவர் செய்கிற திறமையான மோசடிகளை படம் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். படம் மிக சுவாரஸ்யமாக அதுவும் பிற்பகுதி வேகமாக செல்கிறது.
இந்தப் படத்தை உள்ளே புகுந்து தனி தனியாக கழட்டி விமர்சிப்பதை விடவும், இதைக் கொண்டாடி வரவேற்பதே முக்கியமானது.
அப்போதுதான் தெரியும், எல்லா ஜாதியில் உள்ளவர்கள் போலவும் பார்ப்பனர்களிலும் வில்லன்கள் உண்டு என்பது.
நடிகவேள் எம்.ஆர். ராதா சிறையில் இருந்தபோது, ஒரு பார்ப்பனர் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு வந்திருக்கிறார். ‘பார்ப்பனர்களை அய்யர் என்று அழைக்கக்கூடாது’ என்கிற பெரியார் கருத்தில் ஊறிய நடிகவேள், அந்தக் கைதியை ‘அய்யிரே.. அய்யிரே..’ என்று உரக்கக் கூவி அடிக்கடி அழைப்பாராம்.
உடன் இருந்தவர் நடிகவேளிடம்,”நீங்கதான் அய்யர்ன்னு சொல்லமாட்டிங்களே, அப்புறம் எதுக்கு அவரை அய்யர் அய்யர்ன்னு கூப்படுறீங்க?” என்று கேட்டாரம்.
அதற்கு நடிகவேள், “அய்யர்ன்னா யோக்கியமானவன்னு ரொம்ப பயலுங்க நினைச்சிக்கிட்டு இருக்கான். திருட்டு வழக்கில வந்திருக்கிறவன் ஒரு அய்யர்ன்னு மத்த கைதிக்கெல்லாம் தெரியுட்டுமேன்னுதாய்யா அப்படி கூப்பிடுரேன்” என்றாராம்.
நடிகவேளை போல் இந்தப் படத்தை நாமும் உரக்கக் கூவி வரவேற்போம். தெரியட்டுமே எல்லாருக்கும்.
மணிரத்தினத்தின் ரோஜா படத்தின் வெற்றிக்குப் பிறகு, இஸ்லாமிய இயக்குநர்கள்கூட வில்லன்களாக முஸ்லிமை காட்டினார்கள்.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு இனி வரும் படங்களில் வில்லன்களாக பார்ப்பனர்களை காட்டுவார்களா? அதெப்படி.. முடியும்?
இயக்குநர் தாணு குமார், கதை திரைக்கதை வசனம் எழுதிய மணிமாறன், தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் வெற்றிமாறன் இவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதை விட நன்றி தெரிவிப்பதே சிறந்தது.  mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: