புதன், 2 ஜூலை, 2014

ஷாஜஹானின் கோடைக்கால அரண்மனை கண்டுபிடிப்பு ! கூடவே தாஜ்மஹாலின் உண்மை கதையையும் வெளியே கொண்டாங்கப்பா !


இந்தியத் தொல்லியல்துறை சமீபத்தில் ஆக்ராவில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் தாஜ்மஹாலுக்கு எதிரே ஒரு கோடைக்கால அரண்மனையின் சிதிலங்களைக் கண்டுபிடித்துள்ளது. காற்றோட்டம் நிரம்பிய பெரிய மண்டபம் போன்ற நூற்றாண்டுகள் கடந்த இந்த அமைப்பானது தாஜ்மஹாலுக்கு எதிரே உள்ள முகலாயர் காலத்திய தோட்டமான மெஹ்தாப் பாகில் அமைந்துள்ளது. உருது மொழியில் நிலவொளி என்று பொருள்படும் இந்தத் தோட்டம் ஷாஜஹானுக்கு மிகவும் பிடித்த இடமாகும். இங்கு அமர்ந்துதான் அவர் தாஜ்மஹாலின் அழகினை ரசிப்பார் என்று கூறப்படுகின்றது. இதனால் யமுனை ஆற்றங்கரையோரம் உள்ள இந்த கட்டிடமானது ஷாஜஹானால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று மூத்த தொல்லியல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


காலப்போக்கில் ஏற்பட்ட வெள்ளத்தினாலோ அல்லது கட்டிடத்தின் கீழே இருந்த மிகப்பெரிய வெற்றிடத்தினாலோ அந்தக் கட்டிடம் மூழ்கியிருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். இதுதவிர மெஹ்தாப் பாகை கருப்பு தாஜ்மஹால் ஒன்றுடன் இணைத்து வெளிநாட்டவர்களுக்குக் கூறுவதை அங்குள்ள வழிகாட்டிகள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். கறுப்புப் பளிங்கில் அங்கு ஒரு தாஜ்மஹால் கட்டி இரண்டையும் ஒரு பாலத்தினால் இணைக்க ஷாஜஹான் எண்ணியிருந்ததாகவும், தற்போது கண்டெடுக்கப்பட்ட கட்டிட சிதிலங்கள் அத்தகைய கருப்பு மாளிகையின் அடித்தளமாகவும் இருக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் கருப்பு தாஜ்மஹால் இருந்ததை நிரூபிக்க எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார். கடந்த 1997 முதல் 1999-ம் ஆண்டுகளில் மொகல் தோட்டத்தின் கிழக்குப் பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டபோது காற்றோட்டமான மண்டபம், 25 நீரூற்றுகளைக் கொண்ட பெரிய எண்கோணத் தொட்டி, சிறிய மையத் தொட்டி போன்றவற்றின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இப்போது தாஜ்மஹாலுக்கு நேர் எதிரே தோட்டத்தின் தெற்குப் பகுதியில் ஆய்வுகள் நடத்தப்படுவதால் இது மிகவும் சுவாரஸ்யத்தைத் தருவதாக இருக்கின்றது என்றும் தொல்லியல் அதிகாரி கூறினார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: