திங்கள், 30 ஜூன், 2014

இந்த ஆட்சியில் வீட்டு வசதித் துறையில் கட்டிட அனுமதி வழங்குவதெல்லாம் எவ்வாறு ?

சென்னை 11 மாடி கட்டிட விபத்து விவகாரம் :
கலைஞர் எழுப்பும் கேள்வி
 திமுக தலைவர் கலைஞர் கேள்வி - பதில்கள் :
 கேள்வி :- சென்னை போரூரில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து பலரும் பலியானது குறித்து வந்துள்ள செய்திகளில், அந்தக் கட்டிடத்திற்கு விதிகளை தளர்த்தி இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டதாகச் செய்திகள் வந்திருக்கிறதே?
கலைஞர் :- அந்தக் கட்டிடத்திற்கு அனுமதி வழங்கிய சி.எம்.டி.ஏ. மீது தவறு இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால் அந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள், “இது தொடர்பான அறிக்கையை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு நேற்று அனுப்பினர்.

இடிந்து விழுந்த கட்டடத்துக்கு திட்ட அனுமதி வழங்கிய நிலையில் இருந்தே, பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்பது அரசுக்கு அனுப்பப்பட் டுள்ள அறிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது. மனையில் பக்கவாட்டு காலியிடம் விடுவதில் விதிமீறல்கள் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்தது. இதுகுறித்து விவாதிக்க, சி.எம்.டி.ஏ.வின் அடுக்கு மாடிக் கட்டடங்களுக்கான உயர்நிலைக் குழுக் கூட்டம் 2012 ஆகஸ்ட் 17ம் தேதி நடந்தது. அதில் “சாலை அகல வேறுபாடு மீறல் இருப்பதால், இந்த விண்ணப்பத்துக்கு விதிகளை தளர்த்தலாம்” என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும், அந்த மனையில் முறையாக அங்கீகாரம் இல்லாமல் நில உட்பிரிவு செய்ததையும், வரன்முறை செய்யவும், பக்கவாட்டு காலியிட விதி மீறலையும் வரன்முறை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது” என்றெல்லாம் அந்த அறிக்கையிலே உள்ளதாக பத்திரிகைகளிலே வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் அந்தப் பத்திரிகை செய்தியில், “இந்தக் கட்டுமான திட்டத்தில் விதி மீறல் இருப்பது விண்ணப்ப நிலையிலேயே தெரியவந்த போதிலும் அதை வரன்முறை செய்ய சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் அக்கறை காட்டியது ஏன்? சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் பரிந்துரை அடிப்படையில், இந்த நிறுவனத்துக்கு சாதகமாக விதிகளைத் தளர்த்தி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இரண்டு அரசாணைகள் பிறப்பித்தது ஏன்?” என்றெல்லாம் கேட்டுள்ளது. அரசுத் தரப்பிலே இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? முதலமைச் சர் ஜெயலலிதா அந்த இடத்தைப் பார்க்க வருகை தருகிறார் என்பதற்காக இடிபாடுகளில் சிக்கியவர் களை மீட்கும் பணியில் கால தாமதம் ஏற்பட்டது என்றும், செய்தியாளர் ஒருவர் அதுகுறித்து முதல் அமைச்சரிடம் கேள்வி கேட்டதாகவும் ஆனால் அந்தக் கேள்வியை உள்நோக்கம் கொண்டது என்று கூறி முதல்வர் பதில் அளிக்கவில்லை என்றும் ஏடுகளில் செய்தி வந்துள்ளது.
 பொதுவாக இந்த ஆட்சியில் வீட்டு வசதித் துறையில் கட்டிட அனுமதி வழங்குவதெல்லாம் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதற்கு முறையாக ஒரு விசாரணைக் குழு அமைத்து ஆராயப்பட வேண்டு மென்றும், தற்போது விழுந்த கட்டிடத்தைப்போல பல கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட் டுள்ளன என்றும் கூறப்படுகிறது. இந்த அய்யங்களைப் போக்க வேண்டியது அரசின் கடமை nakkheeran.in

கருத்துகள் இல்லை: