திங்கள், 16 ஜூன், 2014

கலைஞர் : ஜெயலலிதா ஏன் திமுகவையே சுற்றிச் சுற்றி சிந்திக்கிறார் ? உண்மையான வெற்றி யாருக்கு ?

முதலமைச்சர் ஜெயலலிதா 13-6-2014 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டுமென்று கடிதம் எழுதியிருப்பதாக அனைத்து நாளேடுகளிலும் செய்தி வந்துள்ளது. ஆனால் இதே முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 10-6-2014 அன்று ஒரு நீண்ட அறிக்கை எனக்குப் பதில் அளித்து வெளியிட்டார். `காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது பற்றி கர்நாடகா மாநிலத்தில், அங்குள்ள முதலமைச்சர் அங்கேயுள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அழைத்து அவர் களின் கருத்துகளைக் கேட்கிறார், அவர்களை அழைத்துக்கொண்டு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து முறையிடுகிறார், அதுபோல தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து ஏன் பேசக் கூடாது?’’ என்று நான் கேட்டதற்குப் பதிலளித்துத்தான் முதலமைச்சர் அந்த அறிக்கையினை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில்; பாரதப் பிரதமரிடம் தான் அளித்த கோரிக்கையை பிரதமர் கனிவுடன் கேட்டு ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார் என்றும், தமிழகத்திற்கு உதவும் எண்ணத்தில் பாரதப் பிரதமர் இருக்கிறார் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது காவிரி நடுவர் மன்றத்தின் அம்சமாகும் என்றும், அதனைச் செயல்படுத்த மத்திய அரசிற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்து விட்டு, மூன்றே நாளில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டுமென்று கடிதம் எழுதியிருக்கிறார் என்றால், 10ஆம் தேதிய அறிக்கையில் பிரதமருக்கு கால அவகாசம் தர வேண்டுமென்று அவர் எழுதியதை அவரே மறந்து விட்டாரா?
பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய அந்தக் கடிதத்தில் தேவையில்லாமல் தி.மு.க.வை ஜெயலலிதா வீண் வம்புக்கு இழுத்துள்ளார். ஏற்கனவே ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசை வற்புறுத்தவில்லை என்ற ஒரு குற்றச் சாற்றினையும் ஜெயலலிதா தனது அறிக்கையில் வழக்கம்போல சொல்லியிருக்கிறார்.

காவேரிப் பிரச்சினை ஆனாலும், கச்சத் தீவுப் பிரச்சினை ஆனாலும், இலங்கைப் பிரச்சினை ஆனாலும் ஜெயலலிதாவுக்கு தி.மு. கழகத்தைக் குற்றம் சொல்லாவிட்டால் தூக்கம் வராது போலும்! காவேரிப் பிரச்சினை குறித்து ஜெயலலிதா தி.மு.க. மீது குற்றம் சாட்டி, அதற்கு நான் எத்தனை முறைதான் பதிலளிப்பது? காவேரி நடுவர்மன்ற இடைக்கால ஆணையை தனது இடைவிடா முயற்சிகளால் பெற்றுக் கொண்டு வந்ததைப் போல ஜெயலலிதா பேரவையிலேயே கூறினார். காவேரி நடுவர் மன்றம் என்ற ஒன்று அமைக்கப்பட வேண்டு மென்று முதன் முதலாக தி.மு. கழகம் ஆட்சி யிலே இருந்த போது தான் 17-2-1970 அன்று மத்திய அரசுக்குக் கடிதமே எழுதப்பட்டது. நடுவர் மன்றம் அமைத்திட வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தி.மு.கழக ஆட்சியிலேதான் 8-7-1971 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போதுதான், 27-7-1989 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று, நடுவர் மன்றம் அமைக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. தவிர அனைத் துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

2-12-1989 அன்று திரு.வி.பி. சிங் அவர்கள் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, நடுவர் மன்றம் அமைக்கக் கோரி கடிதம் எழுதி னேன். பேரவையிலே அதைப் பற்றித் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி அனுப்புமாறு வி.பி. சிங் அவர்கள் என்னிடம் தெரிவித்ததின்பேரில், 24-4-1990 அன்று நடுவர் மன்றம் தேவை என்று பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் விளைவாகத் தான் 2-6-1990 அன்று நடுவர் மன்றம் அதுவும் தி.மு.கழக ஆட்சியிலே, நான் முதலமைச்சராக இருந்த போதுதான் அமைந்தது.

28-7-1990இல் கழக ஆட்சியில்தான் இடைக்காலத் தீர்ப்பினைக் கோரி நடுவர் மன்றத்தில் மனுச் செய்தோம். 5-1-1991 அன்று இடைக்காலத் தீர்ப்பு வழங்கிட தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நடுவர் மன்றம் கூறியது. நடுவர் மன்றத்துக்கு அதிகாரம் உண்டா இல்லையா என்று தீர்ப்பளியுங்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் 10-1-1991 அன்று தி.மு. கழக ஆட்சியிலே வழக்குத் தொடர்ந்து, 26-4-1991 அன்று உச்சநீதிமன்றம் “அதிகாரம் உண்டு” என்று தீர்ப்பு வழங்கியது.


கழக ஆட்சியில் கோரிப் பெற்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாகவே 25-6-1991இல் நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பினை அளித்தது. இதற்கிடையில்தான் 31-1-1991 அன்று கழக ஆட்சி கலைக்கப்பட்டு, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவரது ஆட்சிக் காலத்தில் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளிவந்த போதிலும், எந்தவிதமான விளைவுகளும் ஏற்படவில்லை. 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா ஆட்சியில் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற எந்தவிதமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.


1996ஆம் ஆண்டு மீண்டும் தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, நடுவர் மன்றத்தின் ஆணையைச் செயல்படுத்துவதில் தாமதத்தைத் தவிர்க்கும் வண்ணம், திட்டத்தை இறுதி செய்து அரசிதழில் வெளியிட வேண்டுமென்று 9-7-1997, 23-7-1997, 29-9-1997, 1-11-1997, 6-11-1997 ஆகிய நாட்களில் பிரதமருக்கு நான் எழுதிய கடிதங்கள் மூலமாகவும், 27-7-1997 மற்றும் 29-9-1997 ஆகிய நாட்களில் பிரதமரை நேரில் சந்தித்த போதும் கேட்டுக் கொண்டேன்.

மேலும் 10-11-1997 அன்று மத்திய அரசுக்கு அப்படியொரு ஆணை பிறப்பிக்க உச்சநீதிமன் றத்தில் முறையீட்டு மனு ஒன்றும் தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டது. மீண்டும் 28-3-1998, 6-4-1998 மற்றும் 31-5-1998 ஆகிய நாட்களில் பிரதமருக்குக் கடிதம் மூலமாகவும், 7-4-1998 அன்று நேரில் சந்தித்தும், வரைவுத் திட்டத்தை இறுதி செய்து அரசிதழில் வெளியிடக் கேட்டுக் கொண்டேன். 


21-7-1998 அன்று உச்சநீதிமன்றம், “பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்கப் போவதாக மத்திய அரசு உறுதியளித்து 15 மாதமாகிறது, இன்னமும் இணக்கமான திட்டம் உருவாக்கப் படவில்லை, இந்த நிலை நீடித்துக் கொண்டே போவதை அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தது.

28-7-1998 அன்று பிரதமர் வாஜ்பாய் அவர்கள், 6-8-1998 அன்று பிரதமர் அலுவலகத்தில் காவிரிப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்காக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் என்னைக் கலந்து கொள்ள கடிதம் எழுதியிருந்தார். அதிலே கலந்து கொள்வது பற்றி 3-8-1998 அன்று தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, பிரதமர் நடத்தவிருந்த கூட்டத்தில் நான் கலந்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா, ``அந்தக் கூட்டத்திற்கு நான் செல்லக் கூடாது’’ என்று அறிக்கை விடுத்தார்.


பிரதமர் வாஜ்பாய் அவர்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடத்திய அந்தக் கூட்டத்தின் இறுதியில்தான், 7-8-1998இல் தி.மு. கழக ஆட்சியில் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்று வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத் தின்படி இடைக்கால ஆணையில் கூறப்பட்ட 205 டி.எம்.சி. தண்ணீர் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், பிரதமர் தலைமையில் காவிரி பாயும் நான்கு மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி ஆணையம் அமைக்கப்படும் என்றும் முடிவாயிற்று. அந்த ஒப்பந்தத்தை சி.சுப்பிரமணியம், ஜி.கே. மூப்பனார், சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு, அப்துல் சமது, எம்.ஏ. லத்தீப், குமரிஅனந்தன், திண்டிவனம் ராமமூர்த்தி, ஆர்.எம். வீரப்பன், ஜி.ஏ.வடிவேலு, இல.கணேசன், எஸ். திருநாவுக்கரசு, பேராயர் எஸ்றா சற்குணம் போன்ற தலைவர்களும் மற்றும் நாளேடுகளும் பாராட்டின. இதுதான் உண்மையில் நடந்த வரலாறு.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தத்தை அனைத்துக் கட்சித் தலைவர்களும், ஏடுகளும் பாராட்டியபோது ஜெயலலிதா அதனை வரவேற்றாரா என்றால் இல்லை. மாறாக அந்தத் தீர்வினை நிராகரிக்கிறோம் என்றும், அதனை ஏற்கமாட்டோம் என்றும் கூறினார்.


அந்த முடிவு காண வழி வகுத்தவர், பா.ஜ.க. பிரதமராக இருந்த திரு. வாஜ்பாய். அப்போது அவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தவர். இருந்தாலும், அந்தக் கூட்டணி யிலே இல்லாத தி.மு.க.வின் தலைவனான என்னை அழைத்து சுமூக முடிவு கண்டார். ஆனால் மத்திய அரசில் இடம் பெற்ற அ.தி.மு.க. தலைவி அந்த ஒப்பந்தம் பற்றி பத்திரிகையாளர்களிடம் என்ன கூறினார் தெரியுமா?

“காவிரிப் பிரச்சினையில் வாஜ்பாய், கருணாநிதியின் தந்திரத்திற்கு ஆளாகி விட்டார். இரண்டு பேரும் சேர்ந்து செய்து கொண்டிருக்கின்ற உடன்பாட்டை நாங்கள் நிராகரிக்கிறோம்” என்றார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தி.மு.கழக ஆட்சியிலேதான் 5-2-2007 அன்று வெளியிடப்பட்டது. இந்தத் தீர்ப்பினை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த எம். கிருஷ்ணசாமி, திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் ரெங்கநாதன், உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் கே.எஸ்.நடராசன் ஆகியோர் அப்போது வரவேற்று அறிக்கை கொடுத்தனர்.


ஆனால் அ.தி.மு.க.வின் சார்பில் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் இறுதித் தீர்ப்பை “ஏற்க முடியாத தீர்ப்பு” என்றும், “கருணாநிதியால் காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் மூலம் தமிழகத்திற்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தீர்ப்பை முழுமையாகப் பெற்றுத் தர முடியவில்லை. இந்த இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்குப் பாதகமாக வந்துள்ளது. இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று தி.மு.க. அரசு ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும் எப்போதும் போல எனது ராஜினாமாவை வலியுறுத்தி அறிக்கை விடுத்தார்.

அந்த ஜெயலலிதாதான், இப்போது நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட அவர்தான் பாடுபட்டதாகச் சொல்லிக் கொள்கிறார். அதற்காக தி.மு.க. எந்தவிதமான முயற்சியும் எடுக்க வில்லை என்கிறார்.


காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்த போது கூட, தி.மு.கழக அரசு அந்த நிலையிலும், இந்த இறுதித் தீர்ப்பு குறித்து ஜெயலலிதாவைப் போலத் தன்னிச்சையாக முடிவெடுக்க விரும்பாமல், 19-2-2007 அன்றும் 15-4-2007 அன்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டித்தான் முடிவெடுத்தது. ஆனால் தற்போது ஜனநாயக மரபுகளைப் போற்றக் கூடிய வகையில், அவ்வாறு எந்தஅனைத்துக் கட்சிக் கூட்டமும் கூட்டப்படாமல், தமிழக முதலமைச்சர்; தான் நினைத்ததே முடிவு என்பதைப் போலச் செயல்பட்டு வருகிறார்.

எனவே ஜெயலலிதா காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பையும் ஏற்க வில்லை, இறுதித் தீர்ப்பையும் ஏற்கவில்லை என்பதுதான் உண்மை. காவிரி நதி நீர் ஆணையத்தையாவது ஏற்றுக் கொண்டாரா?


காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டு, 11-8-1998 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2-4-2002 அன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா, “செயல்படாத ஆணையம் காவேரி ஆணையம்”, “பல் இல்லாத ஆணையம்”; ``அந்த ஆணையத்தை ஏற்காமல் நாங்கள் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினோம்” என்று சொன்னார்.

21-6-2002 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் “எவ்வித அதிகாரமும் இல்லாமல், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைத் திறம்படச் செயல்படுத்த இயலாத நிலையில் காவிரி நதி நீர் ஆணையம் உள்ளது. எனவே இந்த ஆணை யத்தின் கூட்டங்களில் இனிமேல் தமிழ்நாடு கலந்து கொள்ளாது” என்று விளைவுகளைப் பற்றி விரிவாக எண்ணிப் பார்க்காமல் கொண்டதே கோலம் என்ற பாணியில் முடிவெடுத்து அறிவித்தார்.


காவேரி ஆணையத்தைப் புறக்கணிப்போம் என்று 2002ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் தெரிவித்தவர்தான் ஜெயலலிதா. அதற்கடுத்த நாள் “அழைத்தால் பார்க்கலாம்” என்றார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் ஆட்சியிலே இல்லாத நேரத்திலே கூட, 5-7-2002 அன்று பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு காவிரி நதி நீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டுமென்று கோரி கடிதம் எழுதினேன்.


நான் எழுதிய கடிதத்திற்கு 10-7-2002 அன்று பிரதமர் வாஜபாய் எழுதிய பதில் கடிதத்தில், அதைப்பற்றிக் கவனிப்பதாகக் கூறியிருந்தார். அவ்வாறே காவிரி நதி நீர் ஆணையம் கூட்டப் பட்டது. டெல்லியில் பிரதமர் கலந்து கொண்ட காவேரி ஆணையக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டபோதே 27-8-2002 அன்று அங்கே சுமூகமாகப் பேசித் தண்ணீரைப்  பெறுவதற்கான வழிவகை காணாமல், அவருக்கே உள்ள முன்கோபம் காரணமாக பிரச்சினையின் அவசர முக்கியத்துவத்தை மறந்து, இடையிலே வெளிநடப்புச் செய்வதாகக் கூறிவிட்டு, வெளியே வந்து விட்டார்.


29-11-2002 அன்று மீண்டும் காவேரி ஆணையக் கூட்டம்.கர்நாடக முதல் அமைச்சர் முதல் நாளே சென்றுவிட்டார். ஆனால் நம்முடைய முதல் அமைச்சர் ஜெயலலிதா கடைசி நிமிடம் வரை வருவதாகச் சொல்லி விட்டு, பிறகு டெல்லிப் பயணத்தையே ரத்து செய்து விட்டார். யாருக்கு இழப்பு? தமிழ்நாட்டு விவசாயி களுக்குத்தான்!


இதற்கிடையில் “பிரதமர் வாஜ்பாய் தலைமை யிலான காவிரி நதிநீர் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதியது, கடுமையான ஆட்சேபத்துக்குரியது ; அந்த அவதூறுக் கடிதத்தை நான்கு நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும்” என்று தமிழக அரசு வழக்கறிஞரிடம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.


தமிழக அரசின் வழக்கறிஞரான திரு. கே.கே. வேணுகோபால், நீதிபதிகளிடம், “பிரதமர் மீதும், அவரது தலைமையில் செயல் படும் காவிரி நதிநீர் ஆணையத்தின் மீதும் தமிழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. காவிரி நதி நீர் ஆணையத்தின் மீது நம்பிக்கை தெரிவித்தும், பிரதமர் வாஜ்பாய்க்கு இது தொடர்பாக எழுதிய கடிதத்தைத் திரும்பப் பெறுவதற்காகவும் மீண்டும் ஒரு கடிதத்தை வெகு விரைவில் பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர் ஜெய லலிதா எழுதி அனுப்புவார்” என்றும் தெரிவித்தார்.


அதற்கிணங்க, 16-11-2002 அன்று பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், “பிரதமர் மீது தனிப்பட்ட முறையில்தான் மிகுந்த மதிப்பு வைத்திருப்ப தாகவும், ஏற்கனவே தான் சொன்ன அத்தனையையும் மறந்து விட்டு காவேரி ஆணையத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருப் பதாகவும்” எழுதியிருந்தார்.


காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் ஜெயலலிதா ஒவ்வொரு கட்டத்திலும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களைப் புறக்கணித்து எவ்வாறெல்லாம் நடந்து கொண்டார் என்பதைத் தொகுத்துக் கூற வேண்டுமேயானால், நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கிய போதும், ``கர்நாடக அரசாகத் தண்ணீர் திறந்து விட்டால்தான் உண்டு’’ என்று சொன்னவர் தான் ஜெயலலிதா. இடைக்கால ஆணையை நடைமுறைப் படுத்துவது பற்றி மத்திய அரசு விளக்கம் கேட்டு, ஒன்பது மாத கால தாமதத்திற்குப் பிறகு பதில் அனுப்பியவர்தான் ஜெயலலிதா. இடைக்கால ஆணையை நடைமுறைப் படுத்த 1991 முதல் 1996 வரை ஐந்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்த ஜெயலலிதா எந்த முயற்சியும் எடுக்கவில்லை பிரதமர் வி.பி. சிங்கிடம், அ.தி.மு.க. சார்பில் கொடுத்த மனுவில்; ``1974ஆம் ஆண்டோடு காவிரி ஒப்பந்தம் முடிந்து விட்டது’’ என்று எழுதிக் கொடுத்தவர்தான் ஜெயலலிதா. 29-11-2002 அன்று காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், ரத்து செய்தவர் ஜெயலலிதா. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். 

ஊருக்கும் உலகத்திற்கும் இந்தத் தேதிவாரி நிகழ்ச்சிகள் மறந்து போயிருக்கும், தான் எதை வேண்டுமானாலும் கூறலாம் என்ற நினைப்பில் தான் ஜெயலலிதா என் மீது புழுதிவாரி இறைக்க எண்ணுகிறார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கலாம். ஆனால் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை விடுவதாக இருந்தாலும், பிரதமருக்குக் கடிதம் எழுதுவதாக இருந்தாலும் அவருடைய எண்ணம் தி.மு.கழகத்தையே சுற்றிச் சுற்றி வருவதில் இருந்தே, உண்மையான வெற்றி யாருக்கு என்பதை உலகம் புரிந்து கொள்ளும்  nakkheeran.in/

கருத்துகள் இல்லை: