திங்கள், 16 ஜூன், 2014

டெல்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல் !

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் 28 இடங்களை பிடித்த ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் அரசு அமைத்தது. ஆனால் சட்டசபையில் ஜனலோக்பால் மசோதா நிறைவேற்ற முடியாததால், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெறும் 49 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் பரிந்துரையின் பேரில், கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் படுதோல்வியை சந்தித்தது. அங்கு மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் தங்களால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த ஆம் ஆத்மியினர், காங்கிரஸ் ஆதரவுடன் அங்கு மீண்டும் அரசு அமைக்க முயன்றனர்.


ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்த காங்கிரஸ் கட்சி, டெல்லி மக்களை ஏமாற்றிய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மீண்டும் ஆட்சியமைக்க ஆதரவு தரமாட்டோம் என தெரிவித்தது. மேலும் தற்போதைய சூழ்நிலையில் டெல்லியில் புதிய தேர்தல் நடத்துவதே ஒரே வழி என அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயார் என ஆம் ஆத்மி அறிவித்தது. மேலும் தங்கள் கட்சி தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டதாகவும் அக் கட்சித்தலைவர்கள் கூறினர்.

ஆனால் டெல்லியில் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க 3 கட்சிகளையும் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் விரும்பவில்லை. இது தொடர்பாக பா.ஜனதாவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் கட்சித்தலைமையிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆனால் தேர்தலுக்கு தயாராகுமாறு அவர்களிடம் கட்சித்தலைமை வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் விஜேந்தர் குப்தா கூறுகையில், 'தற்போதைய சூழ்நிலையில் டெல்லியில் எந்த கட்சியும் அரசு அமைக்க முடியாது. எனவே இங்கு புதிதாக தேர்தல் நடத்துவதே ஒரே வழி. இந்த தேர்தலை சந்திக்க பா.ஜனதா தயாராக உள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் கட்சி ஏற்கனவே தொடங்கி விட்டது' என்றார்.

மேலும் அவர் கூறும்போது, 'இங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டியது ஆளுநரின் பிரத்யேக உரிமை. எனவே அவர் அளிக்கும் அறிக்கையின் படி மத்திய அரசு முடிவெடுக்கும்' என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் டெல்லி அரசியல் நிலவரம் குறித்து விரைவில் மத்திய அரசுக்கு துணைநிலை ஆளுநர் அறிக்கை சமர்ப்பிப்பார் என தெரிகிறது. இதைத்தொடர்ந்து டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிப்பதா? அல்லது தேர்தல் நடத்துவதா? என்பது குறித்து மத்திய மந்திரிசபை கூடி முடிவு செய்யும்.

டெல்லியில் புதிய தேர்தலை சந்திக்க காங்கிரஸ், பா.ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகள் தயாராக உள்ள நிலையில், அங்கு விரைவில் தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு பரிந்துரை செய்யும் என கூறப்படுகிறது. அதன்படி 6 மாதங்களுக்குள் அங்கு தேர்தல் நடந்து புதிய அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: