வியாழன், 19 ஜூன், 2014

ஸ்டாலின் மீது மாவட்ட( மாபியா ) செயலாளர்கள் கடும்கோபம் ?

மாவட்டங்கள் பிரிப்பு விவகாரத்தில், கருணாநிதியின் முடிவில் மாற்றம் இல்லை என்பதால், தற்போதைய மாவட்ட செயலர்களில் பலர், வழிக்கு வரத் துவங்கி உள்ளனர். இருந்தும், சிலர் தொடர்ந்து, தலைமையின் முடிவை கடுமையாக விமர்சித்து வரும் தகவல், அறிவாலயத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.,வில் மாவட்ட செயலர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், கட்சி மாவட்டங்கள் எண்ணிக்கை, 65 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், ஏற்கனவே உள்ள, 35 மாவட்ட செயலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.அவர்களது, அதிகார எல்லை குறைக்கப்பட்டுள்ளதால், அடுத்து என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து, ஆங்காங்கே மாவட்ட செயலர்கள், கோஷ்டி கோஷ்டியாக கூடிப் பேசி வருகின்றனர்.இந்நிலையில், பொன்முடி, ஜெ.அன்பழகன், தா.மோ.அன்பரசன் போன்ற சில மாவட்ட செயலர்கள், சென்னையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து, இதுகுறித்து முறையிட்டனர். ஆனால், அவர், இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என, திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக தெரிகிறது.இதனால், சிறிய மாவட்டமாக இருந்தாலும் பரவாயில்லை; பதவியை தக்க வைத்தால் போதும் என்ற முடிவுக்கு, சில மாவட்ட செயலர்கள் வந்து விட்டனர் என, கூறப்படுகிறது.இதுகுறித்து, அறிவாலய வட்டாரம் கூறியதாவது:  அடிமைகளுக்கு கோபம் வந்தால் அடிமைகளுக்குத்தான் கெடுதல்

மாவட்டங்களின் எண்ணிக்கை, எப்போது, 65 ஆக அதிகரிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியானதோ, அப்போதே அது அமலுக்கு வந்து விட்டது. எனவே, தற்போதுள்ள மாவட்ட செயலர்கள், பதவி இழந்தவர்களாகி விட்டனர்.ஆனாலும், தேர்தல் நடத்தப்பட்டு, புதிய மாவட்ட செயலர்கள் அறிவிக்கப்படும் வரையில், அவர்கள் அந்த பொறுப்பில் இருக்கலாம்.தற்போதுள்ள மாவட்ட செயலர்களில், பழனி மாணிக்கம், எ.வ. வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், என்.கே.பி. ராஜா ஆகியோர், மாவட்ட செயலர்களாக நீடிக்க விரும்புகின்றனர். அதனால், சிறிய மாவட்டமாக இருந்தாலும், அந்த மாவட்டத்திற்கு பொறுப்பேற்க, தயாராக இருப்பதாக, தலைமைக்கு தகவல் அனுப்பி விட்டனர். ஆனால், சீனியர்களாக இருக்கும் ஒருசிலர் மட்டும், இந்த மாற்றத்தை ஏற்க மறுக்கின்றனர்.

இப்போது உள்ளவர்களே...
இதற்கிடையில், தென் மாவட்டங்களை சேர்ந்த, சில மாவட்ட செயலர்கள், இந்த விவகாரத்தில், ஸ்டாலின் மீது கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.மேலும், தற்போதுள்ள மாவட்ட அமைப்புகளில், கிளை, பேரூர், வார்டுகளுக்கு  நிர்வாகிகள் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிர்வாகிகள் தேர்தலை நடத்தியவர்கள், இப்போதுள்ள மாவட்ட செயலர்கள் தான். அவர்களது ஆதரவாளர்கள் தான், இதில் அதிகம் பேர் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில், புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கும், ஒன்றிய, நகர நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

மீண்டும் ஆதிக்கம்
இந்த தேர்தலில், கிளைக் கழக நிர்வாகிகள் தான் ஓட்டளித்து,மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். அப்படியொரு சூழல் இருப்பதால், அதிலும் தங்களது ஆதரவாளர்களே ஜெயிக்க முடியும் என, மாவட்ட செயலர்கள் கருதுகின்றனர். அதனால், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டாலும், ஒன்றிய, நகர மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்புக்கு, தங்களது ஆட்களே வருவதற்கான ஏற்பாடுகளை, கவனிக்கும் பணியில், சில மாவட்ட செயலர்கள் இப்போதே இறங்கி விட்டனர்.இது நடந்து விட்டால், 65 மாவட்டங்களிலும், தற்போது 35 மாவட்டங்களில் செயலர்களாக இருந்து கோலோச்சுபர்களே, மீண்டும் தங்கள் ஆதிக்கத்தைத் தொடருவர். அதை எப்படி தடுப்பது என்று புரியாமல், தலைமையில் தடுமாறுகின்றனர். இவ்வாறு, அறிவாலய வட்டாரம் தெரிவித்தது.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: