செவ்வாய், 31 டிசம்பர், 2013

2013 இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் திரைப்படங்கள்,

2013-ஆம் ஆண்டில் தனது 100-வது வருடத்தில் இந்திய சினிமா வெற்றிநடை போட்ட சமயத்தில் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படங்கள், தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த திரைப்படங்கள் என பல வகையான திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை திக்குமுக்காடச் செய்துவிட்டன. 

சூதுகவ்வும் - எப்போதும் எதாவதொரு இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மனித சமுதாயத்திற்கு ஓய்வளிக்க  சீரியசான விஷயங்களை காமெடியாக எதிர்கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தது சூதுகவ்வும். பிளாக் காமெடி வரிசை படங்களில் சூதுகவ்வும் திரைப்படம் ஒரு துவக்கம்.

மூடர்கூடம் - நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் சமுதாயத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று ரசிகர்களை ஆச்சர்யப்படவைத்தது முட்டாள்களின் உலகமான மூடர்க்கூடம் திரைப்படம்.
நேரம் - பிளாக் காமெடி வரிசையில் இந்த திரைப்படமும் ஒரு வைரக்கல் தான். தமிழ் சினிமாவிற்கு நஸ்ரியா நஸீம் என்ற ஒரு கியூட்டான நடிகையைக் கொடுத்த பெருமையும் நேரம் திரைப்படத்தையே சேரும். ’பிஸ்தா ஜமாய்க்கிறாயா’ என்ற பாடலை கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.


எதிர்நீச்சல் - உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு காமெடி, காதல், தோல்வி என எல்லா வகை ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் அமைந்திருந்தது எதிர்நீச்சல் திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. நடிகராக இருந்த தனுஷுக்கு தயாரிப்பாளர் என்ற பெயரையும், இன்னொரு படத்தை தயாரிக்கும் தன்னம்பிக்கையையும் கொடுத்அது எதிர்நீச்சல் திரைப்படத்தின் வெற்றிக்கு கிடைத்த பரிசு. 

ஹரிதாஸ் - பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கும் ஆட்டிசம் என்ற விஷயத்தை அழுத்தமாக சொன்ன திரைப்படம் ஹரிதாஸ். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுய நினைவு இல்லாமல் இல்லை. அவர்கள் வேறு உலகத்தில் இருக்கிறார்கள். அவர்களது உலகத்திற்கு நாம் செல்லவேண்டும் என பல தகவல்களை மக்களுக்கு எடுத்துரைத்ததும் ஹரிதாஸ் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணம். 


விழா - சாவு வீட்டிலும் பூத்துக்குலுங்கும் ஒரு அழகான காதல் கதை. ஆனால் ஒருவரின் இறப்பில் இவ்வளவு சம்பிரதாயங்கள் இருக்குமா என்று சம்பிரதாயங்களை மறந்து வாழும் நகரவாழ்மக்களை ஆச்சர்யப்படவைத்த படம். அதே போல அந்த சம்பிரதாயங்களில் உள்ள பிரச்சனைகளையும் அழுத்தமாக பதிவு செய்த திரைப்படம்.

மதயானைக்கூட்டம் - இந்த திரைப்படமும் ஒரு இறப்பு வீட்டில் நடக்கும் சம்பிரதாயங்களில் உள்ள பிரச்சனைகளை ஆதாரமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம் தான். 

தங்கமீன்கள் - தந்தை-மகள் இருவருக்கிடையேயான பாசப்போராட்டத்தை அழுத்தமாக பதிவு செய்தாலும் பரவலாக ரசிகர்களிடம் சென்று சேரவில்லை. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையிலும், நா.முத்துகுமாரின் வரிகளிலும் உருவான இத்திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் பல ரசிகர்களின் காலர் டியூனாய் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.

ஆதலால் காதல் செய்வீர் - சூழ்நிலைக்காரணத்தால் இன்றைய இளைய சமூகம் எந்த மாதிரி பாழாகிறார்கள் என்று தெளிவாக எடுத்துச்சொன்னது இத்திரைப்படம். சில மணி நேர திரைப்படம் மாதிரி இல்லாமல் ஒரு நாவல் மாதிரியான உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது இத்திரைப்படத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று. இயக்குனரின் தைரியமான கிளைமேக்ஸுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்களை பெற்றது.


பரதேசி - பாலா எப்போதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வை துணிச்சலாக பதிவு செய்யக்கூடியவர். தனது பாணியிலேயே ’பரதேசி’யை அமைத்து வெற்றிகண்டார். நியாயமாரே... என அழுது நெஞ்சை உருக வைத்த அதர்வாவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - மிஷ்கின் இந்த படத்தின் மூலமாக பல கஷ்டங்களை அனுபவித்தாலும், அவரது திரையுலக பயணத்தில் இது ஒரு கம்பீரமான பதிவு என்பது மறுக்கமுடியாதது. திரைக்கதையையும், இளையராஜாவின் இசையையும் போட்டி போட்டு ஓடவிட்டு கடைசியில் மிஷ்கின் வென்றுவிட்டார். படத்திற்கு பக்க பலமாக இளையராஜாவின் இசை ஓங்கிநின்றது.

பாண்டிய நாடு - சமூகத்தின் மீது சாமான்ய மனிதனுக்கு இருக்கும் விரக்தியையும் கோபத்தையும் அழுந்தச் சொன்ன படம் பாண்டிய நாடு. ஹீரோ கதாபாத்திரத்திலிருந்து வித்தியாசப்பட்டு சகஜமான மனிதனாகவே தன்னை மாற்றிக்கொண்டு நடித்த விஷால் இந்த படத்தின் மூலம் பல பாராட்டுகளைப் பெற்றார்.


மரியான் - புழுதி படிந்த சட்டையுடன், பாலைவனத்தில் ஓடி ஓடி அலைந்து திரிந்து ‘நான் தேசிய விருது வாங்கியவன்’ என்பதை நிரூபிக்கும் வகையில் நடித்திருந்தாலும் தனுஷின் கதாபாத்திரத்தை விட பார்வதி கேரக்டரே அதிகம் பேசப்பட்டதும், ரசிக்கப்பட்டதும். பார்வதியின் நடிப்பு, ரஹ்மானின் இசை, தனுஷ் என்ற பெரிய நடிகர் என பலமான கூட்டணி அமைந்தும் மரியான் சரியாக போகாதது அதிர்ச்சியான விஷயம்.

தலைமுறைகள் - பாலு மகேந்திரா இந்த வயதிலும் தமிழ் சினிமாவிற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்ததன் பயணாய் விளைந்த பதிவு இத்திரைப்படம். தொழில்நுட்பம் வளர்ந்தாலும், சினிமாவின் டிரெண்ட் மாறினாலும் நல்ல திரைக்கதையின் மூலம் எதையும் எப்போது வேண்டுமானாலும் ஆழமாக சொல்லிவிடமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் பாலு மகேந்திரா.

விஸ்வரூபம் - பல சர்ச்சைகளையும் பல பிரசனைகளையும் தாண்டி 

கமல்ஹாசன் வெற்றிகரமான ஒரு படைப்பாளியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட படம். இந்திய சினிமாவின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி என்று பல ஜாம்பாவான்களாலும் புகழப்பட்ட விஸ்வரூபம் cinema.nakkheeran.in

கருத்துகள் இல்லை: