செவ்வாய், 18 ஜூன், 2013

நியாயமான காதல் மறுக்கப்பட்டதால் அது கள்ள காதலாகி கொலையில் முடிந்தது ! ராமதாஸ்களுக்கு சமர்ப்பணம்

சீனிவாசன், கல்பனா, தினேஷ் பாபுகடலூர் மாவட்டம் பண்ருட்டி, காந்தி சாலையைச் சேர்ந்தவர் 30 வயது சீனிவாசன். அவருக்கும் பண்ருட்டி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த சந்திரசேகர் மகள் கல்பனாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. சீனிவாசன் சென்னையில் ஒரு மருந்துக் கடையில் வேலை செய்கிறார்.
சீனிவாசன், கல்பனா, தினேஷ் பாபு
திருமணம் முடிந்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் முகமாக சீனிவாசன் மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கிறார். திருமண விழாவை கொண்டாடிய பிறகு அவர் மனைவியுடன் உள்ளூரில் உள்ள திருவதிகை என்கிற இடத்தில் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது திடீரென்று வழிமறித்த ஒரு கும்பலால் கொலை செய்யப்படுகிறார். ஆனால் அந்த கும்பல் கல்பனாவை ஒன்றுமே செய்யவில்லை. ஏனெனில் அந்த கும்பலை கூலிக்கு அமர்த்தியதே கல்பனா தான்.
பள்ளி பருவத்திலிருந்தே கல்பனா அதே ஊரைச் சேர்ந்த தினேஷ் பாபுவை காதலித்து வந்திருக்கிறார். ஆனால் தினேஷ் பாபு வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் கல்பனா வீட்டில் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வீட்டாருடன் எவ்வளவு போராடியும் கல்பனாவின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கிடையில் காதலுக்காக காத்திருக்க முடியாத தினேஷ் அவரது வீட்டார் ஏற்பாட்டில் முதலில் திருமணம் செய்துகொள்கிறார். தினேஷின் திருமணத்திற்கு பிறகும் இருவருக்குமிடையே தொடர்பும் பழக்கமும் தொடர்ந்து கொண்டு தான் இருந்திருக்கிறது. இதை தெரிந்துகொண்ட கல்பனாவின் பெற்றோர் உடனடியாக உறவுக்காரரான சீனிவாசனை கல்பனாவிற்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.
அந்த திருமணம் நடந்து தான் ஓராண்டாகிறது. சீனிவாசனை திருமணம் செய்து கொண்ட பிறகும் கல்பனா தினேஷ் உறவு தொடர்ந்தது.
காதலிக்க முடியாத சமூகத்தில் இருவரும் கள்ளக்காதல் மூலம் சேர முயன்ற போது இந்த விவகாரம் தெரிந்து சீனிவாசன் மனைவியைக் கண்டித்திருக்கிறார். அதன் பிறகே கல்பனாவும் தினேஷும் இணைந்து கொலைத் திட்டம் போடுகின்றனர். அதன்படி பைக்கில் சென்று கொண்டிருந்த சீனிவாசனை வழிமறித்து தினேஷும் அவரது நண்பரான முரளியுடன் இணைந்து அடித்துக் கொல்கிறார்.
ஆரம்பத்தில் நகை மற்றும் வழிப்பறிக்காக நடந்த கொலை என்று கல்பனா சொன்னதை வைத்து புலனாய்வு செய்த போலீசு பின்னர் உண்மையை கண்டுபிடித்தனர். அதன் பின்னர் நாங்கள் தான் குற்றவாளிகள் என்று இருவரும் போலீசில் ஒத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும் இந்த கொலைக்கு இவர்களை மட்டும் குற்றம் சாட்ட முடியுமா, இதற்கு இவர்கள் மட்டும் தான் காரணமா? காதல் திருமணங்களை எல்லாம் நாடகத் திருமணங்கள் என்று கூறிவரும் காடுவெட்டி குருவுக்கும், ராமதாசுக்கும் இதில் பங்கு இல்லையா?
ஏனெனில் இந்த பிரச்சினையில் எந்த தலித்தும் இல்லை. சீனிவாசனும் கல்பனாவும் செட்டியார் சாதி, தினேஷ் நாயுடு சாதி. மேலும் இங்கு நடந்திருப்பதும் ராமதாஸ் கும்பல் சொல்லுவது போல பணத்திற்காகவோ இல்லை சொத்துக்களை கைப்பற்றுவதற்காகவோ நடந்த ஏமாற்று வேலை அல்ல. நடந்திருப்பது ஒரு கொடூரமான கொலை. அதில் சீனிவாசன் எனும் அப்பாவி இளைஞர் இரக்கமின்றி கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணங்கள் தான் பெண்களுக்கு நல்லது என்று பிரச்சாரம் செய்பவர்கள், காதல் திருமணங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? கல்பனாவுக்குக்கும் தினேசுக்கும் பெற்றோர் தான் திருமணம் செய்து வைத்தனர், ஆனால் ஏன் இவர்கள் கொலைகாரர்கள் ஆனார்கள்?
இது போன்ற குற்றங்கள் ஏன் நடக்கின்றன? கல்பனாவின் விருப்பப்படி தினேஷை திருமணம் செய்து வைத்திருந்தால் இந்தக் கொலை நடந்திருக்காது. கல்பனாவும் தினேசும் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்பது தான் ராமதாசின் கருத்து. இதன் மூலம் இது போன்ற கள்ளக்காதலையும், கொலைகளையும் ஊக்குவிப்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். தலித் இளைஞர்கள் வன்னியப் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று பா.ம.க சாதிவெறியர்கள் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். ஆனால் இங்கோ இவர்கள் நடத்தி வைத்த உண்மையான திருமணம் கொலையில் முடிந்திருக்கிறது. வன்னியர் ஏரியா என்று சொல்லப்படுகின்ற கடலூர் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
கல்பனா தனது வீட்டாரின் சாதி வெறியை எதிர்த்து போராடுவதற்கு பதில் இத்தகைய கிரிமினல் வேலையை ஏன் மேற்கொண்டாள்? அது போல தினேஷூம் தைரியம் சொல்லி கல்பனாவையே திருமணம் செய்து கொள்ளாமல் தனது வீட்டு திருப்திக்கு வேறு ஒரு அப்பாவிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு இப்போது கொலைகாரனாக மாறியது ஏன்?
ஏனென்னால் சமூகத்தில் இருக்கும் பார்ப்பனியத்தின் ஏற்றத் தாழ்வான சாதி எனும் வில்லனை எதிர்ப்பது சுலபமல்ல என்பது இவர்கள் கருத்து. அதை விட கொலை பிரச்சினை இல்லை என்று இவர்கள் கருதுமளவு சாதி மறுப்புத் திருமணம் என்பது கடினமானது. இப்படி சாதி மறுப்பு திருமணங்களையும் காதலையும் எதிர்த்து பிரச்சாரம் மற்றும் தண்டனைகளை கொடுத்து வரும் இந்த சமூக அமைப்புதான் இவர்களை கொலைகாரர்களாக்கியிருக்கிறது.
அந்த சமூக அமைப்பின் பாதுகாவலர்களாக வலம் வரும் ராமதாஸ், காடுவெட்டி குரு, பாமக,வன்னியர் சங்கம், இதர ஆதிக்க சாதி அமைப்புகள் அனைவரும்தான் இந்த கள்ளக்காதல் கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். அதன்படி வன்னியர் சங்கம் மற்றும் இதர ஆதிக்க சாதி சங்கங்களை உடன் தடை செய்வது அவசியம்.
இதை ஏதோ ஒரு கள்ளக்காதல் கிசு கிசு சம்பவமாக பார்க்காமல் ஒரு அப்பாவி இளைஞன் உயிர் பறிக்கப்பட்டு இருவர் சிறையில் காலம் தள்ளப் போகிறார்கள் என்ற உண்மையோடு சிந்தித்து பார்க்க வேண்டும். இவர்கள் எவரும் விடலை பருவ வயது கொண்டவர்கள் அல்ல. முப்பதுகளைத் தொடும் வயதும், கொலையே செய்யுமளவு முதிர்ச்சியும் கொண்டவர்கள். ஒருவேளை இவர்கள் அப்போதே திருமணம் செய்திருந்தால் கல்பனா வீட்டில் மற்றும் கொஞ்சம் வருத்தம் இருந்திருக்கும். பிறகு நாளடைவில் அதுவும் சரியாகியிருக்கும். ஆனால் அந்த காதலை தடை செய்ததால் இன்று இரண்டு குடும்பங்கள் நடுத்தெருவில் இருக்கின்றன. ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இருவர் சிறையில் நீண்ட காலம் வாழப்போகின்றனர்.
சாதிவெறியர்களே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ?
பின் குறிப்பு: இந்த செய்தி ஊடகங்களில் கிசுகிசு, கள்ளக்காதல் ரசனை முதலான மலிவான நோக்கில் விதவிதமாக ஊதிப்பெருக்கி எழுதப்படுகிறது. இதில் காதல், சாதி போன்றவற்றின் சமூக யதார்த்தத்தை மட்டும் மனதில் கொண்டு நாங்கள் எழுதியிருக்கிறோம் vinavu,com

கருத்துகள் இல்லை: