வெள்ளி, 31 மே, 2013

Plus 2 வில் 1,129 மதிப்பெண் பெற்றவர் நூறுநாள் கூலி வேலைக்கு செல்கிறார்

சமீபத்தில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி அடைந்தவர்கள், அடுத்து என்னப் படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி விண்ணப்பிக்கலாம்? என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.  தேர்ச்சி அடையாதவர்கள் உடனடி மறு
தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டுப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், வறுமைக்கோட்டின் விளிம்பில் வாழக்கூடிய ஒரு கிராமத்து ஏழை மாணவி, ப்ளஸ் டூ தேர்வில் 1,129 மதிப்பெண் பெற்று, 'மேல்படிப்பு படிக்கவைக்க
பெற்றோர்களால் முடியாது'  என்பதை உணர்ந்து, தன் தாயோடு 100 நாள் திட்டத்தின்கீழ் கூலி வேலைக்கு போய்க்கொண்டிருகிறார். அந்த மாணவியின் பெயர் காயத்ரி. அவர், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் - ஆனங்கூர் அருகே உள்ள சின்னமருதூர் கிராமம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர். ப்ளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 179, ஆங்கிலம் 164, கணிதம் 197, வேதியல் 198, இயற்பியல் 192, உயிரியல் 199 மொத்த மதிப்பெண் 1,129. இவரைச் சந்திக்க அந்தக் கிராமத்துக்குச் சென்றேன்.

ஆனங்கூரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்துதான் செல்ல வேண்டும். அந்த கிராமத்துக்கு மினி பஸ் வசதிகூட கிடையாது. மாலை 4 மணிக்கு காயத்ரி வீட்டுக்கு சென்றேன். பார்க்கவே பரிதாபமான குடும்பம். அரசு கொடுத்த தொகுப்பு வீட்டில் இருக்கிறார்கள். நான் போனபோதுதான் வேலையில் இருந்து திரும்பி வந்து வெளியில் உட்கார்ந்து குடும்பமே கஞ்சி குடித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது காயத்ரியிடம் பேசினேன். "எங்க அப்பா பேரு செல்வராஜ், அம்மா சுமதி. எனக்கு தமிழ்செல்வி, தேவிபிரியா என இரண்டு தங்கைகள். ஜீவா ஒரு தம்பி. அப்பா, அம்மா கூலி வேலை. அவுங்களுக்கு எழுத படிக்கவெல்லாம் தெரியாது. நான் பத்தாம் வகுப்பு ஆனங்கூர் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பில் 470 மார்க் வாங்கினேன். மேற்கொண்டு படிக்கவைக்க எங்க வீட்டில் கொஞ்சம்கூட வசதி கிடையாது. அதனால் அம்மாகூட காட்டு வேலைக்கு போயிட்டு இருந்தேன். எங்க ஸ்கூல் வாத்தியார் வீட்டுக்கு வந்து என்னை ஃபிரீயா பரமத்தி வேலூரில் உள்ள மலர் ஸ்கூலில் சேர்த்துவிட்டார். இலவச பஸ் பாஸூம் வாங்கி கொடுத்தாங்க. அதனால் தான் ப்ளஸ் டூ படிக்க முடிந்தது. எங்க வீடு தொகுப்பு வீடு. வீட்டுக்குள் படுப்பதற்கே இடம் பத்தாது. ஒரே ஒரு குண்டு பல்ப்தான் எரியும். அப்பா, அம்மா வேலைக்கு போயிட்டு வந்து வீட்டிலும் வேலை செஞ்சுட்டு கொஞ்ச நேரம்தான் தூங்குவாங்க. அப்போது, நான் வீட்டுல லைட்டை போட்டு படிச்சுட்டு இருந்தால் அவுங்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், நான் பெரும்பாலும் தெரு கம்பம் வெளிச்சத்தில்தான் உக்கார்ந்து படிப்பேன்.

பேய் மாதிரி தெருவில் உக்கார்ந்துட்டு இருக்கன்னுகூட சிலர் திட்டுவாங்க. அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் போர்வையை போர்த்திக்கொண்டு தெருவிலேயே இரவு 12 மணி வரை படிப்பேன். எனக்காக எங்க அப்பாவும் என் கூடவே கட்டிலை போட்டு படுத்திருப்பார். இப்ப 1,129 மார்க் வாங்கி இருக்கேன். கட் ஆஃப் மார்க் 197. மருத்துவம் படித்து அனைவருக்கும் சேவை செய்யணும் என்பதுதான் என்னோட ஆசை. ஆனால், அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம். அப்படி இருக்கும்போது எப்படி மேற்கொண்டு படிக்க முடியுமா? என்பது தெரியவில்லை" என்றார் பரிதாபமாக.

காயத்ரி அப்பா செல்வராஜ், "எனக்கு படிப்பை பற்றியெல்லாம் ஒண்ணும் தெரியாது. என் தம்பிக்குதான் தெரியும். அவன் ரெண்டாம் கிளாஸ் வரை படிச்சிருக்கான். கையெழுத்தெல்லாம் சூப்பரா போடுவான். அவனுக்குதான் இந்தப் படிப்பை பற்றியெல்லாம் தெரியும். நாங்க அருந்ததியர் சமூகம். எங்களால் பெரிய படிப்பெல்லாம் படிக்கவைக்க முடியாது. நாங்க கூலி வேலை செஞ்சு இவங்களுக்கு கஞ்சி ஊற்றுவதே சிரம்மமாக இருக்கு. யாராவது நல்ல மகராஜன் உதவி செய்தால் பிள்ளை படிச்சுக்கும்" என்றார்.

அம்மா சுமதி, "சார், எங்க பிள்ளைகளுக்காக நாங்க ஒரு நல்ல துணி, மணி போட்டது கிடையாது. ஒரு நல்ல சோறு ஆக்கியது கிடையாது. இப்ப மழையும் இல்லாததால் கூலி வேலையும் கிடைக்கல. நூறு நாள் வேலைக்குதான் போயிட்டு இருக்கிறோம். அடுத்த நேரம் சாப்பாட்டுக்கே குதிரைக் கொம்பா இருக்கு. நிறையா பேர் வந்து என் பிள்ளையை பாராட்டிட்டு போறாங்க. பெருமையாக இருக்கு. ஆனால் மேற்கொண்டு படிக்கவைக்க கையில் ஒரு பைசா கூட கிடையாது. எல்லா பாரத்தையும் இந்த மதுரை வீரன் மேலதான் போட்டிருக்கிறேன்" என்றார்.

காயத்ரியின் கட்ஆஃப் மதிப்பெண்ணுக்கு, இடஒதுக்கீட்டின்கீழ் டாக்டர் சீட் கிடைப்பது நிச்சயம். ஆனால், அவரைத் தொடர்ந்து படிக்கவைப்பது என்பது அவர்களது பெற்றோர்களால் சாத்தியம் இல்லை.
காய்த்ரியின் டாக்டர் கனவு மெய்ப்படுமா?
மாணவி காயத்ரியின் வங்கிக் கணக்கு:

Account holder's Name: GAYATHRI
Indian Bank Account Number: 6128812063
IFSC Code Number: IDIB000J024
- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க. தனசேகரன்
thanks vikatan + Vijaya Aiyer   SA

கருத்துகள் இல்லை: