புதன், 29 மே, 2013

தேமுதிகாவின் MLA சாந்தி ராஜமாணிக்கம் ஜெயலலிதாவை சந்தித்தார் !

தே.மு.தி.க.வில் இருந்த 29 எம்.எல்.ஏ.க்களில் மதுரை மத்திய தொகுதி
எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், பேராவூரணி எம்.எல்.ஏ. அருண்பாண்டியன், திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகன், ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கோட்டைக்கு சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன் தொகுதி பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு மனு கொடுத்தனர்.
இந்நிலையில் சேர்ந்தமங்கலம் தொகுதி பெண் எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம் 29.05.2013 புதன்கிழமை ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடம் தொகுதி பிரச்சினை குறித்து பேசி விட்டு வந்தார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதல் - அமைச்சர் ஜெயலலிதாவை 29-ந்தேதி தலைமைச் செயலகத்தில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சாந்தி சந்தித்து தொகுதி சார்ந்த பணிகள் தொடர்பாக மனு ஒன்றினை சமர்ப்பித்தார். இந்த சந்திப்பின்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக மக்கள் பணியாற்றி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தமைக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த சாந்தி எம்.எல்.ஏ.,
எனது தொகுதி மக்களின் கோரிக்கை குறித்து முதல்-அமைச்சரை சந்தித்து நிறைவேற்றி தருமாறு மனு கொடுத்தேன். இந்த மனுவை முதல்-அமைச்சர் அம்மா கனிவுடன் பரிசீலிப்பதாக கூறினார். அதற்கு நன்றி தெரிவித்தேன். கடந்த 2 ஆண்டாக சிறப்பாக ஆட்சி நடத்தி 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சிக்கு எனது சார்பிலும், தொகுதி மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்தேன் என்றார்.
முதல்-அமைச்சரை சந்திக்க கோட்டைக்கு வந்தது கட்சி தலைமைக்கு தெரியுமா? நீங்கள் தொடர்ந்து தே.மு.தி.க. தலைமையின்கீழ் செயல்படுவீர்களா? போன்ற பல்வேறு கேள்விகளை நிருபர்கள் கேட்டனர். ஆனால் இதற்கு பதில் அளிக்க சாந்தி எம்.எல்.ஏ. மறுத்து விட்டார்.
"தொகுதி பிரச்சினை குறித்துதான் மனு கொடுக்க வந்தேன். இப்போது வேறு எந்த கேள்விக்கும் பதில் அளிக்க இயலாது'' என்று கூறி சென்று விட்டார்.
தே.மு.தி.க.வில் இருந்து இதுவரை 5 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் 6-வதாக சேந்தமங்கலம் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம்   ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது, தே.மு.தி.க. கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தே.மு.தி.க. பெண் எம்.எல்.ஏ. திடீரென மனம் மாறி ஜெயலலிதாவை சந்தித்து பேசியது விஜயகாந்த் உள்பட தே.மு.தி.க. பிரமுகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை: