வியாழன், 14 மார்ச், 2013

Jayalalitha: தேர்வு மாற்றங்கள் தமிழர்களுக்கு இழைக்கும் அநீதி

சென்னை:"ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளை தமிழில் எழுத, தமிழ் வழியில் பட்டம் பெற்றவர்கள் தான் தகுதியானவர்கள் என, யு.பி.எஸ்.சி., கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாட்டை, உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.இதுகுறித்து, பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,), ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத முடியாதவாறு, புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. வரும் கல்வியாண்டில் முதல், இது நடைமுறைக்கு வருகிறது.யு.பி.எஸ்.சி., நான்கு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. முதல் மாற்றத்தில், உயர்நிலைக் கல்வி, பட்டப்படிப்பு ஆகியவற்றை தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும். அப்போது தான், ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுத முடியும் என, கூறியுள்ளது. இவ்விதி, இந்தி மொழிக்கு விதிக்கப்படவில்லை.இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின், 8ம் அட்டவணையில், இந்தி, தமிழ் ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இந்த புதுவிதி தமிழ் பேசும் மாணவர்களுக்கும் மட்டும் எனக் கூறுவது, தமிழ் பேசுவதாலேயே, தண்டனை விதிப்பது போல் உள்ளது.கிராமப்புற மாணவர்கள், குறிப்பாக, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்கள், இதனால் கடுமையாக பாதிக்கப்படுவர். அசியல் அமைப்புச் சட்டம், 14 மற்றும் 16வது பிரிவில் அளிக்கப்படும், அனைவரும் சமம் என்ற உரிமையைப் பறிப்பதாக உள்ளது. கருணாநிதியின்  முன்மொழிதலை ஜெயா வழிமொழிந்து வருவது நல்லாத்தான் இருக்கு. அப்பறம் ஏன் அவர் தொடங்கிய திட்டங்களை சின்னாபின்னப் படுத்தி வருகிறார்.


இரண்டாவதாக, பட்டப் படிப்பில் விருப்பப் பாடமாக, தமிழ் இலக்கியத்தை பயின்றவர் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுத முடியும் என, கூறப்பட்டுள்ளது. கணிதம், வரலாறு உள்ளிட்ட பிற முக்கிய பாடங்களுக்கு, தமிழ் இலக்கியம் விருப்பப் பாடமாக இருக்காது. அப்படியென்றால், கணிதம், வரலாறு பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள், தமிழில், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத முடியாத நிலை உருவாக்கப்பட்டு உள்ளது.மூன்றாவதாக, மாநில மொழிகளில் தேர்வெழுத, குறைந்தபட்சம், 25 மாணவர்கள் அந்த மொழியில் தகுதி பெற்றிருக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளது. இவ்விதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிக்குப் பொருந்தாது என, குறிப்பிடப்பட்டுள்ளது.நான்காவதாக, ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெறுவது. இம்மாற்றம், முழுக்க முழுக்க நகர்ப்புறங்களில், ஆங்கில வழியில் பயன்ற மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்.

யு.பி.எஸ்.சி., செய்துள்ள மாற்றங்கள், இந்திய கூட்டாட்சிக்கும், பிராந்திய மொழிகளுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள சமத்துவத்துக்கும், பங்கம் விளைவிப்பதாக உள்ளது. எனவே, தாய் மொழியில் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக, ஜனநாயகமற்ற முறையில், யு.பி.எஸ்.சி., கொண்டு வந்துள்ள மாற்றங்களை திரும்பப் பெற, நீங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: