வெள்ளி, 15 மார்ச், 2013

கட்சியின் தலைவராக 16ம் ஆண்டில் சோனியா

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக, 16ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சோனியா, ""சவால் நிறைந்த தலைவர் பதவி, சாதாரணமானது அல்ல; தொண்டர்களின் அன்பும், ஆதரவுமே அதை எளிதாக்கியது,'' என, மனம் நெகிழ குறிப்பிட்டார்.
ராஜிவ் மறைவுக்கு பின், காங்கிரஸ் கட்சி பொறுப்பை ஏற்ற, சோனியா, தலைவர் பொறுப்பில், 16ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார். 127 ஆண்டு வரலாறு கண்ட காங்கிரஸ் கட்சியில், நீண்ட காலம் தலைவர் பதவியில் இருந்தவர் என்ற சாதனையை சோனியா படைத்துள்ளார். தலைவர் பொறுப்பில், நான்காவது முறையாக தொடரும், சோனியாவின் பதவி காலம், 2015ல் முடிவுக்கு வருகிறது. சோனியாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க, அவரது இல்லத்திற்கு, நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சென்றனர். மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா ஆகியோர், இதில் இடம் பெற்று இருந்தனர். மேலும், கட்சித் தொண்டர்கள் பலரும், சோனியா வீடு முன் குழுமியிருந்தனர்.
கட்சி தலைவர்கள் மத்தியில், சோனியா பேசியதாவது: காங்கிரஸ் தலைவர் பதவி என்பது சாதாரணமானது அல்ல; சவால்கள் நிறைந்தது. இதை எளிதாக்கியது, தொண்டர்களின் அன்பும், ஆதரவுமே. அடிமட்ட தொண்டர்கள், என் மீது காட்டிய பாசம் அளவற்றது. இவ்வாறு, அவர் கூறினார். "சோனியாவின் சாதனையை பெரியளவில் கொண்டாட வேண்டும்' என, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். நாட்டில் சில மாநிலங்களில் வறட்சி நிலவுவதால், விழா நடத்துவதற்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: