புதன், 12 டிசம்பர், 2012

உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?



2012 டிசம்பர் 21 இல் உலகம் அழியாவிட்டால் என்ன ஆகும்?
2013 செப்டெம்பர் 11 இல் உலகத்தில் கோடிக்கணக்கான குழந்தைகள் பிறக்கும்.
* * *
2012 இல் உலகம் அழியப்போகிறது, உலக்கை நெளியப்போகிறது என ஒரு கூட்டம் கதறு கதறு என்று கதறுகிறது. மாயன்கள் சொல்லிவிட்டார்களாம், மாமா பையன்கள் அள்ளிவிட்டார்களாம் என்று போட்டு தாளிக்கிரார்கள். உபகதைகளாக, உலகமே அழிந்து ஒரு மாதம் கழித்துத்தான் அவுஸ்திரேலியா அழியும், உலக அழிவுக்கு மூன்று நாட்கள் முன்னரே சூரியன் தெரியாமல் போய்விடும் (முன்னர் சொன்ன ஜோக்கை சாத்தியமாக்க.) என்று ஆளாளுக்கு அள்ளி விடுகிறார்கள். இதையெல்லாம் கேட்கும்போது கடுப்பெத்துகிறார் யுவர் ஆனார் ஆகத்தான் இருந்தாலும், எந்தப் பதிவையும் (இனியாவது) மென்மையாக டீல் பண்ணவேண்டும் என வெங்காயம் மேலிட வெங்காயங்கள் முடிவெடுத்துள்ளதால்,  சற்று காமெடியாகவே ஆராய்வோம்.
ஆனால், அதற்கு முன்னர், நாசா விட்டுள்ள ஒரு அறிக்கையை பார்ப்போம். அமெரிக்கர்களைத்தவிர வேறு எந்த சக்தியாலும் உலகத்தை அழிக்க முடியாது, அதற்கு விடவும் மாட்டோம் என்பதாக, எதோ எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது என்கிற மாதிரி நாசா ஒரு அறிக்கை விட்டுள்ளது. உலக அழிவு முன்னோடிகளை கலாய்க்க முன்னர் அதையும் பார்த்து விடுவோம்.http://www.venkkayam.com/
உலகம் 2012 இல் அழியும் என பல ஊடகங்கள் பரப்புரைப்பதிலே எந்த உண்மையும் இல்லை. சூரிய தொகுதியின் கிரகங்கள் இன்னும் நான்கு பில்லியன் வருடங்களுக்கு ஆயுள் உடையவை என கண்டறியப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் எல்லா விஞ்ஞானிகளும் 2012 இல் உலகத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என கூறியுள்ளனர்.
2012 கதைகள் பரவுவதற்கு மூலகாரணம் : சுமேரியர்கள் கண்டுபிடித்த நிபிறு என்கிற கோளானது பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. அந்தக் கோள் 2003 மேயில் பூமியை மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்காததால் 2012 டிசம்பரில் மோதும் என எதிர்பார்த்தார்கள். மயன்களின் நாட்காட்டியின் கால எண்ணிக்கையும் 2012 டிசம்பர் 21 உடன் முடிந்துபோகவே, அதையும் இதையும் முடித்து விட்டார்கள்.
மாயன் கலண்டரின்  முடிவு : வீதியோர சலூனில் தொங்கவிடப்பட்டுள்ள கலண்டரும்தான் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 உடன் முடிகிறது. அதற்காக உலகம் என்ன, அழிந்தா விட்டது? மறுபடி ஜனவரி 1 இல தொடங்கவில்லையா? அதுபோல மாயன் கலண்டரும் அடுத்த சுற்றாக தொடங்கும்.
டிசம்பர் 23 முதல் 25 வரை உலகமே இருண்டுவிடுமா : நாசா சொல்லியதாக இப்படி ஒரு அறிக்கை உலாவுகிறது. நாசாவோ, வேறு எந்த நிறுவனமோ இப்படி ஒரு முன்கூறலை சொல்லவில்லை. எல்லா கிரகங்களும் பூமியை மோதுவதற்கு ஏற்றாற்போல இடமாறுவதற்காக அந்த மூன்று நாட்களும் அப்படி ஒரு சூனியம் நடைபெறும் என்பதுவும் வதந்தியே. 1962 இல் ஒரு பெரிய இடப்பெயர்வு கிரகங்களிலே ஏற்பட்டது. ஆனால் அதுகூட பூமியை பாதிக்கவில்லை. ஒவ்வொரு டிசம்பர் மாதமும் பூமியும் சூரியனும் (சூரிய தொகுதியே ) பால்வீதியின் மையத்தை நோக்கி ஒரு இடப்பெயர்வை மேற்கொள்ளுகின்றன. ஆனால், அதுவும் ஒரு வருடாந்த நிகழ்வே தவிர, எந்த பாதிப்பும் அற்றது.
நிபுரு கிரகம் : நிபுரு (அல்லது கோள் எக்ஸ், (planet X)  அல்லது எரிஸ்) என்று ஒரு கிரகம் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக உள்ள கதையும் வதந்தியே. அப்படி ஒரு கிரகம் வந்து கொண்டிருப்பது உண்மை என்றால், எப்போதோ விஞ்ஞானிகள் அதை கண்டுபிடித்திருப்பார்கள். ஒரு மாதத்துக்குள் பூமியை மோதப்போகிறது என்றால், இப்போதைக்கு அது வெறும் கண்ணுக்கே தெரியத் தொடக்கி இருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. எரிஸ் என்கிற ஒரு கிரகம் இருப்பது என்னமோ உண்மைதான். ஆனால், அது பூமியை நெருங்கக்கூடிய அதி குறைந்த தூரமே நான்கு பில்லியன் மைல்கள்.
பூமி கவிழுமா? : பூமியின் வட முனைவும் தென் முனைவும் தமக்குள் இடமாறும் எனவும் ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. புவியின் காந்த முனைகள் நான்கு இலட்சம் வருடங்களுக்கு ஒருமுறை இடமாறும் என்பது உண்மைதான். அதுவும் மிக மெதுவாகத்தான் நடக்கும் என்பதுடன், அதுவும் வரும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு நடக்க வாய்ப்பில்லை.
வால்வெள்ளிகள் மோதுமா? : அத்தனை பாதிப்பை தரக்கூடிய வால்வெள்ளிகள் மோதும் சாத்தியங்கள் இல்லை. ( கடைசியாக அத்தனை பெரிய மோதுகை 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்தான் நடந்தது. அப்போதும் உலகம் அழியவில்லை. டைனோசர்கள்தான் அழிந்தன.) நாசாவானது தினம்தோறும் பூமியை மோதும், மோதக்கூடிய வால்வெள்ளிகளை பற்றி ஆராய்ச்சி செய்து இணையதளத்திலே பதிவிடுகிறது. அங்கெ பார்த்தால் தெரியும், எல்லாமே சுண்டைக்காய் அளவுள்ளவைதான் வந்து மோதுகின்றன.
இதுதான் அந்த மாயன் நாட்காட்டி. உலகமே அழியப்போகிறது எனக் கண்டுபிடித்த மயன்கள் தாங்கள் அழிந்தது எப்படி என்று தங்களுக்கே தெரியாமல், ஸ்பானியர்களின் சூழ்ச்சியில் அகப்பட்டு செத்துப்போனார்கள்.
நாசாவின் நிலைப்பாடு : எல்லாமே முட்டாள்தனமான வதந்திகள்தான். இதெல்லாம் உண்மை என்றால் ஏதாவது ஆதாரங்கள், விஞ்ஞான ரீதியான சாத்தியங்கள் இருக்கின்றனவா? இல்லை. எல்லாமே பம்மாத்து.
மனித மனத்தால், மூளையால் கண்டறியவே முடியாதவை என சில விடயங்கள் இருக்கின்றன. ஏலியன்கள், பிரபஞ்சத்தின் தொடக்கம், க்கடவுள், மூளை, உயிர்... இப்படி சில விடயங்களை இன்னும் யாராலுமே தெளிவாக கூற முடியவில்லை. அதிலே ஒன்றுதான் உலக அழிவு. மனிதர்களை முட்டாளாக்க இவற்றை எல்லாம் பயன்படுத்தலாம். மனிதர்கள் பயப்படும் விடயங்கள். இந்த உலக அழிவு என்பது உள்ளிட்ட மனிதர்கள் பயப்படும் விடயங்களை அடிப்படையாக கொண்டுதான் உலகத்தின் எல்லா மதங்களும் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஊழி என அழைக்கப்படுகிற இந்தப் பேரழிவு இறைவனால் நிகழ்த்தப்படும் என பூச்சாண்டி காட்டியே மதங்களுக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்டம் முடியவும் காட்சை கலைத்து ஆடுவது மாதிரி கடவுள்கள் விரும்பிய நேரமெல்லாம் உலகத்தை அழித்து அழித்து விளையாடுவார்கள் என்பதுதான் மதங்களின் அடிப்படை. மனிதனின் பயம்தான் மனிதனின் பெரிய முட்டாள்தனம். 
விடப்பா விடப்பா.. அழிந்தால் கழுதை அழிந்துவிட்டு போகிறது... அதையெல்லாம் நம்பி டிசம்பர் இருபத்தொன்று இரவு பத்து மணிக்கு பரபரப்பு வந்து போனால் போகிறது, கன்னியாவது கழிந்துவிட்டு சாவோம்  என்று பக்கத்து வீட்டு பெண்ணை கையை பிடித்து இழுத்துவிடாதீர்கள். உலகம் அழிந்து தொலையாமல் விட்டால் அடுத்த நாள் காலை மஞ்சள் பூசி விடுவார்கள். அடுத்தது 2012 என்கிற ஆங்கில மொக்கை படத்தையோ பைபிளையோ பார்த்துவிட்டு படகு செய்தால் தப்பிக்கலாம் என்று நம்பி அருகிலுள்ள இரும்புக்கடைக்காரனை ஆய்க்கினை படுத்தி நாலு தார் பீப்பாயை இணைத்து படகு செய்து வைக்காதீர்கள், நவம்பர் மாத நந்தாவில்காரர்கள்போல. அல்லது கிறிஸ்மஸ் தள்ளுபடி ரேஞ்சுக்கு உலக அழிவிலிருந்து தப்பிக்க விசேட பூசை... கேரளாவிலிருந்து மாந்திரீக கொழும்பு விஜயம்.. மலிந்த கட்டணம் என்று கிளம்புபவர்களிடம் காசை அள்ளி இறைக்காதீர்கள். அல்லது மனைவியிடமோ, காதலியிடமோ இடது கையை பிடித்துக்கொண்டு இதுவரை செய்த தவறுகளை எல்லாம் உளறிக் கொட்டிவிடாதீர்கள். உலகம் அழியாது போனாலும் உங்களது உலகம் அழிந்துவிடும். எல்லாவற்றையும் விட முக்கியம்... கடைசி வாய்ப்பு என்று எண்ணி தொடக்கத்தில் சொன்ன ஜோக்கை மட்டும் சாத்தியப்படுத்தித் தொலைத்துவிடாதீர்கள். அப்புறம் வருடம்தோறும் செப்டெம்பர் 11 உங்கள் பிள்ளை பிறந்தநாள் கொண்டாடும்போது உலகமே எள்ளி நகையாடும்.

# 2012 டிசம்பர் 22 காலை பேஸ்புக் போஸ்ட் என்னவாக இருக்கும்?
 “யாராவது இருக்கீங்களா?
சரி, விட்டுத் தொலைவோம். நான் சொல்லுகிறேன் உலகம் அழியாது என்று. அழியும் என வாதிடுவோருடன் ஒரு பந்தயம். உலகம் அழியாவிட்டால் நீங்கள் எனக்கு உங்கள் இடத்து கையை வெட்டித் தரவேண்டும். உலகம் அழிந்துவிட்டால் மறுநாளே எனது வீட்டுக்கு வாருங்கள். நான் என்னுடையதை வெட்டித் தருகிறேன்.


உலக அழிவு திரைப்படங்கள்


கருத்துகள் இல்லை: