புதன், 12 டிசம்பர், 2012

படிக்கட்டில் பயணம் செய்தால் பள்ளியிலிருந்து 'டிஸ்மிஸ்': தமிழக அரசு அதிரடி

சென்னை: பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை பெருங்குடியில் நேற்று முன்தினம் பஸ் மீது லாரி மோதியதில் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.http://tamil.oneindia.in/

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க கல்லூரிகள், பள்ளிகளில் விழிப்புணர்வு செய்யப்படும். நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். போக்குவரத்து விதிகளை மீறினால் வழங்கப்படும் தண்டனை விபரம் பற்றி பிரசாரம் செய்யப்படும்.
படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் முதலில் எச்சரிக்கை செய்யப்படுவார்கள். இதுபற்றி மாணவரின் பெற்றோருக்கும், பள்ளிக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.
மாணவர்கள் தொடர்ந்து பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.பிறகு அவர்களை பள்ளியில் இருந்து நீக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் படித்து பார்த்தனர். பிறகு தமிழக அரசு எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பாராட்டும்படி உள்ளது. இந்த விதிமுறைகளை இன்று முதல் அமல்படுத்த வேண்டும். இதை அமல்படுத்தினால் 90 சதவீத விபத்துக்களை தடுக்கலாம்" என்று கூறி விசாரணையை ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை: