வியாழன், 13 டிசம்பர், 2012

ரஜினி வியாதி தமிழகத்தின் சுயமரியாதைக்கு சவால்

ரஜினி-பால்ரஜினி என்ற மாபெரும் சக்தியின் சகல வல்லமைகளைப் பற்றி ஊடகங்களும் அரசியல் உலகமும் கட்டி எழுப்பியிருக்கும் கருத்துலகம் உண்மையில் ஒரு ஊதிப் பெருக்கப்பட்ட பலூன்தான். அதற்கு ஆதாரமாக பாபா படம் வெளியான போது திருச்சியில் இந்த பலூனை வெடிக்கவைத்த  கதையை இங்கு காலப்பொருத்தம் கருதி பதிவு செய்கிறோம்.
சில திரைப்படங்களுக்கு எழுத்தில் விமரிசனம் செய்தால் போதுமானதாக இருப்பதில்லை. சமகால வரலாற்றைத் திரித்து பம்பாய், ரோஜா போன்ற இந்து மதவெறி ஆதரவுப் படங்களை மணிரத்தினம் வெளியிட்டபோது அவற்றுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பாலியல் வக்கிரங்களையே பண்பாடாக்கும் ஆபாசத் திரைப்படங்களுக்கு எதிராகவும் இத்தகைய நேரடி நடவடிக்கை தேவைப்பட்டிருக்கிறது.
ஆபாசமும் வக்கிரமும் படத்திற்குள்ளேதான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாபா திரைப்படத்தைப் பொறுத்தவரை அதன் கதை இன்னதென்று தெரியாவிட்டாலும், படம் வெளியாவதற்கு முன்னால் அதற்குப் பத்திரிகையுலகம் அளித்த விளம்பரமும், தமிழகமெங்கும் பாபா வெளியீட்டையொட்டி நடைபெற்ற கூத்துகளும் ஆபாசம் வக்கிரம் என்ற சொற்களுக்குள் அடக்கவியலாத அளவுக்கு அருவருப்பானவை.இந்த அசிங்கம் தோற்றுவிக்கும் நாற்றத்தை எதிர்கொள்ளவியலாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு ஒதுங்கிச் செல்வதென்பது தமிழ் மக்களின் சுயமரியாதைக்கே விடப்பட்ட சவாலாகக் கருதினோம். எனவே தமிழகத்தில் ரஜினியின் தலைமை ரசிகர் மன்றம் இயங்கும் திருச்சியில், பாபாவையும் பக்தகேடிகளையும் நேருக்கு நேர் சந்திப்பது என்று களத்தில் இறங்கினோம்.
பாபா வெளியிடப்பட்ட ஆகஸ்டு 15, 2002 அன்று தமிழகத்தின் சூழல் என்னவென்பதை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறோம். நெசவாளர்களுக்குக் கஞ்சித் தொட்டி வைத்த தி.மு.க வினர், முட்டை பிரியாணிக் கும்பலிடம் அடி வாங்கி, சிறை சென்ற முன்னாள் சபாநாயகர் உள்ளிட்ட  110பேர் கண்டிசன் பெயிலில் கையெழுத்துப் போட்டுக்  கொண்டிருந்தனர். நெசவாளர்கள் ஆங்காங்கே போராடிக் கொண்டிருந்தனர்.
காவிரியில் தண்ணீர் விடாமல் கர்நாடகம் அடாவடித்தனம் செய்து கொண்டிருந்தது. தஞ்சை  பஞ்சபூமியாகி விவசாயிகள் எலிக்கறி தின்னும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். தமிழகமெங்கும், ஆசிரியர் போராட்டம், வழக்குறைஞர் போராட்டம்.
இந்தச் சூழலில் தமிழகப் பத்திரிகைகளில் பாபாதான் அட்டைப்படக் கட்டுரை அல்லது முக்கியச் செய்தி. இதை விடப் பெரிய பூச்செண்டை பாபாவைத் தவிர யாரும் ஜெயலலிதாவுக்கு வழங்கியிருக்க முடியாது. அந்த அளவிற்கு இருட்டடிப்பு செய்யப்பட்டன மக்கள் பிரச்சினைகள்.பாபா வெளியீட்டிற்கு இரண்டு நாட்கள் முன் ராமதாஸ் ரஜினியைப் பற்றித் தெரிவித்த விமரிசனம் பத்திரிகைகளில் பெற்ற முக்கியத்துவத்தைக் காட்டிலும், ராமதாசுக்கு ரஜினி ரசிகர்கள் தமிழகமெங்கும் கொடும்பாவி கொளுத்திய செய்திதான் முக்கியத்துவம் பெற்றது. ரசிகர்கள் “கொந்தளிப்பு – ஆவேசம்” என்றும் ரஜினி மட்டும் தடுத்து நிறுத்தாமலிருந்தால் ரசிகர்கள் தமிழ்நாட்டையே கொளுத்தி விடுவார்கள் என்பது போலவும் ஒரு பயங்கரத் தோற்றத்தையும் உருவாக்கின பத்திரிகைகள்.
தங்கள் முகத்தை பூதக்கண்ணாடி வழியே பார்த்து தைரியம் பெற்ற ரசிகர்கள் எனப்படும் தெள்ளவாரிகள் கூட்டம் ” ராமதாசையும் திருமாவளவனையும் பொடாவில் கைது செய்” என்று அறிக்கை விட்டு தங்கள் அரசியல் பார்வையைத் தெளிவுபடுத்தியது; இதுவும் மாலைப் பத்திரிக்கைகளின் முதல் பக்கச் செய்தியானது.
திருச்சி நகரமோ பாபா நகரமாகவே இருந்தது. ஷாகுல்ஜி (ஷாகுல் ஹமீது) தலைமையில் அதிகாரபூர்வ ரசிகர் மன்றம்; கலீல்ஜி (கலீல்) தலைமையில் போட்டி ரசிகர் மன்றம். மாவட்டத்தில் மொத்தம் 550 கிளைகள், இரு ரசிகர் மன்றங்களுக்கிடையிலான போட்டியில் திருச்சி நகரத்தின் எல்லாச் சுவர்களுக்கும் ஆயில் பெயிண்ட் அடித்து விட்டனர். ஒரு சுவர் விளம்பரத்துக்கு 3000 ரூபாய் என்று மதிப்பிட்டாலும் மொத்தம் சுமார் 18 லட்சம் ரூபாய்க்கு (600 இடங்களுக்கு மேல்) பாபா விளம்பரம் செய்திருந்தனர். விளம்பர வாசகங்களைப் படித்தால் தன்மானமுள்ள வாசகர்களுக்கு அது கொலை வெறியை ஏற்படுத்தும் என்பதால் எழுதாமல் விடுகிறோம்.
இவையன்றி, சுவரொட்டிகள். ரஜினி திரைப்படத்தின் தயாரிப்பு செலவு 5 கோடியென்றால் ரசிகர்கள் செய்யும் விளம்பரச் செலவு 10 கோடி என்பதை ‘படையப்பா’ படம் வெளிவந்த போது உரிய விவரங்களுடன் புதிய கலாச்சாரத்தில் எழுதியிருக்கிறோம். மூன்றாண்டுகளுக்குப் பிறகு ‘தலைவர்’ படம் வருகிறதென்பதால் விளம்பரம் எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.ரஜினியின் நண்பரும் தொழில் கூட்டாளியுமான முன்னாள் காங்கிரசு எம்.பி அடைக்கலராஜின் கொட்டகை உட்பட 3 திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. ஆகஸ்டு – 15 அன்று மட்டும் 5 திரையரங்குகளில் அன்றாடம் 5 காட்சிகள்.
ஆகஸ்டு – 14 ஆம் தேதியன்று போலிச் சுதந்திரத்தை அம்பலப்படுத்தி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்த திருச்சி நகர மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள், ஆகஸ்டு – 15 ஆம் தேதியன்று பாபா திரையிடப்படும் ரம்பா திரையரங்கின் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கண்டன ஊர்வலத்திற்கும் போலீசிடம் அனுமதி கேட்டனர்.
“சுதந்திர தினத்தன்று குடிமக்கள் எந்த விதமான ஜனநாயக உரிமையையும் பயன்படுத்த அனுமதிப்பது வழக்கமில்லை” என்ற  புனிதமான மரபை போலீசார் சுட்டிக் காட்டினர். 16 ஆம் தேதி அனுமதியளிப்பதாக வாக்களித்தனர்.
“பாபாவுக்குப் பால்குட ஊர்வலம் நடத்த  அனுமதித்தால் அதை எதிர்த்து காலிப்பானை ஊர்வலம் நடத்துவோம் ” என்று போலீசை எச்சரித்தோம். பால்குட ஊர்வலத்தை அனுமதிக்க மாட்டோமென உறுதியளித்தனர் போலீசு அதிகாரிகள். ரஜினியின் படம் வெளியாகும் நாளன்று நகரம் எப்படி இருக்குமென்பதைத் தமிழக மக்களுக்கு விளக்கத் தேவையில்லை. சுதந்தி தினத்தன்று பிராந்திக் கடை திறக்கக்கூடாது என்ற ‘ கருப்புச் சட்டம்’ அமலில் இருப்பதால் 14 ஆம் தேதியே போதுமான அளவு ‘ ஜனநாயகத்தை’ வாங்கி இடுப்பில் செருகிக் கொண்டிருந்தார்கள் பாபாவின் பக்த கேடிகள்.
எம் தரப்பில், பாபாவை அம்பலப்படுத்தும் 3500 சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டன. இவற்றை 14 ஆம் தேதி இரவு ஒட்டுவதைக் காட்டிலும் காலையில் ஒட்டுவதன் மூலம்தான் பக்த கேடிகளை “நேருக்குநேர்” சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதாலும், ரஜினி ரசிகர்கள் எனும் ” மாபெரும் சக்தி ” பற்றி மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரமையை உடைக்க முடியும் என்பதாலும் ஆகஸ்டு 15 அன்று காலையில் ஒட்டுவதென முடிவு செய்தோம்.
செஞ்சட்டையணிந்த தோழர்கள் பல குழுக்களாகப் பிரிந்து திருச்சி நகரின் எல்லாப் பேருந்துகளிலும் சுவரொட்டிகளை ஒட்டினர். மக்கள் கும்பல் கும்பலாகப் படித்து ரசிக்கத் தொடங்கினர். ரசிகர்கள் நின்று படித்துவிட்டு மவுனமாக இடத்தை விட்டு அகன்றனர். ஒட்டும்போது வம்புக்கு வந்தாலோ ஒட்டிய பிறகு கிழித்தாலோ என்ன நடக்கும் என்பது சுவரொட்டியிலேயே அச்சிடப்பட்டிருந்தது. படித்துப் புரிந்து கொள்ளத் தவறும் ரசிகர்கள் பார்த்தே புரிந்து கொள்ள ஏதுவாக உரிய தயாரிப்புடன் சென்றனர் தோழர்கள். “ராமதாசுக்குத் தமிழகமெங்கும் கொடும்பாவி கொளுத்தினார்கள், கொதிக்கிறார்கள், கொந்தளிக்கிறார்கள் ” என்று பத்திரிகைகளால் வருணிக்கப்பட்ட ரசிகர்கள் ஒரு இடத்திலும் மூச்சு விடவில்லை.
ரஜினி-பாபாதேநீர்க் கடைகள், தெருக்கள்  என்று நகரின் உட்பகுதிகளெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ஒரேயொரு தெருவில் சுவரொட்டியைக் கிழித்த ரசிகர் கூட்டத்தைத் ‘ தக்கபடி கவனித்து ‘ கையில் பசைவாளியையும் சுவரொட்டிகளையும் கொடுத்து அவர்களையே ஒட்டச் செய்தனர் தோழர்கள். நகரின் மையமான இடங்களில் இதே முழக்கங்கள் ( தாழ்ந்த தமிழகமே! கஞ்சிக்கு மக்கள் மிதிபடும் நாட்டில் காவிரிக்கு உழவன் கண்ணீர் விடும் மண்ணில் பாபா காட்சிக்கு அலை மோதும் ரசிகர் கூட்டம்! பாபா டிக்கெட் 600 ரூபாயாம்! தமிழனே! உன் சூடு சொரணை எத்தனை ரூபாய்?! ஆர்ப்பாட்டம், “ஈராயிரம் ஆண்டுகளாய் உயிரோடிருந்து, ஏசு முதல் ரஜினி வரை எல்லொருக்கும் ஆசி வழங்கிய இமயத்து பாபாவின் இயற்பெயர் என்ன – கஞ்சாச் செடி!” ) பெரிய தட்டிகளாக எழுதி வைக்கப்பட்டன.  அவற்றுக்கும் சேதமில்லை.
மதியம் தட்டிகளைக் கையிலேந்தியபடி பல குழுக்களாகக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பிரச்சாரம் செய்யச் சென்றனர் தோழர்கள். ரஜினி ரசிகர் மன்றங்களில் உட்காந்திருந்தவர்களை அழைத்துப் பேசினர். “ரேசன் வாங்க வைத்திருந்த காசைக் காணோம்; பைனான்சுக்கு வைத்திருந்த காசை எடுத்து விட்டான்; பாத்திரத்தைக் காணோம்; நகையைக் காணோம்” என்ற தாய்மார்களின் புகார்களும், வசவுகளும், கண்ணீரும் எல்லாத்  தெருக்களிலும் கேட்டது. இந்த எதிர்ப்பியக்கத்தை மக்கள் எப்படி வரவேற்றிருப்பார்கள் என்று மேலும் விளக்கத் தேவையில்லை.
“படம் படுதோல்வி ” என்ற செய்தி அதற்குள் நகரம் முழுவதும் பரவிவிட்டது. ” பாபா படுதோல்வி! போண்டியானது ரசிகர்கள்தான் – ரஜினி அல்ல! பண்ட பாத்திரத்தை விற்று ரஜினிக்கு மொய் எழுதிய ரசிகர்களே இனியாவது திருந்துங்கள்!” என்ற தட்டிகளை அன்று மாலையே நகரின் மையப்பகுதிகளில் வைத்தோம். அன்று காலை “ஜெயங்கொண்டத்தில் படப்பெட்டியைப் பா.ம.க வினர் பறித்துச் சென்று விட்டனர் ” என்ற செய்தி மாலைப் பத்திரிகைகளின் பரபரப்புக்குத் தீனியானது.
போலீசுக்கோ 16 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்க இது ஒரு முகாந்திரமானது. ” அடுத்த 10 நாட்களுக்குள் பாபாவுக்கு எதிராக எதுவும் செய்ய அனுமதிக்கக்கூடாது ” என்று அம்மாவின் அரசு உத்திரவிட்டிருப்பதாகக் கூறினர். தடை உத்திரவை நள்ளிரவு 1 மணிக்குக் கொண்டு வந்து கொடுத்தனர். ஆனால் 16ஆம் தேதி காலை 9 மணிக்குத் தடையை மீறி திருச்சி சிங்காரத் தோப்பில் திடீரென்று குழுமிய தோழர்கள் ஊர்வலமாகக் கிளம்பி ரம்பா திரையரங்கம் நோக்கிச் சென்றனர். தெப்பக்குளம் அருகே ஊர்வலத்தை மறித்துக் கைது செய்தது போலீசு. பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் அனைத்திலும் செய்தி வெளிவந்தது. ( பரபரப்பு முக்கியத்துவம் என்று ஒன்று இருக்கிறதே )
பண்ருட்டியில் சுவரொட்டி வாசகத்திற்காக அதனை ஒட்டிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர். “”ஈராயிரம் ஆண்டுகளாய் உயிரோடிருந்து, ஏசு முதல் ரஜினி வரை எல்லொருக்கும் ஆசி வழங்கிய இமயத்து பாபாவின் இயற்பெயர் என்ன – கஞ்சாச் செடி!” என்ற அந்தச் சுவரொட்டி வாசகம் இந்து மத உணர்வைப் புண்படுத்துவதாகக் கூறி குற்றப் பிரிவு 153-ஏ இல் கைது செய்து சிறை வைத்தனர். அதாவது பாபர் மசூதியை இடித்ததற்கு அத்வானி மேல் போடப்பட்ட அதே குற்றப் பிரிவு!
16 – ஆம் தேதி இரவே திருச்சி நகரச் சுவர்களை அசிங்கமாக்கிக் கொண்டிருந்த பாபா விளம்பரங்கள் மீது வெள்ளையடித்து  “உலக வங்கிக் கைக்கூலி ஜெயா” வுக்கு எதிரான முழக்கங்களை எழுதத் தொடங்கினார்கள் தோழர்கள். வெள்ளையடிக்கும் பணி மறுநாள் பகலிலும் தொடர்ந்தது. இதைக் கண்டும் ரசிகர்கள் யாரும் கொந்தளிக்கவோ குறுக்கிடவோ இல்லை. ஒரு இடத்தில் ரஜினியின் முகத்தில் வெள்ளையடிக்கும்போது மட்டும் ஒரு ரசிகர் குறுக்கிட்டார். ” தலைவா… பாத்து… தலைவர் முகத்தில் அடிக்கும் போது மட்டும் கொஞ்சம் பாத்து அடிங்க ” என்றார்.
பார்த்து அடிப்போம்.

கருத்துகள் இல்லை: