புதன், 12 டிசம்பர், 2012

விஸ்வரூபத்தை கேபிள் டிவியில் இலவசமாக ஒளிபரப்புவோம்!' - கமலுக்கு ஒரு எச்சரிக்கை

சென்னை: விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்ப அனுமதித்தால், அந்தப் படத்தை ரிலீசாகும் அன்றே கேபிளில் இலவசமாக ஒளிபரப்புவோம் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சில தயாரிப்பாளர்கள் எதிர்மறை விளம்பரங்கள் மூலம் தங்ளுடைய திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை கவர முயற்சிக்கிறார்கள். அதில் கமலஹாசனின் ‘விஸ்வரூபம்' திரைப்படமும் ஒன்றாகி உள்ளது. கேபிள் டி.வி. தொழிலை ஒழிக்க முற்படுவோருக்கு மத்திய அரசு துணை போனாலும் டி.டி.எச். 3 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது என்பதை தனது கணக்கெடுப்பின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கும் உலக நாயகனுக்கு உளமார்ந்த நன்றியை தமிழக கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு காரணம் குறைந்த விலை நிறைந்த சேவை என்ற தாரக மந்திரத்தை தந்து கேபிள் டி.வி. தொழிலை தமிழகத்தில் தழைந்தோங்க வழிகாட்டி நிற்கும் முதல்-அமைச்சரின் சீரிய சிந்தனையே ஆகும்.http://tamil.oneindia.in/

சென்னை உயர்நீதி மன்றத்தில் கேபிள் டி.வி. தொழில் சம்பந்தமாக நாங்கள் தொடுத்திருக்கும் வழக்கில் இந்த டி.டி.எச். 3 சதவீதம் என்ற கணக்கெடுப்பை பொதுமக்கள் கருத்தாக பதிவு செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கமலஹாசனை கேட்டுக் கொள்கிறேன்.
கமலஹாசன் தனது அறிக்கையில் டி.டி.எச். மூலம் ஒளிபரப்பாகும் திரைப்படத்தை பதிவு இறக்கம் செய்யமுடியாது என்று கூறியுள்ளார். அது அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தவறான தகவல் ஆகும். டி.டி.எச். மூலம் இவரது திரைப்படம் ஒளிப்பரப்பாகும்போது அவர் வேண்டுகோள் விடுத்தால் அந்த திரைப்படத்தை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதை அவர் முன்னிலையிலேயே நிரூபித்துக் காட்ட தயாராக உள்ளோம்.
திரைத்துறையை சார்ந்தவர்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கேபிள் டி.வி. தொழிலை ஒழிக்க வேண்டும் என்று கொக்கரித்தபோது, இது விஞ்ஞான உலகின் வியத்தகு பரிமாணம், அதோடு நாமும் பயணப்பட வேண்டும் என்று கூறியவர் கமலஹாசன்.
‘தசாவதாரம்' எடுத்த கமலஹாசன் தற்போது டி.டி.எச்.க்கு விளம்பர தூதுவராக அடுத்த அவதாரம் எடுத்துள்ளது வருந்தத்தக்கது. ஒருமுறைதான் ஒளிபரப்பு. அதுவும் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டும் என்கிறார். அவர் திரைப்படத்தை ஒளிப்பரப்பு செய்யும் நேரத்தில் மழை பெய்தால் படம் தெரியாது. இத்தகைய சூழலில் ஆயிரம் ரூபாய் கட்டியவர் பணத்தை திரும்பக் கேட்கமாட்டாரா?
மூவி அன்டு டிமாண்ட் என்ற தொழில்நுட்பம் மூலம் வியாபாரத்தை பெருக்க நினைக்கும் அவரது முயற்சியில் நியாயம் இருக்கிறது. அது கேபிள் டி.வி. மூலம் செய்வது மட்டுமே சாத்தியம். அவரது பிரம்மாண்டமான அடுத்த படைப்பு இந்த முயற்சியை கேபிள் டி.வி. மூலம் சாதிக்கும்.
இதற்கு மேலும் டி.டி.எச். நிறுவனங்களின் பசப்பு மொழியில் அவர் தன்னிலை இழந்தாரானால் அவரையும் அவரது திரைப்படத்தையும் காப்பற்ற கடவுளாலும் முடியாது. இதையெல்லாம் மீறி டி.டி.எச்.சில் ‘விஸ்வரூபம்' திரைப்படத்தை ஒளிப்பரப்பியே தீருவேன் என்று கமலஹாசன் முடிவெடுப்பாரானால் நூற்றாண்டுகால சினிமா வளர்ச்சியை கவுரவப்படுத்திட டி.டி.எச்சில் இந்த படம் ஒளிபரப்பாகும்போது பட்டிதொட்டி எங்கும் வீடியோஸ்கோப் என்னும் அகன்ற திரையை பொருத்தி ஊர்மக்கள் ஒன்று கூடிட இந்த திரைப்படத்தை இலவசமாக ஒளிப்பரப்பி, கமலஹாசனை வாழ்த்திட நாங்களும் தயாராகி விடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இது எச்சரிக்கை அல்ல. இரண்டாம் தலைமுறையை கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபடுத்தியுள்ள எளிய கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களின் இதயத்தின் ரணக்குரல்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: