வெள்ளி, 20 ஜூலை, 2012

சரத் பவார் மத்திய அமைச்சரவையிலிருந்து விலக முடிவு

புதுடில்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய விவசாய அமைச்சருமான சரத் பவார், மன்மோகன் சிங் தலைமையிலான, அமைச்சரவையிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவையில், பிரதமருக்கு அடுத்த இடத்தில், நிதி அமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தார். அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகியதால், இரண்டாம் இடத்தில், சரத் பவார் இடம் பெறுவார் என, செய்தி வெளியானது. அரசு இணைய தளத்திலும், பிரதமருக்கு அடுத்த இடத்தில், பவாரின் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், சமீபத்தில் இதில் மாற்றங்கள் நிகழ்ந்தன. பிரதமர் தலைமையில் நடந்த, அமைச்சரவைக் கூட்டத்தில், ராணுவ அமைச்சர் அந்தோணிக்கு இரண்டாம் இடம் ஒதுக்கப்பட்டது. இதில், மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் அதிருப்தி அடைந்தார்.
நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை, சரத் பவாரும், பிரபுல் படேலும் புறக்கணித்தனர். இதனால், மத்திய அமைச்சரவையிலிருந்து அவர்கள் இருவரும் விலக திட்டமிட்டுள்ளதாக, நேற்றிரவு செய்திகள் வெளியாகின. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் திரிபாதியை தொடர்பு கொண்ட போது, அவர், தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறி விட்டார்.

கருத்துகள் இல்லை: