வெள்ளி, 20 ஜூலை, 2012

போலீஸார் 20 லட்சம் பேரம் நர்ஸ் பலாத்கார வழக்கு .

நர்ஸ் பலாத்காரம்... டாக்டர்களிடம் போலீஸார் ரூ. 20 லட்சம் கேட்டு பேரம் பேசினரா...?

சென்னை: கேரள நர்ஸ் சென்னையில் 2 கேரள டாக்டர்களால் மோசமான முறையில் பாலியல் பலாத்கார கொடுமைக்குள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் புதிய பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நர்ஸால் குற்றம் சாட்டப்பட்ட இரு டாக்டர்களிடமும் போலீஸார் ரூ. 20 லட்சம் பணம் கேட்டு பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கை உடனடியாக பதிவு செய்யாமல் போலீஸார் தாமதப்படுத்தியதாகவும் சர்ச்சை வெடித்துள்ளது. ஆனால் இதை காவல்துறை மறுத்துள்ளது.

ஆலப்புழையைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர் பயிற்சிக்காக திருச்சியில் உள்ள கேரள ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு வந்துள்ளார். அவரை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னை வந்த அவரை சென்னை கிளையின் டாக்டர்களான அஜில் குமாரும், ஸ்ரீஜித்தும் சேர்ந்து விருந்தினர் இல்லத்தில் 2 நாட்கள் அடைத்து வைத்து மோசமான முறையில் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த மோசமான பலாத்காரத்தின் காரணமாக அந்த நர்ஸ் உடலளவிலும் மனதளவிலம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார். அவர் தற்போது மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் போலீஸில் புகார் கொடுத்தபோது போலீஸார் புகாரை பதிவு செய்து வழக்குப் பதிவு செய்வதில் அக்கறை காட்டவில்லை, தாமதம் செய்தனர் என்று புகார் கிளம்பியுள்ளது. மேலும், இந்த வழக்கிலிருந்து காப்பாற்றுவற்காக தங்களுக்கு ரூ. 20 லட்சம் பணம் தர வேண்டும் என்று டாக்டர்கள் இருவரிடமும் காவல்துறை தரப்பில் பேரம் பேசப்பட்டதாகவும் பரபரப்பு வெடித்துள்ளது. முதலில் அப்பெண் புகார் கொடுத்ததாக கூறப்படும் திருமங்கலம் காவல் நிலைய போலீஸார்தான் பேரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் இதை சென்னை இணை போலீஸ் கமிஷனர் சங்கர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கேரள பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நானே நேரில் சென்று விசாரணை நடத்தினேன். புகார் கொடுத்த பெண்ணிடமும் நான் விசாரித்து விட்டேன். முதல் கட்டமாக நான் நடத்திய விசாரணையில், போலீசார் தவறு எதுவும் செய்யவில்லை என்றுதான் தெரிய வந்துள்ளது.
திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்தில்தான் கடந்த 13-ந் தேதி முதலில் புகார் கொடுக்கப்பட்டது. அங்கு புகார் கொடுத்தவுடன் வழக்குப்பதிவு செய்து விட்டோம். இதில் வேறு பின்னணி உள்ளது. தொடர்ந்து அண்ணாநகர் துணை கமிஷனர் விசாரித்து வருகிறார் என்றார்.

கருத்துகள் இல்லை: