திங்கள், 16 ஜூலை, 2012

சிறுமி கற்பழிப்பை மறைக்க பெற்றோரிடம் பேரம்

மூணாறு:கேரள சிறுமி கற்பழிக்கப்பட்டதை மறைக்க அவரது பெற்றோரிடம், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தரப்பில் பல லட்ச ரூபாய் பேரம் பேசியது, விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது.
கேரளா, பம்பனார் லான்ட்ரம் எஸ்டேட்டைச் சேர்ந்த சந்திரன் - சுசிலா தம்பதி மகள் மேகலா, 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெரம்பலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் வீட்டில், வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன், அங்கு கற்பழித்து கொல்லப்பட்டார்.இது தொடர்பாக ராஜ்குமார், உதவியாளர் அன்பரசன், மகேந்திரனை, கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

மேகலாவை தமிழகத்திற்கு அழைத்துச் சென்ற ஏஜன்டுகள் பாம்பனார் குமாரபுரம் காலனி பன்னீர்செல்வம், 48, குமுளி செங்கரை விஜயகுமார், 36, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மற்றும் மற்றொரு ஏஜன்ட் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மேகலாவின் பெற்றோரை சந்தித்து, "வேலைக்கு அனுப்பினால் அதிக தொகை கொடுப்பதாக'க் கூறியுள்ளனர். இதற்காக விஜயகுமார், பன்னீர்செல்வத்திற்கு தலா 3,000 ரூபாய் கமிஷன் கிடைத்துள்ளது. கொலைக்கு பின், ஏஜன்ட் ஹரிகிருஷ்ணன் தலைமறைவாக உள்ளார்.

மேகலா ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்த போது, சம்பவத்தை மறைக்க, அவரது பெற்றோரிடம், பல லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டதும், விசாரணையில் தெரிந்துள்ளது.

இதனிடையே, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார், ஜெய்சங்கர், அன்பரசன், மகேந்திரன் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய புரோக்கர் பன்னீர்செல்வத்தை கேரள மாநிலம் பீர்மேடு பகுதியில் கைது செய்த போலீசார், அவரை பெரம்பலூருக்கு கொண்டு வருவதாகக் கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை: