புதன், 23 மே, 2012

பெண்ணுடன் தனிமையில்... 32 வயது துறவி கைது!

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் மாவடி கிராமத்தில் உள்ள பிரபல சுவாமிநாராயண் குருகுலத்தில், ஒரு பெண்ணுடன் பூட்டிய அறைக்குள் இருந்த 32 வயது துறவியை போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.
இந்த குருகுலத்தை ஆனந்த் சொரூப்தாஸ் என்ற அந்த துறவிதான் நடத்தி வருகிறார். நேற்று இரவு ஆனந்த் சொரூப்தாஸ் ஒரு இளம் பெண்ணுடன் தனது அறையில் தனிமையில் இருப்பதாக மாள்வியா நகர் காவல் நிலையத்திற்கு ரமேஷ் பாய் என்பவர் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர்.

சாமியாரின் கதவைத் தட்டி திறக்கச் செய்தனர். அப்போது உள்ளேயிருந்து தாஸும், 26 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணும் வெளியே வந்தனர். இருவரையும் போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றபோது குருகுலத்து மாணவர்களும், சீடர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து சாமியாரையும், அந்தப் பெண்ணையும் சரமாரியாகஅடித்து உதைத்தனர்.
சம்பந்தப்பட்ட பெண் கம்ப்யூட்டர் ஆசிரியையாம். குருகுலத்தில் பணியாற்றி வருகிறார். இருவரையும் கைது செய்த போலீஸார், குருகுலத்தில் பியூனாக பணியாற்றி வரும் ஜிதேந்திர தொபாரியா என்பவரையும் கைது செய்தனர்.

சாமியார் மற்றும் மற்ற இருவர் மீதும் மக்களின் மத நம்பிக்கையை பாதித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்வாமிநாராயண் பிரிவு என்ற மதப் பிரிவைச் சேர்ந்தவர் இந்த தாஸ். இந்த மதப் பிரிவின் விதிப்படி பெண்களின் முகத்தை சாமியார்கள் நேருக்கு நேர் பார்க்கக் கூடாதாம். மேலும் பெண்களை தனிமையிலும் சந்திக்கக் கூடாதாம். ஆனால் அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டார் ஆனந்த் ஸ்வரூப்தாஸ் என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: