சனி, 9 ஏப்ரல், 2011

சாயிபாபாவின் உடல்நிலை

புட்டபர்த்தி: பகவான் சத்யசாயி பாபாவுக்கு செயற்கைச் சுவாசமளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அவரின் வாரிசு தொடர்பாக பல்வேறு ஊகங்கள் சில
வருடங்களாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் பிரசாந்தி நிலையத்தையும் அதன் செயற்பாடுகளையும் வழிநடத்துவதற்கான வாரிசு இதுவரை இல்லையென வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நான்கு வருடங்களுக்கு முன்னர் சாய்பாபா சுகவீனமடைந்ததைத் தொடர்ந்து இந்த சர்வதேச ஆன்மீக நிலையத்தின் எதிர்காலம் பற்றிப் பல கேள்விகள் எழுந்திருந்தன. நாட்டின் இரண்டாவது சீரடியாகவும் பாரிய ஆன்மீக நிலையமாகவும் புட்டபர்த்தி தொடர்ந்தும் செயற்படுமென ஆச்சிரம வட்டாரங்கள் தெரிவித்ததாக ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை நேற்று குறிப்பிட்டுள்ளது.

1963 ஜூலை 06 குருபூர்ணிமா தினத்தில் சாயிபாபா தனது ஆன்மீகக் கண்டுபிடிப்பின் பின்னணியிலுள்ள இரகசியத்தை வெளிப்படுத்தியிருந்தார். சிவன்சக்தி கோட்பாட்டின் முப்பரிமாண ஜனனமாக சாயி அவதாரத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். சீரடி சாயிபாபா, சிவா, பார்வதி ஆகியவையே ஸ்ரீசத்யசாயி பாபா எனவும் சக்திக் கோட்பாடானது கர்நாடக மாநிலத்திலுள்ள மண்டியா மாவட்டத்தின் பிரேமசாயாக அவதரித்திருப்பதாகவும் கருதப்பட்டது.

தனது சிறுபராயத்திலும் புனிதர் சீரடி பற்றி சாயிபாபா குறிப்பிட்டிருந்தார். தான் எழுதிய பாடல்களில் இதனைப் பற்றி அவர் எழுதியுள்ளார். சீரடி சாயிபாபா 1918 இல் தான் மரணமடைவதற்கு முன்னர் தனது மரணத்தைப் பற்றி அறிவித்திருந்தார். எட்டு வருடங்களில் சென்னை மாகாணத்தில் மீளத் தோன்றுவாரென அவர் அறிவித்திருந்தார். சத்யசாயி பாபா 1926 இல் பிறந்தார். பின்னர் தான் சீரடி பாபாவாக இருந்ததாக அவர் அறிவித்திருந்தார்.

தன்னைப் பற்றி அவர் பேசும்போதெல்லாம் தனது முன்னைய உடல் சீரடி பாபாவாக இருந்ததாக சத்யசாயி பாபா கூறியுள்ளார். ஆனால், மண்டியா மாவட்டத்தில் பிரேமசாயின் மற்றொரு அவதாரத்தை தான் எடுப்பாரென சாயிபாபா அறிவித்திருந்தும் இதுவரை அவரின் அந்த வாரிசு பற்றித் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு வாரிசு பற்றி அறிவிப்பதற்கான எந்தவொரு திட்டத்தையும் சாயி மத்திய நம்பிக்கையகம் கைவிட்டுள்ளதாக ஆச்சிரம வட்டாரங்கள் கூறியுள்ளன.

சாயிபாபாவின் உடல்நிலை மோசமடைந்துவரும் நிலையில், அவரின் சகோதரர் ஜானகிராமனின் மகனும் நம்பிக்கையக உறுப்பினருமான ஜே.ரெட்ணாகருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாயி நம்பிக்கையகத்தை மிகவும் சக்தி வாய்ந்ததாக உருவாக்கியவர்களில் ஒருவராக சாயி பாபா குடும்பத்தைச் சேர்ந்த ரெட்ணாகர் விளங்குகிறார். சில மாதங்களுக்கு முன்னர் வீதி விபத்தில் அவரும் காயமடைந்துள்ளார்.

கருத்துகள் இல்லை: