நக்கீரன் - து. ராஜா : தமிழ்நாடு தலைகுனியாது" என்ற தலைப்பில் திமுக சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் துவங்கும் காலம் இது. மாற்றத்திற்கான காலம் இது.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பல மாற்றங்களை உலகம் சந்தித்துள்ளது
இப்போதும் பல இடங்களில் போர் நடந்து வருகிறது.
பல நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் நமக்கு ஒரு சிறந்த தலைவர் தேவை. இந்தியாவில் தற்போது உள்ள ஒன்றிய அரசு வாய்ப்புகளை முறையாக பயன்படுத்துவதில்லை. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வளரவில்லை.
மனித நேயம் தான் அரசியல்வாதிக்கு முதல் அழகு. மனித நேயமும், நல்ல எண்ணமும் இருந்தால் மட்டும் போதாது, சூழ்நிலைக்கு ஏற்ப எங்கே நிதியை கொடுக்க வேண்டும் எங்கே எவ்வளவு வழங்க வேண்டும் என்ற டேட்டா இருக்க வேண்டும், அடுத்து செயல் திட்டம் இருக்க வேண்டும். நள்ளிரவில் எடுத்த முடிவிற்கு மூன்று மணி நேரத்தில் 6700 கோடி ரூபாயை ஒரு கோடியே 33 லட்சம் மகளிருக்கு கொண்டு போய் சேர்த்த செயல் திட்டத்தைக் கொண்டது அரசு திமுக. தமிழ்நாட்டில் இன்றைக்கு உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை நாற்பத்தி ஏழு புள்ளி மூன்று சதவிகிதமாக உள்ளது இது நாட்டில் எங்கும் கிடையாது. இந்திய மக்கள் தொகையில் ஆறு சதவிகிதத்திற்கும் கீழ் உள்ள தமிழகத்தில் பெண்கள் மட்டுமே 43 சதவிகிதம் உற்பத்தி தொழிலில் செய்வது தமிழ்நாட்டில் மட்டும் இருக்கிறார்கள் என்றால் அதற்கு சிறப்பு வேறு எதுவும் கிடையாது.
தமிழ்நாட்டில் இந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு துறையிலும் 5 சிறப்பான திட்டங்களை என்னால் கூற முடியும். ஒருவரையும் விடாமல் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு மாதிரியோ வட மாநிலங்களில் உள்ளது போன்ற கட்சிகளைப் போன்று ஐந்து ஆண்டு ஆட்சியில் இருந்துவிட்டு தேர்தல் சமயத்தில் அவன் கெட்டவன், அவன் நல்லவன் இல்லை என பழி போடும் அரசு நம்முடைய அரசு அல்ல. இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில் நம் அடையாளத்தையும், நம் இனத்தோட தனித்துவத்தையும் பல வகையில் ஒன்றிய அரசாங்கம் பாதிப்பு உருவாக்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. எல்லா வகையிலும் நமக்கு வர வேண்டிய நிதியை குறைத்தது நமக்கு வழங்க வேண்டிய உதவியை கொடுக்காமல் இருப்பது, கோவை, மதுரை மெட்ரோவிற்கு அனுமதி வழங்காமல் இருப்பது, நீட் என்ற கொடூரமான தேர்வை கட்டாயப்படுத்தி தொடர வைப்பது.
உலகத்திலேயே தனிப்பட்ட தன்மை உள்ள தேர்வு ஒன்று என்றால் அது நீட் தேர்வு தான். நீட் தேர்வின் கட்ஆப் என்றால் 100 க்கு 2 மார்க், இப்படிப்பட்ட சட்டத்திற்கு புறம்பாக கிறுக்குத்தனமான தேர்வை உங்களது (வடமாநில) மாணவர்கள் தேவைக்காக வைத்துக் கொண்டால் அது எப்படி? கவர்னர் என்ற ஒருவரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர் எதைக் கொடுத்தாலும் கையெழுத்து போட மாட்டேன் என்கிறார் கேட்டால் புரியவில்லை என்கிறார். உங்களுக்கு புரிந்தால் என்ன புரியாவிட்டால் என்ன கையெழுத்து போட வேண்டியது அவரது கடமை. நிதியை வைத்து அரசியல் செய்யும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது.
2020ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு தமிழ்நாட்டோட ஒப்பிடும் போது ஒரு ரூபாய்க்கு நான்கு ரூபாய் வழங்கினார்கள். இத்தகைய சூழலில் இவர்களுடைய தடைகளை எல்லாம் தாண்டி இந்தியாவில் எந்த மாநிலமும் எட்டாத வளர்ச்சி 11.11 சதவிகிதத்தை தமிழ்நாடு எட்டியுள்ளது. இது தமிழ்நாட்டிலேயே 13 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி.இந்தியாவிலேயே ஏற்றுமதி செய்வதற்கு தகுதியான முதல் மாநிலமாக ஒன்றிய அரசு பட்டியலிலேயே தமிழ்நாடு உள்ளது.இவ்வளவு செய்தும் புதியதாக இரண்டு குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் ஒன்று கடன் மிகவும் அதிகமாக இருக்கிறது, இரண்டாவது ஊழல் பரவலாக இருக்கிறது என்கிறார்கள்.
நான் சொல்கிறேன் ஆமாம் கடன் அதிகரித்து இருக்கிறது ஆனால் அதனை ஒப்பிட்டு பார்க்கும்போது உற்பத்தி சதவிகிதம் எவ்வளவு அதிகரிக்கிறது. அப்படி பார்த்தால் நாம் ஆட்சிக்கு வந்து பார்த்தால் கடன் அதிகரிக்கவில்லை குறைந்து தான் உள்ளது. 2014 இல் உற்பத்தியில் கடன் வெறும் 16 சதவிகிதம் தான். 7 ஆண்டில் 26 சதவிகிதம் கடனாக உயர்த்தியது அதிமுக அரசு. அதை நாம் குறைதீர்க்க முடியும் ஆனால் இவ்வளவு நல திட்டங்களை செய்திருக்க முடியாது. தென் மாநிலங்கள் சிறப்பாக வளர காரணம் ஊழல் செய்வதுதான் என மத்திய அரசு செல்கிறது. இதற்கு காரணம் நீதி கட்சியில் அனைவருக்கும் சம உரிமை பெண்களுக்கு முன்னுரிமை என அப்போது வகுத்தது தான் இன்று தென்னிந்திய வளர காரணம். அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் எத்தனையோ வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
ஆகையால் ஒரு அரசுக்கு திட்டம் தீட்டுவது நிதி, மேலாண்மை செய்வது, மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோன்று சுயமரியாதை சமூகநீதி கொள்கைகளை தொடர்ந்து பாதுகாத்து ஆதிக்கவாதிகள், அவர்களின் அடிமைகள் இதை மாற்ற முயற்சி செய்யும்போது அதை தடுத்து நிறுத்தி அதனால் என்றைக்குமே தமிழ்நாடு தலைக்கு முடியாது என்று கூறுகிறோம். நீங்கள் எத்தனை முயற்சி எடுத்தாலும் நாங்கள் தலைகுனிய மாட்டோம். இந்த முயற்சியை நாம் எடுக்க காரணம், சும்மா தேர்தல் வெற்றிக்காகவோ, அரசியலுக்காகவோ அல்ல நமது சிறப்பான முன்னேற்றம் தொடரும் என்பதற்காகவே நமது முதலமைச்சர் இத்தகைய பரப்புரைகளை செய்யக் கூறி இருக்கிறார். தமிழ்நாடு என்றைக்கும் போராடும் எப்போதும் வெல்லும்” என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக