வியாழன், 4 ஜனவரி, 2024

ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி Y.S ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

மின்னம்பலம் - Selvam :  காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி தலைவருமான ஷர்மிளா இன்று (ஜனவரி 4)  காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை ஷர்மிளா நிறுவினார். கடந்த ஒரு வருடமாக ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இதனையடுத்து கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா ஆதரவு அளித்தது. இந்தநிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி எம்.பி ஆகியோர் முன்னிலையில், காங்கிரஸ் கட்சியில் ஷர்மிளா இன்று இணைந்தார்.

பின்னர் அவர் பேசும்போது, “காங்கிரஸ் கட்சியானது நம் நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சியாகும், அது எப்போதும் இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நிலைநிறுத்தி, நமது தேசத்தின் அடித்தளத்தை கட்டியெழுப்புகிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்

கருத்துகள் இல்லை: