வியாழன், 4 ஜனவரி, 2024

இலங்கையில் மதபோதனை கூடத்தில் 7 பேர் தற்கொலை

 hirunews.lk :  மதபோதனையில் பங்கேற்ற 7 பேர் உயிர் மாய்ப்பு - வெளியான முக்கிய செய்தி!
மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட 6 பேர் தங்களது உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய, உயிரிழந்த   மதப் போதகரான பிரசன்ன குணரத்ன என்பவரின் பிள்ளைகள் இருவரும் கடந்த ஒன்றரை வருடங்களாக பாடசாலைக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த குறித்த மதப் போதகர் நாட்டின் பல பகுதிகளில் நடத்திய போதனை செயற்பாடுகளுக்காக அவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தமையால் பாடசாலைக்கு செல்லவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரும் அவர் நடத்திய மதப் போதனை நிகழ்வில் பங்கேற்ற 6 பேரும் இதுவரையில் தங்களது உயிரை மாய்த்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பாகமுவ பகுதியிலுள்ள 32 வயதான தேரர் ஒருவரும் நாவல பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் அவர்களில் அடங்குகின்றனர்.

இதுதவிர, குறித்த மதப்போதனை பங்கேற்று பின்னர் நஞ்சு அருந்தி உயிரிழந்த யக்கல – ராபல்வத்தை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியின் சகோதரரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

நாவலை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர், குறித்த மதப் போதகருக்கு 60 லட்சம் ரூபாய் பணம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொட்டாவை பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து குறித்த மதப் போதகரின் சடலம் மீட்கப்பட்டதுடன் அதற்கு சில தினங்களுக்கு பின்னர் அவரது மனைவி மற்றும் 3 பிள்ளைகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.

கருத்துகள் இல்லை: