திங்கள், 1 ஜனவரி, 2024

ஜப்பானில் நிலநடுக்கம், 16 அடி உயரம் எழுந்த சுனாமி - என்ன நடக்கிறது?

BBC News தமிழ் :  ஜப்பானைத் தொடர்ந்து தென் கொரியாவையும் தாக்கிய சுனாமி அலைகள் - என்ன நடக்கிறது?
நோட்டோ உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதியில் தீவிர சுனாமி எச்சரிக்கை முன்னதாக விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதனை ‘சுனாமி எச்சரிக்கை’ என ஜப்பான் அரசு தளர்த்தியுள்ளது.
நீகாட்டா மற்றும் டோயாமா போன்ற நகரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இஷிகாவா நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 32,500 வீடுகளில் மின் தடை ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோளிட்டு கியோடோ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இங்குள்ள பல வீடுகள் நிலநடுக்கத்தால் இடிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


இதனிடையே தென்கொரியாவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியிலும் சிறியளவில் சுனாமி அலைகள் எழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

43 செமீ (1.4 அடி) உயரம் கொண்ட சுனாமி அலை கிழக்கு மாகாணமான கேங்வோனை அடைந்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறுகிறது.

கடல் மட்டம் உயரும் என்ற அச்சத்தின் காரணமாக உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு முன்னதாக அதிகாரிகள் இந்த மாகாணத்தில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

முன்னதாக, ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் மத்திய கடற்கரை பிராந்தியமான இஷிகவாவை மையமாக கொண்டு 7.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

"இந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும்" என்று என்.எச்.கே. என்ற ஜப்பானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் நோட்டோ பகுதியின் கடற்கரை பகுதியில் உள்ள மக்களை "உயரமான பகுதிகளுக்கு உடனடியாக செல்லுமாறு" இஷிகவா அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

5 மீட்டர் (சுமார் 16 அடி) உயரமுள்ள அலைகள் நோட்டோ பகுதியை நோக்கி வந்துள்ளதாக ஜப்பானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

நோட்டோ பகுதிக்கு அருகிலுள்ள நீகாட்டா, டோயாமா உள்ளூர் நிர்வாகமும் சுனாமி எச்சரிக்கையை மக்களுக்கு விடுத்துள்ளது. இந்த பகுதிகளில் 3 மீட்டர் உயரமுள்ள அலைகள் வரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

'காலி செய்யுங்கள்' என்ற வாசகம் ஜப்பானின் அரசு தொலைக்காட்சியில் பெரிய வடிவில் தோன்றி மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய எச்சரிக்கை

ஜப்பானின் மேற்கு கடலோர பகுதியில் அமைந்திருக்கும் இஷிகவா, நீகாட்டா, டோயாமா, நகானோ ஆகிய பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசின் செய்தித்தொடர்பாளரான யோசிமாஷா ஹயாஷி, உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் மேலும் நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளதாகவும், மக்கள் அதற்கேற்றார் போல் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்

உள்ளூர் நேரப்படி மாலைக்கு பிறகு கடந்த 5 மணி நேரத்தில் மத்திய ஜப்பானின் இந்த பகுதிகளில் 50 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக 7.6 என்ற அளவில் ரிக்டர் ஸ்கேலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அணு உலைகளுக்கு பாதிப்பா?
நிலநடுக்கம் ஏற்பட்டதையும், சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளதையும் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

ஜப்பான் அணு உலை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தை அதிகாரிகள், நிலநடுக்கத்தால் அணு உலையிலிருந்து எவ்வித அணுக் கதிர்வீச்சும் கசியவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஜப்பானின் மிகப்பெரிய அணு உலை மின்சார தயாரிப்பாளரான கன்சாய் எலெக்ட்ரிக் நிறுவனம், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருக்கும் அணுஉலைகளில் 'அசாதாரண நிலை ஏதுமில்லை' என்று விளக்கமளித்துள்ளது.

முன்னதாக 2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து அணு உலைகள் பாதிக்கப்பட்டன. இந்த அணு உலை விபத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

ஜப்பான் சுனாமி

பட மூலாதாரம், Reuters
ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி

பட மூலாதாரம், EPA

சுனாமியால் என்ன பாதிப்பு?

நிலநடுக்கம் மற்றும் சுனாமியைடுத்து இஷிகவா பகுதியிலிருந்து டோக்கியோ நகரத்திற்கு இயக்கப்படும் புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ஜப்பான் ரயில்வே அறிவித்துள்ளது.

இஷிகவா பகுதியிலுள்ள சூசு நகரத்தில் நிலநடுக்கத்தால் பல வீடுகள் மற்றும் மின்சார கம்பங்கள் ஆகியவை முற்றிலும் இடிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இஷிகவா பிராந்தியத்தில் 36,000 வீடுகளுக்கு மின் விநியோகம் தடைபட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை சுட்டிக் காட்டி கியோடோ நியூஸ் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளியான இஷிகவாவிற்கு செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.


நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்காக, ஜப்பானிலுள்ள இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. இந்தியர்களுக்கு உதவுவதற்காக கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தலை கேட்டு நடந்து கொள்ளுமாறும், உதவி தேவைப்படும் இந்தியர்கள் தூதரகத்தால் கொடுக்கப்பட்டுள்ள தொலை பேசி எண் மற்றும் இமெயில் முகவரியை தொடர்பு கொள்ளுமாறு ஜப்பானிலுள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை: