புதன், 16 நவம்பர், 2022

ஓசூரில் IPhone தொழிற்சாலை.. 53000 பேருக்கு வேலைவாய்ப்பு - இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

 கலைஞர் செய்திகள் - லெனின் : தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகப்பெரிய i phone தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்பட உள்ளது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆட்சிக்கு வந்த 15 மாதத்திலேயே தமிழ்நாடு அரசு நடத்திய முதலீட்டு மாநாடுகள் மூலமாக 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.


அது மட்டுமல்லாது தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்று 4 தொழிலதிபர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு பல முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இப்படி வெளிநாடுகள் வரை சென்று தமிழ்நாட்டிற்கு புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவருவதற்கு தி.மு.க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்பட உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை சீனாவில் மூடப்படும் நிலையில் இந்தியாவில் புதிய ஆலை தொடங்கப்படுகிறது. இந்தியாவில் ஐ-போன் தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தனது உற்பத்தியை 2 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.!

மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 53,000 பேரை பணிக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது. ஃபாக்ஸ்கான், ஃபெகட்ரான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் புதிய ஐ-போன்களை தயாரித்து வருகின்றனர். ஓசூரில் அமையவுள்ள புதிய ஆலையில் 3 மாதங்களில் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: