வெள்ளி, 18 நவம்பர், 2022

அரசு மருத்துவ கல்லூரிகளில் சிறப்பு படிப்புகளுக்கான 50 சதவீத ஒதுக்கீடு நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்...

 மாலை மலர்  ; தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் சிறப்பு படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு,
2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,
2021-22-ம் கல்வியாண்டுக்கு 50 சதவீத இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்த அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், நடப்பு 2022-23-ம் கல்வியாண்டுக்கு மொத்தமுள்ள 100 சதவீத இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்துவது குறித்து மத்திய அரசின் பொது சுகாதார பணிகள் தலைமை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அரசு மருத்துவர்கள் ஸ்ரீஹரி பிரசாந்த் உள்பட இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தமிழக அரசு 2020-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கி, கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரி அவர்கள் மனுவில் கோரியிருந்தனர்.



இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 2021-22-ம் ஆண்டுக்கு மட்டும் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளதாகவும், அடுத்த கல்வியாண்டுகளுக்கு நீட்டிக்கவில்லை எனவும் கூறி, மத்திய அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வக்கீல் சண்முகசுந்தரம் தமிழக அரசின் அரசாணைக்கு, உச்சநீதிமன்றம் தடை விதிக்காததால் கந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் விளக்கம் பெற அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார், கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு அனுமதியளித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நடப்பு கல்வியாண்டுக்கு பொருந்துமா என்பதை உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தார். இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசோ, மனுதாரரோ விளக்கம் பெற 10 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். அதுவரை தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50 சதவீத இடங்களை விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்தார்.

கருத்துகள் இல்லை: