வெள்ளி, 26 மார்ச், 2021

ஆசியாவின் மிக பெரிய தேர் ஊர்வலம் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழித்தேரோட்ட விழா

dailythanthi.com : திருவாரூர்,  தமிழகத்தில் மரத்தால் மிகப்பெரிய அளவில் தேர்களை அழகுற அமைத்து அதன் மீது தெய்வ திருவுருவங்களை வைத்து வீதிகளில் பவனி வரச்செய்து பெருவிழாவாக எடுக்கும் மரபு தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
சோழ மன்னர்களும், அவர்களுக்கு பிறகு விஜயநகர அரசர்களும் பல தேர்களை செய்து அளித்ததற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன.
இவ்வாறு சிறப்பு வாய்ந்த தேர்களில் ஒன்று திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர்.
திருவாரூரில் பழங்காலத்தில் இருந்து ஆழித்தேரோட்டம் நடைபெற்றதற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன.
கி.பி. 1748-ம் ஆண்டு கிடைத்த ஆவணத்தின் மூலம் தொடர்ந்து 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் தேர்திருவிழா நடைபெற்ற செய்திகளை அறிய முடிகிறது.

 இவ்வாறு உலாவந்த தேர், 1926-ம்ஆண்டு நடைபெற்ற தேரோட்டத்தின் போது ஏற்பட்ட தீவிபத்தில் முற்றிலும் எரிந்தது. பின்னர் தியாகராஜ பெருமான் தொண்டர்கள் அனைவரும் ஒன்று கூடி 1928-ம் ஆண்டு புதிய தேர் செய்ய முடிவு செய்து பொருளுதவி ஈட்டினர். இதையடுத்து 1928-ம் ஆண்டு புதிய தேர் கட்டுமான பணி தொடங்கி 1930-ம் ஆண்டு முடிந்தது.

பின்னர் 2-3-1930-ம் அன்று புதிய தேர் ஓடியது. திருவாரூர் தேருக்குரிய தனித்த சிறப்பு வடிவமைப்பிலேயே இந்த தேரும் உருவாக்கப்பட்டது. மரத்தேர் உயரம் 96 அடி, எடை 220 டன், இதனுடன் பனஞ்சப்பைகள் 5 டன், மூங்கில் 50 டன், சவுக்குமரம் 10 டன், கயிறு 1 டன், துணிகள் ½ டன், குதிரை, யாளி, பிரம்மா அலங்கார பொம்மைகள், ‘ஹைட்ராலிக் பிரேக்’ என அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் மொத்த எடை 350 டன் எடையுடன் கூடிய திருவாரூர் ஆழித்தேர் காண்போரை வியக்க வைக்கிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட ஆழித்தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. 

பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப் புகழ் பெற்றதாகும். அந்த வகையில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி முக்கிய வீதிகளில் ஆழித்தேர் இன்று பவனி வருகிறது. இந்த தேரோட்டத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு தியாகராஜ பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை: