திங்கள், 6 ஏப்ரல், 2020

லாரிகளுக்கு நெருக்கடி: மளிகை பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

லாரிகளுக்கு நெருக்கடி: மளிகை பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!minnambalm : ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிசெல்லும் வாகனங்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை லாரிகளில் கொண்டு செல்லலாம் என மார்ச் 29ஆம் தேதி உள் துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. இருந்தபோதிலும், சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான மற்ற இடங்களில் பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் செல்வது சவாலான ஒன்றாகவே உள்ளது. சோதனைச் சாவடிகளில் சோதனைகளில் ஈடுபடும் போலீசார் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வாகனங்களையும், உள் மாநிலத்திற்கு சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் தடுக்கிறார்கள்
 ஒடிஷா, குஜராத், மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்கள் பொருட்கள் ஏற்றிசெல்லும் வாகனங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளன. ஆனாலும், சில மாநிலங்களில் உள்ள காவல் துறையினர் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைக் கூட நிறுத்திவிடுகிறார்கள்” என்று அகில இந்திய போக்குவரத்து நலச் சங்கத்தின் தலைவர் பிரதீப் சிங்கல் குற்றம்சாட்டுகிறார்.

வணிக வாகனங்கள் மற்றும் லாரிகளின் இயக்கத்தை காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் எளிதாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைக்கிறார்.
நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் செல்லும் அங்கீகாரம் கொண்ட லாரிகள் இந்தியாவில் 1.2 கோடி எண்ணிக்கையில் உள்ளன. வழக்கமாக தற்போது இதில் 10 சதவிகிதம், அதாவது 1,20,000 லாரிகள் மட்டுமே சாலைகளில் இயக்கப்படுகின்றன. அதே நேரத்தில் 4,00,000-5,00,000 வரையிலான லாரிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களை மூடியதும், ஓட்டுனர்கள் லாரியை சாலைகளில் நிறுத்திவிடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
லாரிகளை போலீசார் கையாளும் முறை பற்றி செய்திகள், பொருட்களை ஏற்றுவது, இறக்குவது, விநியோகம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கான தொழிலாளர் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. இதனால் மளிகை பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே, வாகனங்கள் விரைவில் பொருட்களை கொண்டுசெல்வதை உறுதிப்படுத்த அகில இந்திய போக்குவரத்து நலச்சங்கம் சில குறுகிய கால நடவடிக்கைகளையும் பரிந்துரைத்துள்ளது.
வணிக வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமங்களை, அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் லாரிகளின் இயக்கத்திற்கான இ-பாஸாக அரசு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்ததோடு, “பொது சுகாதார ஊழியர்கள் வரிசையில் லாரி ஓட்டுநர்கள், லோடு மேன்கள், கிளீனர்கள், கிடங்கு மேலாளர்கள் மற்றும் கணினி ஆபரேட்டர்களுக்கும் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.
ஓட்டுநர்கள் தங்கள் லாரிகளுடன் திரும்பி நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியாகினால் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 200 கி.மீ தூரத்திலும் அரசாங்கம் தபாக்களை மீண்டும் திறக்க வேண்டும், அதன்மூலம் ஓட்டுனர்கள் தங்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
எழில்

கருத்துகள் இல்லை: